பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் சிவானில் ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்
நாட்டின் வளத்தில் பீகார் செழிப்புறுவதோடு மிகப் பெரிய பங்களிப்பையும் வெளிப்படுத்தும்: பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில் சாதனை அளவாக 25 கோடி இந்தியர்கள் வறுமையை தோற்கடித்துள்ளனர்: பிரதமர்
மேட் இன் இந்தியா திட்டத்தின் பெரிய மையமாக மாறவிருக்கும் பீகார், இன்று, மர்ஹவுரா ரயில் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து முதலாவது என்ஜினை ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது: பிரதமர்
Posted On:
20 JUN 2025 3:04PM by PIB Chennai
பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் நினைவை பிரதமர் போற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஊக்கமளிக்கும் பூமியாக இருந்தது சிவான் என்று வர்ணித்த திரு மோடி, இந்தப் பூமி நாட்டின் ஜனநாயகத்திற்கு அதிகாரமளித்ததோடு அரசியல் அமைப்புச் சட்டத்தை வலுப்படுத்தியதாக கூறினார். இந்த சிவான், நாட்டின் மகத்தான புதல்வர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை தந்தது என்றும் அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைவதிலும், நாட்டிற்கு திசை வழியை காட்டுவதிலும் முக்கியப் பங்களித்தார் என்றும் அவர் கூறினார். மகளிருக்கு அதிகாரமளிப்பதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான சமூக சீர்திருத்தவாதி ப்ரஜ் கிஷோர் பிரசாத்தும் சிவானின் பங்களிப்பு என்று பிரதமர் தெரிவித்தார்.
மத்திய மாநில அரசுகளின் வலுவான தீர்மானத்துடன் இத்தகைய மகத்தான ஆன்மாக்களின் இயக்கத்தாலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சித் தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சி இத்தகைய தொடர் முயற்சிகளின் ஒரு பகுதி என்றும் அவர் தெரிவித்தார். ஒரே மேடையிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் பிரதமர் அறிவித்தார். இத்தகைய மேம்பாட்டு முன்முயற்சிகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பீகாரை வழிநடத்தும் என்றும் வளமான மாநிலத்தை கட்டமைக்க பங்களிப்பு செய்யும் என்றும் அவர் கூறினார். சிவான், சசாராம், பக்சார், மோதிஹரி, பேட்டியா, அர்ரா போன்ற பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு மோடி தெரிவித்தார். இந்த முன்முயற்சிகள் ஏழை எளிய மக்கள், தலித்துகள், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்பதை எடுத்துரைத்த அவர், இந்தத் திட்டங்களுக்காக பீகார் மக்களுக்கு அன்பான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு பயணத்திலிருந்து இப்போதுதான் தாம் திரும்பி வந்திருப்பதாக குறிப்பிட்ட திரு மோடி, இந்தப் பயணத்தின் போது உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் சில தலைவர்களுடன் விவாதித்தது பற்றி எடுத்துரைத்தார். இந்தியாவின் விரைவான வளர்ச்சி உலகத் தலைவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார ஆற்றல் மையமாக இந்தியா வளர்ந்து வருவதை இந்தத் தலைவர்கள் காண்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த மாற்றத்தில் பீகார் மிகப் பெரிய பங்களிப்பை செய்யும் என்று உறுதிபட தெரிவித்தார். வளமார்ந்த பீகார் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும் என்று கூறிய திரு மோடி, இதற்கு பீகார் மக்களின் பலமும், திறனும் நம்பிக்கை அளிக்கிறது என்றார். இம்மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லாத சகாப்தத்தின் முடிவு கட்டிய மக்களை பிரதமர் பாராட்டினார். 20 ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தின் நிலைமையை இன்றைய இளைஞர்கள் கதைகளிலும், கற்பனையிலுமே அறிந்திருந்தார்கள் என்று அவர் குறிப்பிட்டார். தவறான ஆட்சியின் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை அவர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டிய பீகார் ஒரு காலத்தில் முந்தைய ஆட்சிகளின் பிடியில் இடம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு ஆளாவதன் அடையாளமாக இருந்தது என்றார்.
பீகாரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுயமரியாதை முக்கியமானது என்று கூறிய பிரதமர், எனது பீகாரி சகோதரர்களும், சகோதரிகளும் மெச்சத்தக்க உறுதியை வெளிப்படுத்தியதோடு மிகவும் சிக்கலான தருணங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளனர் என்றார். அவர்கள் தங்களின் சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் முந்தைய ஆட்சியாளர்கள் பீகாரின் பெருமிதத்தை புண்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆட்சிக்காலங்கள் ஊழல் நிறைந்ததாக இருந்தன என்று விமர்சனம் செய்த அவர், இதன் காரணமாக வறுமை பீகாரின் துரதிருஷ்டமாக மாறியது என்றார். ஏராளமான சவால்கள் உள்ள போதும் திரு நிதிஷ் குமார் தலைமையின் கீழ் தற்போதைய அரசு பீகாரை மீண்டும் அதன் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த 10 – 11 ஆண்டுகளில் பீகாரில் சுமார் 55,000 கிலோ மீட்டர் ஊரகச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திரு மோடி கூறினார். 1.5 கோடிக்கும் அதிகமான வீடுகள் மின் இணைப்புகளை பெற்றுள்ளன என்றும், 1.5 கோடி வீடுகள் குடிநீர் குழாய் இணைப்புகளை பெற்றுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மாநிலம் முழுவதும் 45,000-க்கும் அதிகமான பொதுச் சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட திரு மோடி, பீகார் முழுவதும் சிறு நகரங்களில் தற்போது புதிதாக புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன என்பதை எடுத்துரைத்தார்.
பீகாரின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வரும் தருணத்தில், முந்தைய சட்டமின்மை ஆட்சிக்கு பொறுப்பான சக்திகள் மீண்டும் பீகாரின் பொருளாதார வளங்களையும், அரசையும் கட்டுப்படுத்தும் வாய்ப்பை தேடுகின்றன என்று திரு மோடி எச்சரித்தார். தங்களின் இலக்குகளை அடைய இந்தக் குழுக்கள் பல்வேறு தந்திரங்களை செய்வதாகவும் அவர் கூறினார். பீகார் மக்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டுமென்று வலியுறுத்திய பிரதமர், வளமார்ந்த பீகார் என்பதை நோக்கிய பயணத்தை சீர்குலைக்க நினைப்போரிடமிருந்து விலகியிருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
வறுமை ஒழிப்பு பற்றி முழக்கங்களை நாடு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தங்களின் அரசு உண்மையில் வறுமையை ஒழித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சாதனை அளவாக 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள் என்று கூறிய திரு மோடி, உலக வங்கி போன்ற புகழ் பெற்ற உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவின் சாதனையை பாராட்டியிருப்பதாக தெரிவித்தார். நாட்டின் இந்த வெற்றியில் பீகார் குறிப்பாக திரு நிதிஷ் குமார் தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது என்று அவர் கூறினார். முந்தைய காலத்தில் பீகார் மக்கள் தொகையில் பாதியளவுக்கும் அதிகமானோர் அதீத வறுமை பிரிவில் இருந்தனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் பீகாரில் சுமார் 4 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் நிறைவடைந்த நிலையிலும் லட்சக்கணக்கான மக்களை ஏழ்மை நிலையிலிருந்து மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகள் இல்லாத சூழலில், நீண்ட காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசுகள் நாட்டை ஏழ்மை நிலையிலேயே தொடர்ந்து வைத்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு சேவை மற்றும் வாய்ப்புகளில் சிறிய அளவிலான பணிகளுக்கு அனுமதி பெறுவதில் கூட கடுமையான இடஒதுக்கீட்டு முறை அமலில் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். முந்தைய அரசுகள் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தர மறுத்ததாகவும் நியாய விலைக்கடை மூலம் வழங்கப்படும் பொருட்கள் இடைத்தரகர்கள் மூலம் மோசடி நடைபெற்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் ஏழை மக்களுக்கு எட்டாத நிலையில் இருந்ததாகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்கள் தொடர்ந்து இடர்பாடுகளை எதிர்கொண்டு வந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். பாதுகாப்பான குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளுக்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற முடிந்ததாகவும், லஞ்சம் அல்லது செல்வாக்குமிக்க நபர்களின் சிபாரிசு இன்றி வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலை இருந்ததாகவும் அவர் கூறினார். தலித்துகள் பின்தங்கிய மற்றும் விளம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறிய பிரதமர், வறுமையின் பிடியிலிருந்து வெளியேறுவது அவர்களுக்கு கனவாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டார். அரசு நடைமுறைகள் அனைத்தும் லட்சாதிபதி