PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் அரியவகைக் கனிம உத்தி: உற்பத்தி, வழித்தடங்கள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 11:08AM by PIB Chennai

 மின்சார வாகனங்கள், காற்றாலைகள், மின்னணுவியல், விண்வெளித்துறை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு  உயர் செயல்திறன் கொண்ட காந்தங்களான அரியவகை கனிம நிரந்தர காந்தங்கள் அவசியமாகும். இதற்கான உள்நாட்டுச் சூழல் அமைப்பை நிறுவுவதன் மூலம், முக்கியமான பொருட்களில் தற்சார்பை நோக்கி இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி 6,000 ஆண்டுக்கு மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த அரியவகை கனிம நிரந்தர காந்தங்கள் உற்பத்தித் திறனை உருவாக்க ரூ. 7,280 கோடி திட்டத்தை நவம்பர் 2025-ல் அரசு அங்கீகரித்தது, இது அரியவகை கனிம ஆக்சைடுகள் முதல் முழுமையாக உருவாக்கப்பட்ட காந்தங்கள் வரை முழு மதிப்புத் தொடரையும் உள்ளடக்கியதாகும்.

இதற்கு ஆதரவளிக்கும் வகையில், 2026–27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சுரங்கம் தோண்டுதல், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அரியவகை  கனிம சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள், தற்சார்பு இந்தியா, நிகர பூஜ்ஜியம் 2070, வளர்ச்சியடைந்த இந்தியா @2047 ஆகியவற்றின் தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகின்றன. அதே நேரத்தில் உலகளாவிய மேம்பட்ட பொருட்கள் மதிப்புத் தொடர்களில் முக்கிய பங்காளியாக இந்தியாவை இவை நிலைநிறுத்துகின்றன.

அரியவகை கனிம நிரந்தர காந்தங்கள் வலிமையான நிரந்தர காந்தங்களில் ஒன்றாகும். இவை அதிக காந்த வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றவை. இவற்றின் சிறிய வடிவமும், சக்திவாய்ந்த செயல்திறனும் மின்சார வாகன மோட்டார்கள், காற்றாலை ஜெனரேட்டர்கள், நுகர்வோர் மற்றும் தொழில்துறை மின்னணுவியல், விண்வெளி அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், துல்லிய உணரிகள் போன்ற மேம்பட்ட பொறியியல் பயன்பாடுகளுக்கு இவற்றை இன்றியமையாததாக மாற்றுகின்றன.

தூய எரிசக்தி, நவீன போக்குவரத்து மற்றும் உத்திசார் துறைகளில் இந்தியா தனது உற்பத்தித் தடத்தை விரிவுபடுத்துகையில், நம்பகமான உள்நாட்டு அரியவகை கனிம நிரந்தர காந்தங்கள் விநியோகம் மிக முக்கியமானதாகும். இது இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பது மட்டுமின்றி, நவீனப் பொருட்களுக்கான உலகளாவிய மதிப்புத் தொடர்களில் இந்தியாவின் போட்டித்தன்மையையும் பலப்படுத்துகிறது.

இந்தியாவில் கணிசமான அளவு அரியவகைக் கனிம  தாதுக்கள் உள்ளன.  இவை  அரியவகை கனிம நிரந்தர காந்த உற்பத்தி போன்ற முழுநிறை தொழில்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. இந்தியாவில் 13.15 மில்லியன் டன் மோனசைட் உள்ளது. இதில் 7.23 மில்லியன் டன் அரியவகைக் கனிம ஆக்சைடுகள் உள்ளன. இந்த படிமங்கள் ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் முழுவதும் காணப்படுகின்றன. முதன்மையாக கடற்கரை மணல், தேரி/சிவப்பு மணல், உள்நாட்டு வண்டல் மண் ஆகியவற்றில் காணப்படுகின்றன. குஜராத்திலும் ராஜஸ்தானிலும், கடினப் பாறைப் பகுதிகளில் 1.29 மில்லியன் டன் அரியவகைக் கனிம ஆக்சைடு வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுரங்க அமைச்சகம் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜாம்பியா, மொசாம்பிக், பெரு, ஜிம்பாப்வே, மலாவி, கோட் டி'ஐவோர் போன்ற கனிம வளம் மிக்க நாடுகளுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கூட்டாண்மைகள், தூய்மையான எரிசக்தி, நவீனப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு அவசியமான அரியவகைக் கனிம மற்றும் பிற முக்கியமான கனிமங்களுக்கான நீண்டகால அணுகலைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222413&reg=3&lang=1

***

TV/SMB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2222597) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati