பிரதமர் அலுவலகம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 4:40PM by PIB Chennai
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026 மார்ச் 1 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்திற்குப் பின், பிப்ரவரி 28 அன்று இரவு 9 மணியளவில் பிரதமர் சென்னை வருகிறார்.
மார்ச் 1 அன்று காலை 11.45 மணியளவில் புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்கள் இடையே அவர் உரையாற்றுவார்.
இதைத்தொடர்ந்து மதுரை செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணியளவில் அங்கு ரூ.4400 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பிற்பகல் 4 மணியளவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் தரிசனமும், பூஜையும் செய்வார்.
புதுச்சேரியில் பிரதமர்
பிரதமரின் மின் பேருந்து சேவை முன்முயற்சியின் கீழ், மின் பேருந்துகளை தொடங்கி வைப்பது, பொலிவுறு நகர இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறப்பு, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, நிலைத்தன்மைக்கான நகர முதலீடுகள் திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள் திறப்பு உள்ளிட்ட பல முக்கிய முன்முயற்சிகளைப் பிரதமர் தொடங்கி வைப்பார்.
காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் வளாகம், கங்கா விடுதி, ஜிப்மரில் பிராந்திய புற்றுநோய் மைய நவீனமயம், புதுச்சேரி பல்கலைக்கழக புதிய இணைப்புக் கட்டடங்கள், விரிவுரை கூடங்கள், மாணவர் விடுதிகள், இந்தப் பிராந்தியத்தில் உயர்கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
இந்தப் பிராந்தியத்தில் தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் மருந்து தயாரிப்பு பூங்கா, ஜவுளிப் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, சென்னை ஐஐடியின் நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஜிப்மரில் நவீன சுகாதார வசதிகள் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 41 சாலைகள் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், பாரம்பரிய நகர மேம்பாடு, மாங்குரோவ் காடு வளர்ப்பை புதுப்பித்தல் போன்றவற்றுக்கும் அடிக்கல் நாட்டுவார்.
மதுரையில் பிரதமர்
பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவிலும், மரக்காணம் – புதுச்சேரி பிரிவிலும் நான்கு வழி சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும்.
அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், மறுசீரமைப்பு செய்யப்பட்ட 8 ரயில் நிலையங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார். ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, மொரப்பூர், பொம்மிடி ஆகியவை இதில் அடங்கும். சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையே நான்காவது வழித்தடத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதனால், சென்னை பெருநகர் ரயில் சேவை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறுவதுடன், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள்.
தமிழ்நாட்டில் ஒலிபரப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய இடங்களில் புதிதாக ஆகாஷ்வாணி பண்பலை ஒலிபரப்பு டிரான்ஸ்மிட்டர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோதி தொடங்கிவைப்பார்.
***
(Release ID: 2233548)
TV/SMB/RJ/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233694)
வருகையாளர் எண்ணிக்கை : 95