மற்றும் கோடீஸ்வர குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் ஏழைகளின் முன்னேற்றத்தில் இருக்கும் அனைத்துத் தடைகளையும் களைவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார். இதன் விளைவாக ஏழைகள் முன்னேற்றம் அடைந்து வருவதைக் காண முடிவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 4 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் கான்கிரீட் வீடுகளைப் பெற்றுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் பீகாரில் உள்ள தலித்துகள், பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைவர் என்றும் பிரதமர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் 57 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சிவான் மாவட்டத்தில் ஏழை மக்களுக்காக 1.10 லட்சம் வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளதாகவும் வீடுகள் கட்டும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். பீகாரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று தவணை முறையில் வீடுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலான வீடுகள் தாயின் பெயரிலோ அல்லது சகோதரியின் பெயரிலோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதுவரை தனது பெயரில் சொந்த வீடு இல்லாத பெண்கள் தற்போது சொந்த வீடு பெற்றுள்ளதன் மூலம் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார்.
மத்திய அரசு ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதுடன் இலவச உணவு தானியம், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளையும் வழங்கி வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். சிவான் மாவட்டத்தில் மட்டும் நான்கரை லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழாய் இணைப்பு மூலம் முதல் முறையாக குடிநீர் வசதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்துவது மற்றும் நகர்ப்புறங்களில் போதிய குடிநீர் விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். பீகாரில் உள்ள பல்வேறு நகரங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 12-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கவும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
பீகாரின் நலனுக்கு எதிராகவும் முதலீடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமர் குறை கூறினார். எதிர்க்கட்சிகள் வளர்ச்சிக் குறித்து பேசும் போதெல்லாம் கடையடைப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக கொண்டுள்ளதை மக்கள் நினைவில் வைத்துள்ளதாக பிரதமர் கூறினார். இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக அம்மாநில இளைஞர்களின் நம்பிக்கையை அவர்களால் ஒரு போதும் பெற முடியாது என்று அவர் கூறினார். ஊழல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மாஃபியா மற்றும் பாழடைந்த உள்கட்டமைப்புகள் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் ஊக்குவித்து வருவதாக பிரதமர் குற்றம் சாட்டினார்.
பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அம்மாநில இளைஞர்கள் தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பீகாரில் உள்ள மர்கௌரா ரயில் இஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். இந்தத் தொழிற்சாலையில் முதல் முறையாக உற்பத்தி செய்யப்பட்ட ரயில் எஞ்சின் ஆப்பிரிக்க நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார். முந்தைய காலத்தில் பின்தங்கிய பகுதியாக இருந்த சிவான் மாவட்டம், இந்த தொழிற்சாலை நிறுவப்பட்ட பிறகு முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் கூறினார். ரயில் எஞ்சின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக இந்த மாவட்டம் புகழ் பெற்று வருவதாக அவர் கூறினார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த முந்தைய அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்த பிரதமர், ரயில் எஞ்சினை உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகள் வலிமையான ரயில் போக்குவரத்து சேவையைப் பெறுவது பெருமிதம் அளிப்பதாக உள்ளதென்று கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையின் மையமாக பீகார் உருவெடுக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பீகாரில் உற்பத்தி செய்யப்படும் மக்கானா, பழவகைகள், காய்கறிகள், சர்வதேச சந்தைகளை சென்றடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதே போல் பீகாரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும் என்று அவர் கூறினார். புதிய பொருள்களை உருவாக்குவதில் அம்மாநில இளைஞர்களின் செயல்பாடுகள் தற்சார்பு இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு உதவிடும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.
பீகாரில் மேம்படுத்தப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்பு மாநிலத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், பீகார் முழுவதும் சாலைகள், ரயில்வே, விமானப் பயணம் மற்றும் நீர்வழிகளில் முன்னெப்போதும் இல்லாத முதலீடு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பீகார் தொடர்ந்து புதிய ரயில்களைப் பெற்று வருகிறது, அவற்றில் அதிநவீன வந்தே பாரத் ரயில்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, பாபா ஹரிஹர்நாத்தின் நிலம் இப்போது புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் பாபா கோரக்நாத்தின் நிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறி, திரு மோடி ஒரு முக்கிய மைல்கல் அறிவிப்பை வெளியிட்டார். புதிய பாட்னா-கோரக்பூர் வந்தே பாரத் ரயில் பூர்வாஞ்சலில் உள்ள சிவ பக்தர்களுக்கு நவீன பயண விருப்பத்தை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். இந்த ரயில் புத்தர் தவம் செய்த பூமிக்கும் அவரது மகாபரிநிர்வாண தலமான குஷிநகருக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகவும் செயல்படுகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய முயற்சிகள் பீகாரில் தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாத் துறைக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றங்கள் பீகார் உலக சுற்றுலா வரைபடத்தில் மிகவும் முக்கியமாக பிரகாசிக்க உதவும் என்று அவர் கூறினார். இதன் விளைவாக, பீகார் இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதும், பாகுபாட்டை நீக்குவதும் அரசியலமைப்பின் நோக்கம் என்பதை உறுதிப்படுத்திய திரு. மோடி, 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரத்தின் மூலம் இந்தக் கொள்கைக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தார். முந்தைய ஆட்சியின் அணுகுமுறையுடன் இதை அவர் வேறுபடுத்தி, அவர்களின் அரசியல் "குடும்பத்திற்கு முன்னுரிமை" என்பதை மையமாகக் கொண்டது, அவர்களின் சொந்த நலன்களுக்கு மட்டுமே சேவை செய்கிறது என்று கூறினார். பீகாரிலும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதையே அவர்கள் நோக்கமாக வைத்துள்ளதாக அவர் விமர்சித்தார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இத்தகைய வம்ச அரசியலை உறுதியாக எதிர்த்தார் என்றும், இந்தக் கட்சிகள் அவரது மரபை மீண்டும் மீண்டும் அவமதிப்பதாக குற்றம் சாட்டினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு கட்சியுடன் தொடர்புடைய சமீபத்திய சம்பவத்தை அவர் குறிப்பிட்டார், மேலும் பீகார் முழுவதும் மன்னிப்பு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், எந்தவொரு மன்னிப்பும் கேட்கப்படுமா என்று அவர் சந்தேகம் தெரிவித்தார், இந்தக் கட்சிகள் தலித்துகள், மீது உண்மையான மரியாதையைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார். முந்தைய ஆட்சிகள் டாக்டர் அம்பேத்கரின் உருவத்தை தங்கள் காலடியில் வைத்தாலும், தமது இதயத்தில் டாக்டர் அம்பேத்கரை வைத்திருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அம்பேத்கரை அவமதிப்பதன் மூலம் தங்களை டாக்டர் அம்பேத்கரை விட பெரியவர்களாக சித்தரிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார், மேலும் பாபா சாஹேப்பிற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை பீகார் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
பீகாரின் விரைவான முன்னேற்றத்திற்குத் தேவையான ஏவுதளம் திரு நிதிஷ் குமாரின் முயற்சிகள் மூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். பீகாரை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வது இப்போது அவர்களின் கூட்டணியின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார். பீகார் இளைஞர்கள் மீது திரு மோடி முழு நம்பிக்கை தெரிவித்தார், அவர்கள் ஒன்றாக சேர்ந்து, மாநிலத்தின் பண்டைய மகிமையை மீட்டெடுப்பார்கள், மேலும் பீகாரை வளர்ந்த இந்தியாவின் சக்திவாய்ந்த இயந்திரமாக மாற்றுவார்கள் என்று அவர் கூறினார். தற்போதைய வளர்ச்சி முயற்சிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.
