மக்களவை செயலகம்
திரு கே எஸ் ஹெக்டே-க்கு மக்களவைத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Posted On:
11 JUN 2025 3:08PM by PIB Chennai
மக்களவை முன்னாள் தலைவர் திரு கே எஸ் ஹெக்டேயின் பிறந்தநாளான இன்று மக்களவையில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மக்களவை தலைமைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவை தலைமைச் செயலாளர் திரு பி.சி மோடி, இரு அவைகளின் தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் ஆகியோரும் திரு ஹெக்டேக்கு மரியாதை செலுத்தினர்.
திரு கே எஸ் ஹெக்டே தலைசிறந்த நாடாளுமன்றவாதியாகவும், புகழ்பெற்ற நீதிபதியாகவும், இருந்தவர். 1952-ல் மாநிலங்களவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மைசூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து 1957-ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தில்லி, இமாச்சலப்பிரதேச உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதியாக செயல்பட்டார். 1967-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 1973 ஏப்ரல் 30 அன்று பதவியை ராஜினாமா செய்தார்.
1977-ல் திரு ஹெக்டே பெங்களூர் தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் நீலம் சஞ்சீவ ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து 1977, ஜூலை 21 அன்று திரு ஹெக்டே மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஜனவரி மாதத்தில் அவைத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்தபின் திரு ஹெக்டே கர்நாடகாவில் தமது சொந்த ஊரில் குடியேறினார். 1990 மே 24 அன்று திரு ஹெக்டே காலமானார்.
மக்களவை தலைமைச் செயலகத்தால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள திரு கே எஸ் ஹெக்டேயின் வாழ்க்கை வரலாறு கொண்ட கையேடு பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.
****
(Release ID: 2135648)
AD/TS/SMB/SG/KR
(Release ID: 2135706)