மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'குட்குடி' என்ற குறும்படம் - நம்பிக்கை, மன உறுதி ஆகிய செய்திகளை வழங்கியது
இந்தி குறும்படமான ' குட்குடி', 19வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று (வெள்ளிக்கிழமை -ஜூன் 19, 2026) அன்று ஆசியாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது. 21 நிமிடங்கள் ஓடும் இந்த இந்தி குறும்படம், மனிஷா மக்வானாவின் முதல் இயக்கமாகும். இப்படத்தின் பிரம்மாண்டமான முதல் திரையிடலின்போது, இயக்குநர், தயாரிப்பாளர் ஹர்ஷ்வர்தன் படேல், முன்னணி நடிகர்களான அஹாஸ் சன்னா, ஹிருதான்ஷ் பரேக் உள்ளிட்டோரும் படக்குழுவினரும் நடிகர்களும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
படத்தின் பிரம்மாண்டமான திரையிடலுக்கு முன்னதாக, இயக்குநர் மனிஷா மக்வானா தயாரிப்பாளர் ஹர்ஷ் படேல் ஆகியோரும் விழா நடைபெறும் இடத்தில் ஊடகத்தினருடன் கலந்துரையாடி, படம் உருவாக்கப்பட்ட விதம், அதன் கருப்பொருள்கள், விழாக்களில் அதன் பயணம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
குட்குடி என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கிய மனிஷா மக்வானா, அது மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகிய உணர்வைக் குறிப்பதாகக் கூறினார்.
இந்தப் படம், ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பணிபுரியும் ரிது என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதையாகும். தனது தொழிலால் சங்கடமடைந்தும், தனிப்பட்ட பொறுப்புகளாலும், அவள் தன் சுயமரியாதையுடன் போராடுகிறாள். ஆரவ் என்ற குழந்தையுடனான அவளது தொடர்பின் மூலம், அவள் தனது வாழ்க்கையையும் வேலையையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குகிறாள். இயக்குநரின் கூற்றுப்படி, அவள் அணிந்து கொள்ளும் சின்னம் தாங்கி உடையானது, ரிதுவின் உண்மையான உணர்ச்சிகளையும் மன போராட்டங்களையும் உலகத்திடமிருந்து மறைக்கும் ஒரு வடிகட்டியாகச் செயல்படுகிறது.
குட்குடியின் மையக் கதாபாத்திரமான ரிது ஒரு தனிப்பட்ட கதை அல்ல. மாறாக அது ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குழந்தையின் கதை. அவளது வேடத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆரவ் என்ற சிறுவனுடன் அவளுக்கு இருக்கும் அமைதியான பிணைப்பு, படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக மாறி, மென்மையாக அவளது குரலை மீண்டும் வெளிக்கொணர்கிறது.
குட்குடி ஒரு துணிச்சலான திரைக்கதை என்று குறிப்பிட்ட இயக்குநர், இந்தக் கதை தனது சொந்த ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெற்றதாகக் கூறினார்.
அகமதாபாத்தில் உள்ள பால் வட்டிகா பூங்காவில் படமாக்கப்பட்ட இந்தப் படம், படப்பிடிப்பின் போது இயல்பாக உருவான பல வெளிப்படையான தருணங்களையும் தன்னிச்சையான காட்சிகளையும் கொண்டுள்ளது. ரிது இறுதியாகத் தன் வாழ்க்கையை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு விடுதலை உணர்வை அனுபவிக்கும் காட்சியே, இப்படத்தின் மிகவும் சக்திவாய்ந்த தருணம் என்று இயக்குநர் விவரித்தார்.
தயாரிப்பாளர் ஹர்ஷ் படேல், இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை படக்குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும், மூன்று முதல் நான்கு குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து திரையரங்குகளில் திரையிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இப்படம் இப்போதைக்கு பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275596®=3&lang=1
Release ID: 2275596
****
TV/PLM/SH
रिलीज़ आईडी:
2275645
| Visitor Counter:
7