இந்த நிகழ்வில் பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், திரு ஜிதன் ராம் மஞ்சி, திரு கிரிராஜ் சிங், திரு சிராக் பாஸ்வான், திரு நித்யானந்த் ராய், திரு ராம் நாத் தாக்கூர், டாக்டர் ராஜ் பூஷண் சவுத்ரி, திரு சதீஷ் சந்திர துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
பீகாரில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் சிவானில் பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பிராந்தியத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் ரூ.400 கோடிக்கு மேல் மதிப்புள்ள புதிய வைஷாலி-தியோரியா ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் ஒரு புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதலாக, வடக்கு பீகாரில் இணைப்புக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் முசாபர்பூர் மற்றும் பெட்டியா வழியாக பாடலிபுத்ரா மற்றும் கோரக்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
"இந்தியாவில் தயாரிப்போம் - உலகத்திற்காக உருவாக்குவோம்" என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் மேம்படுத்தும் வகையில், கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மர்ஹோவ்ரா ஆலையில் கட்டப்பட்ட அதிநவீன ரயில் என்ஜினையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் முதல் ஏற்றுமதி ரயில் என்ஜின் இது. அவை அதிக குதிரைத்திறன் கொண்ட இயந்திரங்கள் ஆகும். மேம்பட்ட ஏசி உந்துவிசை அமைப்பு, நுண்செயலி அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள், பணிச்சூழலியல் வண்டி வடிவமைப்புகள் மற்றும் மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் போன்ற தொழில்நுட்பங்களை அவை கொண்டுள்ளன.
கங்கை நதியைப் பாதுகாத்தல் மற்றும் புத்துயிரூட்டல் ஆகியவற்றுக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர், இந்தப் பிராந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.1800 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்து வைத்தார்.
பீகார் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள குடிமக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ரூ.3000 கோடிக்கு மேல் மதிப்புள்ள நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பிராந்தியத்தில் மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், பீகாரில் 500 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு திறனுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா, சிவான் உள்ளிட்ட மாநிலத்தின் 15 கிரிட் துணை மின்நிலையங்களில் தனித்தனி பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு நிறுவப்படுகிறது. ஒவ்வொரு துணை மின்நிலையத்திலும் நிறுவப்படும் பேட்டரியின் திறன் 20 முதல் 80 மெகாவாட் வரை இருக்கும். ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை நேரடியாக தொகுப்புக்கு வழங்குவதன் மூலம், விநியோக நிறுவனங்கள் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை இது தவிர்க்கும், இதனால் நுகர்வோர் பயனடைவார்கள்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள 53,600 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல் தவணையையும் பிரதமர் வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ், 6,600 க்கும் மேற்பட்ட கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் கிரஹப் பிரவேச விழாவைக் குறிக்கும் வகையில், சில பயனாளிகளுக்கு சாவிகளையும் அவர் வழங்கினார்.
***
(Release ID: 2137954)
AD/SMB/SV/PKV/RR/KPG/KR/DL
(Release ID: 2138069)