அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஹைதராபாத்தில் அதிநவீன விலங்கு குருத்தணு உயிரி வங்கி - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2025 4:20PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (09.08.2025) ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐபிஏ - NIAB) இந்தியாவின் முதல் அதிநவீன விலங்கு குருத்தணு (ஸ்டெம் செல் -stem cell) உயிரி வங்கியையும், விலங்கு குருத்தணு ஆய்வகத்தையும் திறந்து வைத்தார். என்ஐபிஏ-யில் ₹19.98 கோடி செலவில் உயிரி தொழில்நுட்பத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய விடுதிக் கட்டடம், 4-ம் வகை குடியிருப்புகள் ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் அமைச்சர் நாட்டினார். இந்த புதிய உள்கட்டமைப்புகள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
9,300 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து ₹1.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன விலங்கு உயிரி வங்கி வசதி, கால்நடைகளுக்கான மீளுருவாக்க மருத்துவம், செல் சிகிச்சைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும். குருத்தணு (ஸ்டெம் செல்) வளர்ப்பு அலகு, முப்பரிமாண (3டி) உயிரி அச்சுப்பொறி, பாக்டீரியா நுண்ணுயிர் வளர்ப்பு ஆய்வகம் போன்றவற்றைக் கொண்ட இந்த ஆய்வகம், நோய் ஆய்வு, திசு பொறியியல், இனப்பெருக்க உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி போன்றவற்றை மேம்படுத்தும்.
உயிரி தொழில்நுட்பத் துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் எதிர்கால தொலைநோக்குப் பார்வையை அமைச்சர் பாராட்டினார். பயோ-இ3 என்ற கொள்கை வெளியிடப்பட்டதன் மூலம் இந்தியா இதில் பெரிய பயன் அடையும் என்று அவர் கூறினார். உயிரி தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அடுத்த தொழில்துறை புரட்சியின்போது இந்தியா பின்தங்காது என அவர் தெரிவித்தார்.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிதியத்தின் கீழ் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ₹1 லட்சம் கோடி நிதி, தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சிறப்பு ஊக்கத்தை அளிக்கும் என்றும், உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவை முதல் இடத்திற்கு நகர்த்த இது உதவும் என்றும் அவர் கூறினார்.
உயிரி தொழில்நுட்பத் துறை, தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உலகங்களை ஒரே குடையின் கீழ் தனித்துவமாக ஒருங்கிணைக்கிறது என அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் முதல் விலங்கு குருத்தணு உயிரி வங்கியை நிறுவுவதில் என்ஐஏபி இயக்குநர் டாக்டர் தரு சர்மாவின் பங்களிப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
*****
(Release ID: 2154663)
AD/SM/PLM/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2154720)
வருகையாளர் எண்ணிக்கை : 57