பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
யோகா உலகம் முழுவதையும் ஒன்றிணைத்துள்ளது: பிரதமர்
எல்லைகளுக்கு அப்பால், பல்வேறு பின்னணிகளுக்கு அப்பால், வயது அல்லது திறன்களுக்கு அப்பால் யோகா அனைவரையும் சென்றடைந்துள்ளது: பிரதமர்
உலக ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் யோகா நம்மை வழிநடத்துகிறது - நாம் தனித்த நபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது: பிரதமர்
யோகா என்பது தனி நபரில் இருந்து நாம் எனும் கூட்டு செயல்பாடு வரை நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கலையாகும்: பிரதமர்
யோகா என்பது மனிதகுலத்தை சமநிலைப்படுத்தத் தேவையான ஒரு கருவி: பிரதமர்
இந்த யோகா தினம் மனிதகுலத்திற்கான யோகா 2.0-வின் தொடக்கத்தைக் குறிக்கட்டும் - இதில் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறட்டும்: பிரதமர்
Posted On:
21 JUN 2025 7:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் கூட்டாக யோகா பயிற்சி செய்ய ஒன்றுகூடும் நிகழ்வாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். யோகாவின் சாராம்சம் ஒன்றிணைவது என்றும், யோகா உலகை எவ்வாறு ஒன்றிணைத்துள்ளது என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டு யோகா பயணத்தைப் பற்றிப் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தின யோசனையை இந்தியா முன்மொழிந்த தருணத்தை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். 175 நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்ததாகவும், இது உலகளாவிய ஒற்றுமைக்கான ஒரு அரிய நிகழ்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆதரவு யோகா தினத்திற்கு மட்டுமல்ல எனவும், மனிதகுலத்தின் நன்மைக்காக உலகின் கூட்டு முயற்சியைக்கான ஆதரவு என்றும் அவர் கூறினார். 11 ஆண்டுகளில், யோகா உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது என்று அவர் தெரிவித்தார். பார்வை மாற்றுத் திறனாளிகள் பிரெய்லி முறையில் யோக நூல்களைப் படிப்பதையும், விஞ்ஞானிகள் விண்வெளியில் யோகா பயிற்சி செய்வதையும் கண்டு பிரதமர் பெருமை தெரிவித்தார். யோகா ஒலிம்பியாட்களில் கிராமப்புற இளைஞர்களின் உற்சாகமான பங்கேற்பையும் அவர் குறிப்பிட்டார். சிட்னி ஓபரா ஹவுஸின் படிகளாக இருந்தாலும் சரி, எவரெஸ்ட் சிகரமாக இருந்தாலும் சரி, அல்லது கடலின் பரந்த பரப்பாக இருந்தாலும் சரி, "யோகா அனைவருக்கும் பொதுவாக உள்ளது என அவர் கூறினார. எல்லைகளுக்கு அப்பால், பல்வேறு பின்னணிகளுக்கு அப்பால், வயது அல்லது திறன்களுக்கு அப்பால் யோகா அனைவரையும் இணைத்துள்ளது என்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
விசாகப்பட்டினத்திற்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நரேந்திர மோடி, இயற்கை மற்றும் முன்னேற்றத்தின் இணைவு என்று வர்ணித்ததோடு, இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவரையும் பாராட்டினார். ஆந்திர முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம் யோகாந்திரா அபியான் என்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைத் தொடங்கியதையும் பிரதமர் எடுத்துரைத்தார். யோகா ஒரு உண்மையான சமூக கொண்டாட்டம் என்பதும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் யோகா மூலம் உள்ளடக்க முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் யோகாந்திரா அபியானில் இணைந்துள்ளனர் எனவும் இது பொது பங்கேற்பின் துடிப்பான உணர்வை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ,இந்த உணர்வுதான் ஒரு வளர்ச்தி அடைந்த பாரதத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்கள் தாங்களாகவே ஒரு பணியை ஏற்றுக்கொண்டு தீவிரமாக பங்கேற்கும்போது, எந்த இலக்கும் எட்ட முடியாததாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு முழுவதும் மக்களின் நல்லெண்ணமும், உற்சாகமான முயற்சிகளும் காணப்பட்டதாக திரு நரேந்திர மோடி கூறினார்.
