பிரதமர் அலுவலகம்
நவி மும்பையில் நடைபெற்ற ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350-வது ஷாஹீதி சமகம் எனப்படும் தியாக தின நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
01 MAR 2026 7:58PM by PIB Chennai
வணக்கம்! ஸ்ரீ குரு தேக் பகதூர் சாஹிப் ஜி-யின் 350-வது தியாக தின நினைவு நாளில், நாம் அனைவரும் அவரை பக்தியுடன் நினைவு கூர்கிறோம். இந்த சபையில் உள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, புனிதமான நிகழ்வில் பங்கேற்க முடிந்தது எனக்கு அதிர்ஷ்டம்.
நண்பர்களே,
இந்தியாவின் வரலாறு என்பது துணிச்சல், ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் வரலாறாகும். மகாராஷ்டிரா நிலத்தில் நடைபெறும் இந்த நிகழ்வின் மூலம், அதே மகத்தான பாரம்பரியத்திற்கு நாம் சாட்சிகளாக இருந்து வருகிறோம். நமது குருமார்கள், தியாகத்தின் உச்சக்கட்ட வரம்பில் இருந்தபோது, அந்த நேரத்தில், நமது சமூக ஒற்றுமை மிகப் பெரிய பங்காற்றியது. ஒவ்வொரு பிரிவையும், ஒவ்வொரு சமூகத்தையும் சேர்ந்த மக்களும் நமது குரு மார்களிடமிருந்து உத்வேகம் பெற்றனர். அனைத்து சூழ்நிலைகளிலும் உண்மைக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப உறுதியாக இருக்க சமூகம் கற்றுக்கொண்டது. சமூக ஒற்றுமையின் அந்த மகத்தான தியாகத்தில், ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி-யின் குருநானக் நம்லேவா சங்கத் போன்ற சடங்குகள் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தன. இப்போது, நாட்டிற்கு மீண்டும் சமூக ஒற்றுமை மிகவும் தேவைப்படும்போது, இந்த அற்புதமான அமைப்பு நமது குருமார்கள், புனிதர்கள் ஆகியோரின் ஆசீர்வாதங்கள் நம்முடன் உள்ளன என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.
நண்பர்களே,
இந்த நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வரும் ஒரு யாகம் போன்றது. இந்தப் பயணத்தின் ஆரம்பம் கடந்த ஆண்டு நாக்பூரின் புனித பூமியிலிருந்து நடைபெற்றது. பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க நான்டெட் தக்த் ஸ்ரீ ஹசூர் சாஹிப்பில், அந்த உணர்வு மேலும் ஆழமடைவதை நாம் அனைவரும் கண்டோம். இப்போது நவி மும்பையில், இந்தப் பயணம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் பயணத்தின் செய்தி இந்த மூன்று நகரங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மகாராஷ்டிராவின் ஒவ்வொரு மூலையிலும், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கும் சிறிய குடியிருப்புகளுக்கும், ஸ்ரீ குரு தேக் பகதூர் சாஹிப் ஜியின் அந்த வீர வரலாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக மகாராஷ்டிரா அரசை நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
ஸ்ரீ குரு தேக் பகதூர் சாஹிப் ஜியின் இந்த மகத்தான தியாகத்தின் நினைவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறிது நேரத்திற்கு முன்பு, ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வில், நான் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. மத்திய அரசு நமது குரு சாஹிப்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு வரலாற்று நிகழ்வையும் தேசிய அளவில் கொண்டாடுகிறது. நீங்கள் அனைவரும் அறிந்தபடி, ஸ்ரீ குரு தேக் பகதூர் சாஹிப் ஜியின் 400-வது பிரகாஷ் பராப் எனப்படும் பிறந்த ஆண்டு நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜிக்கு நினைவு அஞ்சல் தலை, சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. குரு நானக் தேவ் ஜியின் 550-வது பிரகாஷ் பராப் உட்பட நமது குருமார்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு நிகழ்வையும் முழுமையான பக்தி உணர்வுடன் கொண்டாடியுள்ளோம். சாஹிப்சாதாக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வீர பாலகர் தினத்தைக் கொண்டாடும் தேசிய பாரம்பரியத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம்.
