பிரதமர் அலுவலகம்
மத்திய பட்ஜெட் 2026 குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்திற்கு இந்த பட்ஜெட் ஒரு அடித்தளமாகும்: பிரதமர்
இந்த ஆண்டு பட்ஜெட் இந்தியாவின் தொடர் சீர்திருத்தங்களுக்குப் புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளிக்கும்: பிரதமர்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறுகிறது: பிரதமர்
இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியா ஆகிய முன்முயற்சிகளுக்குப் புதிய உத்வேகம் அளிக்க ஒரு சிறந்த செயல் திட்டத்தை இந்த பட்ஜெட் முன்வைத்துள்ளது: பிரதமர்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவால் அவை உலகளாவிய நிலைக்கு உயரும்: பிரதமர்
இந்த ஆண்டு பட்ஜெட் இளைஞர் சக்திக்கு உத்வேகம் அளிக்கிறது – இது பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும்: பிரதமர்
பெண்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாட்டுக்கு இந்த பட்ஜெட் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
சிறந்த குறிக்கோள்களைக் கொண்ட இந்த பட்ஜெட் நாட்டின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
01 FEB 2026 3:15PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.02.2026) காணொலிக் காட்சியின் மூலம் மத்திய பட்ஜெட் 2026 குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் பேசிய பிரதமர், இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படும் தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரு பெண் நிதி அமைச்சராக, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டது என்றும், இது நிகழ்காலத்தின் கனவுகளை நிறைவேற்றி, இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்தப் பட்ஜெட் மூலம் புதிய ஆற்றலையும் புதிய உத்வேகத்தையும் பெறும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள், லட்சியம் நிறைந்த, திறமையான இளைஞர்களுக்குப் பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த பட்ஜெட் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பு ஆகிய தொலைநோக்குப் பார்வைகளை உணர்த்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுடன், அதிக மூலதனச் செலவினத்துடன் உயர் வளர்ச்சியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு தனித்துவமான பட்ஜெட் இது என்று பிரதமர் கூறினார்.
இந்த பட்ஜெட் உலக அளவில் இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மட்டும் இருப்பதில் இந்தியா திருப்தி அடையவில்லை என்றும், விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி உறுதியாகப் பயணித்து வருகிறது என்றும் அவர் கூறினார். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் கூட்டுத் தீர்மானம் என்று அவர் கூறினார். ஒரு நம்பகமான ஜனநாயக நாடாகவும், தரமான பொருட்களை விநியோகிக்கும் நாடாகவும் இந்தியாவின் பங்கு தொடர்ச்சியாக வலுவடைந்து வருவதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்தியா அண்மையில் மேற்கொண்டுள்ள முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள், நாட்டின் இளைஞர்களுக்கும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிகபட்ச பலன்களை உறுதி செய்யும் என்று அவர் கூறினார். அதன் ஒரு பகுதியாக இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியா போன்ற முன்முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு லட்சிய செயல் திட்டத்தை இந்த பட்ஜெட் முன்வைத்துள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். பயோஃபார்மா சக்தி திட்டம், இரண்டாம் கட்ட செமிகண்டக்டர் இயக்கம், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம், அரிய வகை கனிமங்களுக்கான வழித்தடம் உருவாக்குதல், முக்கிய கனிமங்கள் துறையை வலுப்படுத்துதல், ஜவுளித் துறையில் புதிய திட்டங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகள் உற்பத்தியை ஊக்குவித்தல், முன்னணி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் அந்தந்தத் துறைகளுக்கு முன் எப்போதும் இல்லாத ஆதரவை வழங்கும் என்றும், இது தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட் என்றும் அவர் கூறினார். இது தேசத்தின் தற்போதைய, எதிர்காலத் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் ஆதரவு, அவற்றை உள்ளூர் நிலையிலிருந்து உலகளாவிய நிலைக்கு வளரச் செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும், பிரத்யேக சரக்கு வழித்தடம், நாடு முழுவதும் நீர்வழிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில் வழித்தடம், இரண்டாம் - மூன்றாம் நிலை நகரங்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல், நகராட்சி நிர்வாகங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளங்களை வழங்க நகராட்சிப் பத்திரங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
எந்தவொரு தேசத்தின் மிகப்பெரிய மூலதனமும் அதன் மக்கள்தான் என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் மக்களின் திறன்களை மேம்படுத்த அரசு பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது என்றார். திறன்களையும் நிலைத்தன்மையையும் வலுப்படுத்துவதே தொடர்ச்சியான முயற்சியாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். இது இளைஞர் சக்திக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் என்று மீண்டும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், பல துறைகளில் இளம் கண்டுபிடிப்பாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கும் என்று கூறினார். கூடுதல் மருத்துவ மையங்களை நிறுவுதல், துணை சுகாதார வல்லுநர்களை அதிகரித்தல், ஒலி-ஒளி ஊடகங்கள் அடங்கிய படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், கேலோ இந்தியா இயக்கம் ஆகியவை மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவை உலகின் தரவு மையமாக மாற்றுவதற்காக பெரிய வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்தப் பட்ஜெட் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சிறந்த ஊக்கத்தை அளிக்கும் என்றார். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதும், மாநிலங்களின் சீரான வளர்ச்சிக்கான அடித்தளம் வலுப்படுத்தப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
பத்து கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, ஒவ்வொரு வீட்டிலும் செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பெண்களால் வழிநடத்தப்படும் சுயஉதவிக் குழுக்களுக்கு நவீன சூழலை உருவாக்குவதற்கு இந்தப் பட்ஜெட் முன்னுரிமை அளிக்கிறது என்று கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவியருக்காகப் புதிய விடுதிகளைக் கட்டும் திட்டத்தால், பெண் கல்வி அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயம், பால்வளம், மீன்வளம் ஆகியவற்றுக்கு அரசு எப்போதும் அதிக முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதமர் கூறினார். இந்தப் பட்ஜெட்டில், தென்னை, முந்திரி, கோகோ போன்றவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பாரத் விஸ்தார் செயற்கை நுண்ணறிவு தளம், விவசாயிகளுக்கு அவர்களின் சொந்த மொழியில் தகவல்களை வழங்கும் எனவும் இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மீன்வளத்துறையிலும் கால்நடை வளர்ப்பிலும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் கிராமங்களில் அதிக வேலைவாய்ப்புகளையும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று அவர் கூறினார். இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையுடையது என்றும், தேசத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக உள்ளது எனவும் கூறிய பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பட்ஜெட்டை வழங்கியதற்காக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கும் அவரது குழுவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை வாழ்த்துத் தெரிவித்தார்.
***
VL/PKV/PLM/SH
(रिलीज़ आईडी: 2221744)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Telugu
,
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Kannada