கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலக்கியத்திலிருந்து மக்கள் உத்வேகம் பெற்று, தங்களது குறிக்கோள்களை அடைய முயற்சிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Posted On: 30 MAY 2025 11:42AM by PIB Chennai

புதுதில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் மத்திய   கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சாகித்ய அகாடமியானது குடியரசுத் தலைவர் மாளிகையுடன் இணைந்து, “இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்” என்ற தலைப்பில் வரலாற்று சிறப்பு மிக்க இலக்கிய மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில், நாடு முழுவதிலுமிருந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்து

 உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தனது உரையில் எழுத்தாளர்கள் மீதான தனது வாழ்நாள் மரியாதையையும் போற்றுதலையும் வெளிப்படுத்தினார். இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் மாளிகையில்  நடத்துவது தனது நேசத்துக்குரிய விருப்பமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். ஒடியாவின் உத்கல்மணி கோபபந்து தாஸின் வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்.  "இந்த நாட்டின் மண்ணில்  எங்கிருந்தாலும், ஜகந்நாத் பூரி யாத்திரை வளாகத்தில் இருப்பதைப் போலவே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்" என்று தனது எண்ணத்தை எடுத்துரைத்தார். சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்திக்கு, வால்மீகி ராமாயணத்தில் இருந்து சீதா-ராமரின் கதையை மேற்கோள் காட்டி அவர் பேசினார். தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஃபக்கீர் மோகன் சேனாபதி கதையின் "ரேவதி" கதாப்பாத்திரம் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது இலக்கியத்தின் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார். சாமானிய மக்கள் இலக்கியத்திலிருந்து உத்வேகம் பெறுவதுடன், அதிலிருந்து தங்களது இலட்சியங்களை அடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதிபா ரேயின் திரௌபதி நாவல், மனித உணர்வுகளில் வேரூன்றிய ஒரு உன்னதமான உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது. ஆனால் இரக்கம், உணர்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இன்றைய இலக்கியம் ஒருவரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அதனை போதனை இலக்கியம் என்று அழைக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இம்மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டுப் பேசிய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இலக்கியம் மாற்றமடைந்து வருகிறதா? என்று வினா எழுப்புவதைக் காட்டிலும், சமூகம் எவ்வாறு மாறிவிட்டது என்பதைக் கருத்தில் கொள்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று  தெரிவித்தார். ஏனெனில், இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகும். சமூகத்தின் தீமைகளை எப்போதும் சுட்டிக்காட்டும் எழுத்தாளராக முன்ஷி பிரேம்சந்தின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், நாடு கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அனுபவித்து வருவதாக அவர் கூறினார். குடியரசுத் தலைவரின் தலைமையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது நாட்டில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

***

(Release ID: 2132587)
AD/TS/SMB/RR/SG

 


(Release ID: 2132613)