நண்பர்களே,
கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் கட்டுமானத்தை சாதனை அளவில் குறைந்த காலத்தில் முடித்து இருக்கிறோம். ஸ்ரீ ஹேம்குண்ட் சாஹிப் யாத்திரைக்கான புதிய வசதிகளை நிர்மாணித்தல், சீக்கிய அமைப்புகள், குருத்வாராக்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கு எஃப்சிஆர்ஏ-வில் நிவாரணம் வழங்குதல், பாடத்திட்டத்திலும் கலாச்சார நிகழ்வுகளிலும் சீக்கிய வரலாற்றுக்கு இடம் அளித்தல் என இதுபோன்ற பல நடவடிக்கைகளுக்காக நமது சீக்கிய சகோதர சகோதரிகள் பல ஆண்டுகளாகக் காத்திருந்தனர். அவற்றை நிறைவேற்றும் பாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது.
சகோதர சகோதரிகளே,
சீக்கியர்களுக்கு மரியாதையையும் நீதியும் வழங்குவதில் எங்கள் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்த உறுதிப்பாட்டின் காரணமாக, 1984-ம் ஆண்டு கலவரங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தோம். முடிக்கப்பட்ட 1984 கலவர வழக்குகளை மீண்டும் தொடர்ந்தோம். பல வழக்குகளில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 1984-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்திற்கு மிகவும் முக்கியப்பங்கு வழங்கப்பட்டது. அதேபோல், ஆப்கானிஸ்தானில் சீக்கிய சகோதரர்களின் பாதுகாப்பு, குரு கிரந்த் சாஹிப்பிற்கான மரியாதை ஆகியவை குறித்த கேள்வி எழுந்தபோது, எங்கள் அரசு தீவிரமான முறையில் செயல்பட்டது. குரு கிரந்த் சாஹிப்பின் படைப்புகளை நாங்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் மீண்டும் கொண்டு வந்தோம். ஆப்கானிஸ்தான் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான வழியை நாங்கள் தெளிவுபடுத்தினோம். துன்புறுத்தப்பட்ட சீக்கிய அகதிகளுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கினோம். ஜம்மு கஷ்மீரின் சீக்கிய குடும்பங்களுக்கு மறுவாழ்வு தொகுப்புகளும் செயல்படுத்தப்பட்டன. இதேபோல், ஓசிஐ, விசா விதிகள் எளிமைப்படுத்தப்பட்டன. கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. வெளிநாடுகளில் உள்ள சீக்கியர்கள் இந்தியாவிற்கு வந்து செல்லும் செயல்முறை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது.
நண்பர்களே,
சீக்கிய சமூகத்தின் நம்பிக்கைக்கு மரியாதை அளித்தல், அவர்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எங்கள் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். இந்த சேவையை எங்கள் நல்ல அதிர்ஷ்டமாகவும் நாங்கள் கருதுகிறோம்.
நண்பர்களே,
ஸ்ரீ குரு தேக் பகதூர் சாஹிப் ஜி-யின் காலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் துணிச்சலுடனும் உண்மையுடனும் நிற்கும் உணர்வு பொருத்தமானது. புதிய தலைமுறை இந்த மதிப்புகளுடன் இணையும்போது, பாரம்பரியம் ஒரு நினைவாக இருக்காது, அது எதிர்காலத்திற்கான பாதையாகிறது. இதுதான் இந்த நிகழ்வின் நோக்கம். நாம் வரலாற்றை நினைவில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதை வாழ்க்கையின் நடத்தையில் ஏற்றுக்கொள்வதும் அவசியம் ஆகும். இந்த உணர்வுடன், மீண்டும் ஒருமுறை, இந்த புனித நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து அமைப்பாளர்களையும் இந்த நிகழ்வையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிக்கு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
(Release ID: 2234279)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281699)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam