பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – ஜெர்மனி இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை

Posted On: 17 JUN 2025 11:58PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் அதிபர் திரு பிரீட்ரிக் மெர்ஸை சந்தித்துப் பேசினார். 2025-ம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மன் அதிபர் திரு மெர்ஸ் பதவியேற்றுக் கொண்ட பிறகு இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.  அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த வாரம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து ஜெர்மன் அரசு சார்பில் விடுக்கப்பட்ட இரங்கல் செய்திக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா – ஜெர்மன் இடையேயான நட்புறவு வலுவடைந்து வருவதற்கு  இருதலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பசுமை எரிசக்தி, நீடித்த வளர்ச்சி, தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதென இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-ஜெர்மனி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், இரு நாடுகள் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவது எனவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

உலக அளவில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு தீவிரவாத செயல்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தும் இருதலைவர்களும் தங்களது கருத்துக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். ஜெர்மன் அதிபர் இந்தியாவில் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தை ஆவலுடன் ஏதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

***

(Release ID: 2137064)

AD/SV/KPG/KR

 


(Release ID: 2137245)