பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஈரான் அதிபர் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்

தற்போதைய நிலைமை குறித்து ஈரான் அதிபர் திரு பெஷஷ்கியான் பிரதமருக்கு விளக்கினார்

பிரதமர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார் - பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவை மூலம், அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்

ஈரானில் இருந்து இந்திய சமூகத்தினரை திருப்பி அனுப்ப ஆதரவளித்ததற்காக அதிபர் திரு பெஷஷ்கியானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்

Posted On: 22 JUN 2025 5:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (22.06.2025) ஈரான் அதிபர் திரு மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமரிடம் ஈரான் அதிபர் பெஷஷ்கியான் விரிவாக விளக்கிக் கூறினார். இது தொடர்பாக அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்திய பதற்றங்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா அமைதி மற்றும் மனிதநேயத்தின் பக்கம் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சூழலில், முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றின் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை அவர் மீண்டும் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தினர் பாதுகாப்பாக  தாயகம் திரும்பி வருவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, ஈரான் அதிபர் திரு பெஷஷ்கியானுக்கு நன்றி தெரிவித்தார். வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல், தொழில்நுட்பம், மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து பரஸ்பரம் தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

****

(Release ID: 2138715)

AD/TS/PLM/RJ


(Release ID: 2138731)