PIB Backgrounder
வேலை தேடுபவர்கள் என்ற நிலையில் இருந்து வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் என்ற நிலைக்கு மாற்றம்: அஸ்பயர் திட்டத்தின் வெற்றிக் கதை
प्रविष्टि तिथि:
26 JUN 2026 2:41PM by PIB Chennai
அஸ்பயர் (ASPIRE) : கிராமப்புற லட்சியங்களைத் தொழிலாக மாற்றுதல்
மேகாலயாவின் மாசின்ராம் என்ற இடத்தில், மழையில் நனைந்த ஒரு காலைப்பொழுதில், திரு பன்ஷைலாங் மர்பானியாங், மலைகளின் மீது கருமேகங்கள் உருண்டு செல்வதைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். உலகின் அதிக மழை பெய்யும் அந்த இடத்தில் அடிக்கடி நிகழ்வது போலவே, மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருந்தது. ஆனாலும், அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்தது வானிலை அல்ல; பல ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கேள்விதான்: வாய்ப்புகள் அரிதாக இருக்கும் இந்தச் சூழலில், நாட்டின் தொலைதூர மூலைகளில் ஒன்றிலிருந்து வரும் ஒரு இளைஞன் தனது எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது?
பல ஆண்டுகளாக, திரு மர்பானியாங் தனது நண்பர்களும் அண்டை வீட்டாரும் வேலை தேடி மாசின்ராமை விட்டு வெளியேறுவதைப் பார்த்து வந்தார். வளங்கள் குறைவாக இருந்தன. சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குவது எட்டாக்கனியாகத் தோன்றியது. நிதி நெருக்கடிகள் அந்தக் கனவை இன்னும் தொலைவில் இருப்பதாக உணர வைத்தன. ஆனாலும், அந்த எண்ணம் அவர் மனதை விட்டு அகல மறுத்தது. அப்பகுதியின் செழிப்பான விவசாய விளைபொருட்களால் சூழப்பட்டிருந்த அவர், இந்த உள்ளூர் வளங்கள் ஒரு நிறுவனத்திற்கு அடிப்படையாக அமையுமா என்று யோசித்தார்.
குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் (IIE-ஐஐஇ) வழங்கும் தொழில்முனைவோர் பயிற்சி, திறன் மேம்பாட்டு ஆதரவைப் பற்றி அவர் அறிந்துகொண்டபோது, அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஐஐஇ என்பது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் அஸ்பையர் திட்டத்தின் (ASPIRE - புத்தாக்கம், கிராமப்புறத் தொழில்கள் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதற்கான திட்டம்) கீழ் இயங்கும் ஒரு வழிகாட்டி நிறுவனமாகும். இது, தொழில்முனைவோராக விரும்பும் நபர்கள், தங்கள் யோசனைகளை நிறுவன அமைப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான திறன்கள், தன்னம்பிக்கை, வணிக அறிவைப் பெற உதவுகிறது.
திரு. மர்பானியாங்கிற்கு, அந்தப் பயிற்சி புதிய சாத்தியக்கூறுகளைத் திறந்தது. தொழில்நுட்ப அறிவு, தொழில்முனைவுத் திறன்களுடன், அவர் உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப் பொருளாதார வாய்ப்புகளாக மாற்றும் ஒரு உணவுப் பதப்படுத்தும் நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம், எங்கு வேண்டுமானாலும் ஒரு வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
திரு. மர்பானியாங்கின் கதை, இந்தியா முழுவதும் நிகழ்ந்து வரும் ஒரு மாபெரும் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
வணிக மேம்பாட்டுச் சேவைகள், தொழில்நுட்ப ஆதரவு, தொழில் ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கான அணுகல் பெரும்பாலும் சில நகர்ப்புற மையங்களிலேயே குவிந்துள்ளது. கிராமப்புற இந்தியாவில் திறமை, திறன்கள், வளங்கள் இருந்தபோதிலும், தொழில்முனைவோராக விரும்பும் நபர்களுக்கு, தங்கள் யோசனைகளை நிறுவனங்களாக மாற்றுவதற்குத் தேவையான பயிற்சி, வழிகாட்டுதல், நிறுவன ஆதரவு ஆகியவை பெரும்பாலும் கிடைக்கவில்லை.
இந்த இடைவெளியை உணர்ந்து, குறிப்பாக கிராமப்புற, வேளாண் சார்ந்த துறைகளில் தொழில்முனைவையும் வேலைவாய்ப்பையும் ஊக்குவிப்பதற்காக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் 2015-ம் ஆண்டில் அஸ்பயர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பல ஆண்டுகளாக, மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 2018-ல் வெளியிடப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், தொழில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தின. 2023-ம் ஆண்டின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், வாழ்வாதார உருவாக்கம், தொழில் மேம்பாடு, அளவிடக்கூடிய விளைவுகள் ஆகியவற்றின் மீதான கவனத்தைக் கூர்மைப்படுத்தின. இன்று, அஸ்பையர் திட்டமானது, தனிநபர்கள் திறன் பெறுவதிலிருந்து தொழில் உருவாக்கம் வரை முன்னேற, வளர்ந்து வரும் வாழ்வாதார வணிகத் தொழில் காப்பகங்களின் கட்டமைப்பை மையமாகக் கொண்டுள்ளது .
பயிற்சி, வழிகாட்டுதல், தொழில் பாதுகாப்பு ஆதரவை வழங்குவதன் மூலம், அஸ்பையர் திட்டமானது வேளாண்-கிராமப்புறத் துறைகளில் உள்ள ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு உதவுவதோடு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான புத்தாக்கங்களையும் ஊக்குவிக்கிறது.
அஸ்பையரின் வெற்றி என்பது, அது ஆதரிக்கும் தொழில்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப்படுவதில்லை. மாறாக, யாருடைய வாழ்க்கையை மாற்றியமைக்க அது உதவுகிறதோ, அந்த மக்களைக் கொண்டே அளவிடப்படுகிறது.
2022-23-ம் நிதியாண்டு முதல், இத்திட்டம் நாடு முழுவதும் 28,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது, தொழில் உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதில் அதன் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், அஸ்பயர் திட்டமானது 8,700-க்கும் மேற்பட்ட எஸ்சி பிரிவு பயனாளிகளையும், 9,600-க்கும் மேற்பட்ட பழங்குடிப் பயனாளிகளையும், 17,600-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் சென்றடைந்து, தொழில்முனைவை அனைவரையும் உள்ளடக்கியதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்ற உதவியுள்ளது .
இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. பல்வேறு சமூக, பொருளாதாரக் குழுக்களுக்கு தொழில்முனைவோர் ஆதரவை வழங்குவதன் மூலம், தொழில் உருவாக்கம் இனி பெருநகர மையங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல் இருப்பதை அஸ்பயர் உறுதிசெய்ய உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278172®=3&lang=1
(Release ID : 2278172)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278224)
आगंतुक पटल : 12