பிரதமர் அலுவலகம்
மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமருடன் இணைந்து பங்கேற்பு
प्रविष्टि तिथि:
09 JUL 2026 12:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸுடன், மெல்பெர்னில் இன்று (2026 ஜூலை 9), மூன்றாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அரசு மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அல்பானீஸ் சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
இரு பிரதமர்களும் நேரடி கலந்துரையாடல்களை நடத்தியதைத் தொடர்ந்து, தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் ஆறு ஆண்டுகால வெற்றிகரமான நிறைவை அவர்கள் வரவேற்றனர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களிலும் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். மேலும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், இணையம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், விண்வெளி, அணுசக்தி, தூய்மை எரிசக்தி, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இரு பிரதமர்களும் விரிவடைந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பைக் குறிப்பிட்டதோடு, லட்சியமிக்க, சமநிலையான, பரஸ்பரம் நன்மை பயக்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். ஆஸ்திரேலியா-இந்தியா தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றத்தின் முடிவுகளையும், பொருளாதார வணிக செயல்திட்ட நிகழ்வின் கலந்துரையாடல்களையும் அவர்கள் வரவேற்றனர். மேலும், இரு நாடுகளின் வணிக நிறுவனங்களும் முன்னுரிமைத் துறைகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு அவர்கள் ஊக்குவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர். இச்சூழலில், இந்தியாவில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் அதிகரித்து வரும் செயல்பாடுகளையும், எதிர்காலத்திற்குத் தயாரான பணியாளர்களை உருவாக்குவதற்கும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும், மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் கல்விசார் ஒத்துழைப்பின் பங்களிப்பை அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியப் சமூகத்தினர், ஆஸ்திரேலிய சமூகத்திற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையே அவர்கள் ஒரு பாலமாகச் செயல்படுவதற்காகவும் தலைவர்கள் அவர்களைப் பாராட்டினர். பரஸ்பரப் புரிதலைத் தொடர்ந்து ஆழப்படுத்தும் வகையிலான கலாச்சாரப் பரிமாற்றங்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஆஸ்திரேலிய நிறுவனங்களிடம் உள்ள பல இந்தியக் கலாச்சாரப் பொருள்கள் தாமாக முன்வந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதையும் அவர்கள் வரவேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த புனித நந்தியின் கல் சிற்பம், பத்ரகாளி உருவம் பொறிக்கப்பட்ட உலோகத் திரிசூலம், ஆறு தலைகள் கொண்ட கார்த்திகேயக் கல் சிலை ஆகிய பொருள்கள் உரிய நேரத்தில் இந்தியாவிற்குத் திருப்பிக் கொண்டு செல்லப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இரு பிரதமர்களும், பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். மேலும், அவர்கள் பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, சுதந்திரமான, வெளிப்படையான, செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் கருத்துகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தப் பயணத்தின்போது, இரு தரப்பினரும் கடல்சார் பாதுகாப்பு, அணுசக்தி, திறன் மேம்பாடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அறிவியல், தொழில்நுட்பம், திரைப்படத் தயாரிப்பு ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் குறித்த விவரங்களை இந்த இணையதள இணைப்பில் காணலாம் : https://www.mea.gov.in/bilateral-documents?dtl/41431
தமக்கும் தமது இந்திய தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அல்பானீஸுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282736®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2283007)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam