குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
‘ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர்’ — டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் அழைப்பை நினைவு கூர்தல்: அவரது தியாக தினத்தன்று குடியரசு துணைத் தலைவர் புகழாரம்
Posted On:
23 JUN 2025 2:30PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி “நினைவு தினம்) அவருக்கு மரியாதை செலுத்தினார், "நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு மகத்தான நாள். நமது மண்ணின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான, டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினம் இன்று. அவர் ஒரு முழக்கத்தை வழங்கினார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர் என்ற முழக்கத்தை எழுப்பினார்.
உத்தரப்பிரதேசத்தின் கௌதம் புத்தா நகரில் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 99-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசிய மாநாட்டின் (2024–2025) தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு தன்கர், நாம் நீண்ட காலமாக 370-வது பிரிவால் பாதிக்கப்பட்டோம். அது நம்மையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் ரத்தம் சிந்தச் செய்தது. 370-வது பிரிவும், கொடூரமான 35-ஏ பிரிவும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தன. தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும், சர்தார் படேல் போன்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நமக்கு இருந்தனர். 370-வது பிரிவு இப்போது நமது அரசியலமைப்பில் இல்லை. அது ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது, மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான சட்டரீதியான சவால் டிசம்பர் 11, 2023 அன்று தோல்வியடைந்தது. எனவே, நமது மண்ணின் சிறந்த மைந்தர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இதை விட பொருத்தமான இடத்தில் நான் இருக்க முடியாது. அவருக்கு எனது மரியாதை" என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்ட அவர், "3 தசாப்தங்களுக்கும் மேலாக நமது கல்வியின் நிலப்பரப்பையே மாற்றியமைத்த ஒரு விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் 'தேசிய கல்விக் கொள்கை' 2020 பற்றி குறிப்பிடுகிறேன். மேற்கு வங்க மாநில ஆளுநராக, நான் அதனுடன் தொடர்புடையவன். இந்தக் கொள்கையின் பரிணாம வளர்ச்சிக்கு சில முக்கிய உள்ளீடுகள் - ஆயிரக்கணக்கானோரின் கைகளில் - பரிசீலிக்கப்பட்டன." என்றார்.
"இந்தக் கொள்கை நமது நாகரிக உணர்வு, சாராம்சம் மற்றும் நெறிமுறைகளுடன் எதிரொலிக்கிறது. கல்வி என்பது சுயத்தை எழுப்புவது - திறன்களைக் கற்பிப்பதற்காக மட்டுமல்ல என்ற இந்தியாவின் காலத்தால் அழியாத நம்பிக்கையை இது தைரியமாக மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கல்வி என்பது ஒரு சிறந்த சமநிலைப்படுத்தும் சாதனம் என்று நான் உறுதியாக நம்பினேன். வேறு எந்த வழிமுறையும் செய்யாதது போல் கல்வி சமத்துவத்தைக் கொண்டுவருகிறது. உண்மையில், கல்வி ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்கிறது." என்று அவர் கூறினார்.
இந்தியாவின் தேசிய முன்னேற்றத்தைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், “ வாய்ப்புகள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள், புதுமைகள், யூனிகார்ன்கள் ஆகியவற்றின் நிலமாக இந்தியா உருவெடுத்துள்ளது. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அளவிடக்கூடிய ஒவ்வொரு அளவுருவிலும், நாம் உயர்ந்து வருகிறோம்” என்றார்.
“நமது பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குவதற்காக மட்டும் அல்ல. பெறுகின்ற பட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் சரணாலயங்களாக, புதுமையின் பிறப்பிடங்களாக இருக்க வேண்டும். இந்த இடங்கள் பெரிய மாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்.” என்று பல்கலைக்கழகங்களின் பங்கு குறித்து, குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்,
"நமது பண்டைய வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது, நமது வளமான கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறோம். கற்பிப்பதற்காக மட்டுமல்லாமல் முன்னோடியாகவும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை பாரதம் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. இவை வெறும் துறைகள் அல்ல. இவை வரவிருக்கும் எல்லா காலங்களிலும் நமது இறையாண்மையை உறுதி செய்வதற்கான நெம்புகோல்கள்." என அவர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் துறைகளில் தலைமைத்துவத்தை நிறுவுவதற்கான அழைப்போடு தமது உரையை நிறைவு செய்த குடியரசு துணைத் தலைவர் "செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், பருவநிலை தொழில்நுட்பம், குவாண்டம் அறிவியல், டிஜிட்டல் நெறிமுறைகள் போன்ற வளர்ந்து வரும் களங்களில் சமரசமற்ற சிறந்த நிறுவனங்களை நிறுவுங்கள் - அப்போது பாரதம் வழிநடத்தும், மற்றவை பின்பற்றும். அது ஒரு சவால்." என்று அவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் அமைச்சர் திரு சுனில் குமார் சர்மா, அமிட்டி கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுவின் நிறுவனர் தலைவர் டாக்டர் அசோக் கே. சௌஹான், ஏஐயு தலைவர் பேராசிரியர் வினய் குமார் பதக், ஏஐயு பொதுச் செயலாளர் டாக்டர் (திருமதி) பங்கஜ் மிட்டல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
------
(Release ID: 2138868)
AD/TS/KPG/DL
(Release ID: 2138980)