இந்த ஆண்டு சர்வதேச யோகா தின கருப்பொருளான "ஒரே பூமி - ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா" என்பதை சுட்டிட்டுக் காட்டிய பிரதமர், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்ற ஆழமான உண்மையை இந்த கருப்பொருள் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். உணவை உற்பத்தி செய்யும் மண், தண்ணீரை வழங்கும் ஆறுகள், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் விலங்குகள், நம்மை வளர்க்கும் தாவரங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே மனித நல்வாழ்வு அமையும் என்று அவர் கூறினார். யோகா இந்த ஒன்றோடொன்று இணைந்த தன்மைக்கு நம்மை தயாராக்கி, உலகத்துடன் ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் நம்மை வழிநடத்துகிறது என்பதை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நாம் தனியான நபர்கள் அல்ல என்றும் மாறாக இயற்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யோகா நமக்குக் கற்பிக்கிறது என்றும் அவர் கூறினார். யோகா மூலம், தொடக்கத்தில் நமது சொந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கவனித்துக் கொள்கிறோம் என்றும் படிப்படியாக, இந்த அக்கறை நமது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பூமி என முழுவதற்கும் விரிவடைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். யோகா என்பது ஒரு ஆழமான தனிப்பட்ட ஒழுக்கம் எனவும் அதே நேரத்தில், ஒரு கூட்டு கலையாகவும் அது செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். தனிநபர்களை என்ற நிலையில் இருந்து நாம் என்பதற்கு யோகா நம்மை மாற்றுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
"நானும் நாமும்" என்ற எண்ணம் இந்தியாவின் ஆன்மாவையே உள்ளடக்கியுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, ஒரு தனிநபர் சுயநலத்திற்கு அப்பால் உயர்ந்து சமூகத்தைப் பற்றிப் பொதுவாக சிந்திக்கத் தொடங்கும்போது, மனிதகுலத்தின் நலன் அனைத்தும் சாத்தியமாகும் என்று குறிப்பிட்டார். இதுவே இந்திய கலாச்சாரம் என அவர் குறிப்பிட்டார். இந்த சிந்தனைதான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று பிரதமர் கூறினார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் அமைதியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்த திரு நரேந்திர மோடி, இதுபோன்ற காலங்களில், யோகா அமைதிக்கான பாதையை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். யோகா என்பது மனிதகுலத்தை சமநிலைப்படுத்த தேவையான கருவி என்று அவர் கூறினார். இந்த யோகா தினம் மனிதகுலத்திற்கான யோகா 2.0-வின் தொடக்கத்தைக் குறிக்கட்டும் எனவும் இதில் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறட்டும் என்றும் பிரதமர் கூறினார். யோகா வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டும் இருக்கக்கூடாது எனவும் மாறாக உலகளாவிய ஒத்துழைப்புகளுக்கான ஒரு ஊடகமாக உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு சமூகமும் யோகாவை தங்கள் வாழ்க்கை முறையிலும் பொதுக் கொள்கையிலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அமைதியான, சமநிலையான, நிலையான உலகத்தை முன்னேற்றுவதற்கான கூட்டு முயற்சிக்கு திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். யோகா, உலகை மோதலில் இருந்து ஒத்துழைப்புக்கும், மன அழுத்தத்திலிருந்து தீர்வுகளுக்கும் வழிநடத்துவதாக அவர் மேலும் கூறினார்.
