விவசாயத்துறை அமைச்சகம்
15 நாட்கள் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் நிறைவு
Posted On:
12 JUN 2025 3:24PM by PIB Chennai
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று குஜராத் மாநிலம் பர்தோலியில் நடைபெற்ற வேளாண் சம்மேளனத்தில் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 15 நாட்களாக நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் வேளாண் மேம்பாடு, விதைப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
1928-ம் ஆண்டு ஜூன் 12 அன்று, சர்தார் வல்லபாய் படேல், பர்தோலியில் சத்தியாக்கிரக போராட்டத்திற்காக இதே நாளில் நடைபெற்ற கூட்டத்தை நினைவு கூரும் வகையில் தாம் இந்த விவசாயிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாக அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளுக்கு 22 சதவீத வரியை உயர்த்தியதற்கு எதிராக சர்தார் படேல் போராட்டத்தைத் தொடங்கியதாகவும் இதில் பெண்கள் பெரும் பங்கு வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைக் கருத்தில் கொண்டு வளர்ச்சி அடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழும் விவசாயம், 18% பங்களிப்பைக் கொண்டுள்ளதாகவும் நாட்டின் மக்கள் தொகையில், பாதி பேர் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை சார்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த சங்கல்ப இயக்கத்தின் கீழ், 16 ஆயிரம் வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்ட 2,170 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் கிராமந்தோறும் சென்று விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வேளாண் ஆராய்ச்சி குறித்த தகவல்களை வழங்கினர். மேலும் தட்பவெப்ப நிலை, மண்வளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வேளாண் பணிகளில் சமச்சீர் உரங்கள், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டன.
நெல், கோதுமை, நிலக்கடலை, மக்காச்சோளம், சோயாபீன் ஆகியவை குஜராத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவுதம், ஆமணக்கு, சீரகம், பெருஞ்சீரகம், பேரீச்சம்பழம் போன்ற குறிப்பிட்ட வேளாண் விளை பொருட்களில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டு நடவடிக்கைகள் மூலம் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதிலும், தோட்டக்கலைத் துறையிலும் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135963
---
AD/TS/SV/KPG/DL
(Release ID: 2136020)