பிரதமர் அலுவலகம்
நெதர்லாந்தில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAY 2026 3:51PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.05.2026) நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் நெதர்லாந்து சென்றடைந்ததும், அங்கு உள்ள இந்திய வம்சாவளியினர் பெருந்திரளானோர் அவருக்கு அன்பான, உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த உற்சாகமான, வண்ணமயமான வரவேற்புக்குப் பாராட்டுத் தெரிவித்தார். டச்சு சமூகத்திற்கு இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நட்புறவின் பாலமாக விளங்குவதற்காகவும் அவர்களைப் பிரதமர் பாராட்டினார். மேலும், சுரினாமி-இந்துஸ்தானி சமூகத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த வரலாற்றுத் தொடர்புகளை அவர் நினைவு கூர்ந்தார். அத்துடன், தலைமுறை தலைமுறையாகத் தங்களின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, கொண்டாடுவதற்கான அவர்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். தொழில்நுட்பத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருப்பதும், டச்சுப் பல்கலைக்கழகங்களில், குறிப்பாகப் புத்தாக்கம் சார்ந்த துறைகளில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு வலு சேர்ப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டுத் தொடர்புகள், குறிப்பாக கிரிக்கெட், ஹாக்கி, போன்றவை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நெதர்லாந்துடனான இருதரப்பு ஒத்துழைப்பு சீராக விரிவடைந்து வருவதாகவும், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை முக்கியப் பகுதிகளாக உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, வளர்ந்து வரும் வர்த்தக, பொருளாதார உறவை அவர் எடுத்துரைத்தார். மேலும், ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி இலக்குகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும் என்றும், இந்தியாவின் முதன்மையான முதலீட்டு நாடுகளில் ஒன்றாக நெதர்லாந்து திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்துடன், இந்தியாவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு, உற்பத்தி, தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் அமைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பரந்த அளவிலான முன்னேற்றங்கள் மூலம் இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றத்தின் அளவையும் வேகத்தையும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பங்களிக்கும் அதே வேளையில், இந்தியா தனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வடிவமைத்து வருவதாக அவர் கூறினார்.
வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியருக்கும் மத்திய அரசு உறுதுணையாக நிற்பதாகவும், அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் இந்திய சமூகத்திற்கு உறுதியளித்தார். நெதர்லாந்தில் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கிற்குத் தீவிரமாகப் பங்களிக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அங்குள்ள இந்திய சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261729®=3&lang=1
(Release ID : 2261729)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261775)
வருகையாளர் எண்ணிக்கை : 10