நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வணிகர்கள்/ விற்பனையாளர்களுக்கான கோதுமை கையிருப்பு உச்ச வரம்பை மத்திய அரசு அறிவித்துள்ளது -2026 மார்ச் 31 வரை இது பொருந்தும் என அறிவிப்பு
Posted On:
29 MAY 2025 4:23PM by PIB Chennai
ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பதுக்கல், நியாயமற்ற விற்பனை நடைமுறைகளைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள வர்த்தகர்கள்/மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய அளவிலான விநியோகச் சங்கிலியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், பதப்படுத்துபவர்கள் ஆகியோருக்குப் பொருந்தக்கூடிய வகையில் கோதுமையின் மீது உச்ச இருப்பு வரம்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆணை 2025 மே 27, 2025 அன்று வெளியிடப்பட்டது. இது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 2026 மார்ச் 31 வரை பொருந்தும்.
கோதுமை உச்ச இருப்பு வரம்பு பின்வருமாறு:
(i) வர்த்தகர்கள்/மொத்த விற்பனையாளர்: 3000 மெட்ரிக் டன்;
(ii) சில்லறை விற்பனையாளர்: ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன்.
(iii) பெரிய அளவிலான விநியோகச் சங்கிலி சில்லறை விற்பனையாளர்: ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன்
(iv) பதப்படுத்தும் நிறுவனங்கள்: மாதாந்திர நிறுவப்பட்ட திறனில் (MIC) 70% அளவு 2025-26 நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களால் பெருக்கப்படும்.
அனைத்து கோதுமை சேமிப்பு நிறுவனங்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை இருப்பு தொடர்பான விவரங்களை https://evegoils.nic.in/wsp/login என்ற இணையதளத்தில் அறிவித்துத் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இது தொடர்ந்து https://foodstock.dfpd.gov.in என்ற தளத்துக்கு மாற்றப்படும். இணையதளத்தில் பதிவு செய்யாத அல்லது இருப்பு வரம்புகளை மீறும் எந்தவொரு நிறுவனமும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் பிரிவு 6, 7 ஆகியவற்றின் கீழ் பொருத்தமான தண்டனை நடவடிக்கைக்கு ஆட்படும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வைத்திருக்கும் இருப்பு, குறிப்பிடப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் அவை நிர்ணயிக்கப்பட்ட இருப்பு வரம்புகளுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். நாட்டில் செயற்கையாக கோதுமை பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இந்த இருப்பு வரம்புகளை அமல்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
மாநில நிறுவனங்கள் மற்றும் இந்திய உணவுக் கழகம் மூலம் மத்திய அரசு 298.17 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை 27.05.2025 வரை கொள்முதல் செய்துள்ளது. இது பொது விநியோகம், பிற சந்தை தலையீட்டுத் திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது. விலைகளைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் கோதுமை எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை கோதுமையின் இருப்பு நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
----
(Release ID: 2132343)
AD/TS/PLM/KPG/RR
(Release ID: 2132412)