நவீன ஆராய்ச்சி மூலம் யோகா சார்ந்த அறிவியலை வலுப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் யோகா ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்றார். இந்த நிறுவனங்கள், தற்கால மருத்துவ நடைமுறைகளுக்குள் அதன் அறிவியல் பொருத்தத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா அதன் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் யோகா மூலம் சான்றுகள் சார்ந்த சிகிச்சையை ஊக்குவித்து வருகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இதில் அதன் சிறந்த பங்களிப்பிற்காக புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ்-சை (AIIMS) திரு நரேந்திர மோடி பாராட்டினார். யோகா இதய மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கான சிகிச்சையிலும், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மன நலனை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
தேசிய ஆயுஷ் இயக்கம் மூலம், நாடு முழுவதும் யோகா மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த முயற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். யோகா தளம் மற்றும் யோகாந்திரா தளம் மூலம் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் இது நாடு முழுவதும் யோகாவின் பிரபலத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெறும் நிகழ்வுகளின் அளவு யோகாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் குணப்படுத்துவோம் என்ற தாரக மந்திரத்தின் உலகளாவிய புகழ் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, இந்தியா ஒரு முன்னணி குணப்படுத்தும் இடமாக உருவெடுப்பதாக அவர் கூறினார். இதில் வளர்ச்சியில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். யோகா பயிற்சியை தரநிலைப்படுத்த ஒரு பொதுவான யோகா நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதற்கு அவர் திருப்தி தெரிவித்தார். 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து, சுமார் 130 நிறுவனங்களை அங்கீகரித்துள்ள யோகா சான்றிதழ் வாரியத்தின் முயற்சிகளை சுட்டிக் காட்டிய பிரதமர், முழுமையான ஆரோக்கிய சூழல் அமைப்பை உருவாக்குவதன் ஒரு பகுதியாக மருத்துவக் கல்லூரிகளில் 10 நாள் யோகா தொகுதி சேர்க்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில், பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஆரோக்கிய சூழல் அமைப்பிலிருந்து உலக சமூகம் பயனடைவதை உறுதி செய்வதற்காக, சிறப்பு மின்-ஆயுஷ் விசாக்கள் வழங்கப்படும் என பிரதமர் கூறினார்.
உடல் பருமன் பிரச்சினை உலகளாவிய சவால் என்று கூறிய திரு நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியின் போது இந்த தலைப்பில் தமது விவாதத்தை விரிவாக நினைவு கூர்ந்தார். மேலும் தினசரி உணவுகளில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க அவர் அழைப்பு விடுத்தார். இந்த முயற்சியில் இணையுமாறு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பிரதமர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். தனிநபர்கள் தங்கள் உணவில் எண்ணெய் பயன்பாட்டை குறைந்தது 10 சதவீதம் எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதன் அவசியத்தை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது, ஆரோக்கியமற்ற உணவு முறைகளைத் தவிர்ப்பது, யோகா பயிற்சி செய்வது ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய அம்சங்கள் என்று கூறினார்.
யோகாவை ஒரு மக்கள் இயக்கமாக - ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்த பிரதமர், உலகை அமைதி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஒரு இயக்கம் இது என்றார். வாழ்க்கையில் சமநிலையைக் கொண்டுவர ஒவ்வொரு தனிநபரும் தங்களது ஒவ்வொரு நாளையும் யோகாவுடன் தொடங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு சமூகமும் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யோகா மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் கருவியாக செயல்பட வேண்டும் எனவும் ஒரே பூமி - ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா என்பது ஒரு உலகளாவிய தீர்மானமாக மாற வேண்டும் என்றும கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்வில் ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் திரு ராம்மோகன் நாயுடு, திரு பிரதாப்ராவ் ஜாதவ், டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, திரு பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
11-வது சர்வதேச யோகா தினத்தை (IDY) முன்னிட்டு, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய கொண்டாட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார். விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற பொது யோகா நெறிமுறை அமர்வில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேருடன் அவர் பங்கேற்றார். அதே நேரத்தில் ஒரு இணக்கமான யோகா நிகழ்வின் மூலம் தேசத்தை வழிநடத்தினார். இந்தியா முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "ஒரே பூமி - ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா" என்பதாகும். மனித, பூமி ஆரோக்கியம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அனைவரும் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்ற இந்திய தத்துவத்தில் வேரூன்றிய கூட்டு நல்வாழ்வின் உலகளாவிய பார்வையை இது எதிரொலிக்கிறது. 2015-ம் ஆண்டு ஐநா பொதுச் சபை யோகா தினத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, பிரதமர் புது தில்லி, சண்டிகர், லக்னோ, மைசூர், நியூயார்க் (ஐநா தலைமையகம்), ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டாட்டங்களை வழிநடத்தியுள்ளார். சர்வதேச யோகா தினம் ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய சுகாதார இயக்கமாக உருவெடுத்துள்ளது.
****
(Release ID: 2138194)
AD/PLM/RJ
(Release ID: 2138366)
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada