உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற எல்லை தாண்டிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா வழங்கினார்
Posted On:
30 MAY 2025 5:06PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற எல்லை தாண்டிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பூஞ்ச் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் மதரஸாக்கள் மீது பாகிஸ்தான் நடத்திய கோழைத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். பாகிஸ்தானின் கண்டிக்கத்தக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது என்று அவர் குறிப்பிட்டார். இழப்பீடு மற்றும் அரசு வேலைகள், உயிர் இழப்பை முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு முதல் பூஞ்ச் மற்றும் கதுவா பகுதி வரை ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே எழுந்த தேசபக்தி உணர்வு, தேசத்தின் உறுதியை வலுப்படுத்தியுள்ளதாக திரு அமித் ஷா மேலும் கூறினார்.
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாகவும், அதன் பிறகு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடனடியாகவே பதிலடி கொடுக்கும் கொள்கையின் கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களை தாங்கள் அழித்ததாகவும் திரு அமித் ஷா கூறினார். முதல் முறையாக, பாகிஸ்தானின் எல்லைக்குள் அமைந்துள்ள பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களை இந்தியப் படைகள் தகர்த்ததாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் உறுதியாலும், நமது அமைப்புகள் வழங்கிய துல்லியமான உளவுத்தகவல்களாலும், ராணுவத்தின் குறிப்பிடத்தக்க துணிச்சலாலும், நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு ராணுவ நிலைகள் மற்றும் பொது நிறுவனத்தையும் இந்தியா தாக்கவில்லை என்றும், மிகுந்த துல்லியத்துடனும் நிதானத்துடனும் இந்தியப் படைகள் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை முற்றிலுமாக அழித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இதைத் தொடர்ந்து பதற்றமடைந்த பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் குடியிருப்புப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் பூஞ்ச் பகுதி அதிக சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132757
****
(Release ID: 2132731)
AD/TS/GK/KPG/DL
(Release ID: 2132878)