சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் உலக உணவுப் பாதுகாப்பு தின நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டா சிறப்புரையாற்றினார்
உடல் பருமனைத் தடுக்க எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் : திரு ஜே.பி. நட்டா
Posted On:
07 JUN 2025 5:43PM by PIB Chennai
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனமான நிம்ஹான்ஸில் (NIMHANS) இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். “பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உணவு உட்கொள்வதன் மூலம் உடல் பருமனைத் தடுத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர் முதன்மை உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் ஆணையத்தால் (எஃப்எஸ்எஸ்ஏஐ - FSSAI) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, உடல் பருமன் போன்ற தொற்றாத நோய்களைத் தடுப்பதில் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கிய பங்கை எடுத்துக் கூறியது. இது ஆரோக்கியமான உணவு முறைகள் மூலம் நோய்த் தடுப்பை மேம்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை எதிரொலித்தது. மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் திரு நட்டா தனது முதன்மை உரையில், உடல் பருமனைத் தடுப்பது, நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் உடல் பருமன், தொற்றா நோய்கள் ஆகியவற்றின் சுமையை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை வலியுறுத்திய திரு நட்டா, "உடல் பருமனைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு முயற்சி அவசியம் என்றார். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு, ஆரோக்கியமான இந்தியா அவசியம் எனவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தின கருப்பொருளான "உணவுப் பாதுகாப்பு: செயல்பாட்டில் அறிவியல்" என்பதன் மீதான உறுதிப்பாட்டை திரு நட்டா எடுத்துரைத்தார்.
2008 முதல் 2020 வரை, இந்தியாவில் நகர்ப்புறங்களில் உடல் பருமன் 39.6% அதிகரித்துள்ளது எனவும் அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இது 23.1% அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். 2050-ம் ஆண்டுக்குள், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்ற ஒரு ஆய்வையும் அவர் மேற்கோள் காட்டினார்.
குறிப்பாக நகர்ப்புறங்களில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களின் சவாலை சுட்டிக் காட்டிய திரு நட்டா, கலப்பட உணவுகளைப் பொறுத்தவரை குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றார். இந்த சவாலை எதிர்கொள்ள, இளம் வயதிலேயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை எடுத்துரைத்த திரு நட்டா, அனைவரும் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஒருவரின் மனதிலும் உடலிலும் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும் சத்தான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரதமரின் தெளிவான அழைப்புக்கு அனைவரும் செவிசாய்த்து, எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்கவும், சரியான உணவுப் பழக்கவழக்கங்களை உறுதி செய்யவும் வேண்டும் என திரு ஜே.பி. நட்டா வலியுறுத்தினார்.
பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், சிறுதானியங்கள் போன்ற உணவுகளை உள்ளடக்கிய பாரம்பரிய உணவுகள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்று கூறினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தமது சிறப்புரையில், பாதுகாப்பான உணவையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் உருவாக்குவதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
***
(Release ID: 2134851)
AD/TS/PLM/DL
(Release ID: 2134892)