குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உரம் மற்றும் இதர மானியங்கள் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக செல்லவேண்டும்- குடியரசு துணைத்தலைவர்

Posted On: 26 MAY 2025 4:35PM by PIB Chennai

விவசாயிகளுக்கு அனைத்து வடிவிலான உதவிகளும் நேரடியாக கிடைக்கும் போது அவர்களின் வருவாய் உண்மையில் அதிகரிக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூரில் வேளாண்-தொழில்துறை மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய அவர், அமெரிக்காவில் சராசரி குடும்பங்களின் வருவாயை விட, விவசாயிகளின் குடும்ப வருவாய் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அரசின் உதவிகளை விவசாயிகள் அங்கு நேரடியாக பெறுகிறார்கள். நமது நாட்டிலும் உரங்களுக்கான மானியம் மற்றும் இதர பல மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவை மறைமுகமாக உள்ளன.  இவை அனைத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டால் ஒவ்வொரு விவசாயியும் ஆண்டு தோறும் குறைந்தபட்சம் ரூ.35,000 பெறுவார்கள் என்பது எனது மதிப்பீடாகும் என்றார்.  பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல் விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளும் நேரடியாக அவர்களின் கணக்குகளில் செலுத்தப்பட்டால்  பெருமளவு பயன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் வேளாண் துறையில் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். இவர்களை வேளாண் தொழில்முனைவோர் என அழைப்பதன் மூலம் வேளாண் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பால்வளம், காய்,கனி உற்பத்தியில் முன்னணி வகித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்று திரு தன்கர் குறிப்பிட்டார். நமது நாட்டிற்கு லட்சக்கணக்கான வேளாண் தொழில்முனைவோர் தேவைப்படுகிறார்கள் என அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,  பிரபல தொண்டு நிறுவனங்கள், கிராமங்களை தத்தெடுத்து அவற்றை மாற்றத்திற்கு உட்படுத்த உறுதிபூண்டால் வேளாண்மை அடிப்படையிலான தொழில்துறை சிறப்படையும் என்று அவர் தெரிவித்தார்.

கால்நடை வளர்ப்பில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டிய திரு தன்கர், குறிப்பாக பால்வளம் மற்றும் காய்கனிகள் உற்பத்தியில் அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளால் இந்தத்துறைகளில் உலகிற்கு தலைமை தாங்க நடவடிக்கை மேற்கொள்வதை இலக்காக கொள்ளவேண்டும் என்றார்.

பலவிதமான சிரமங்கள் உள்ளபோதும், பருவநிலைகளில் மாறுபாடுகள் இருக்கும் போதும், அவர்களை சோதிக்கும் வகையில் மழை தாமதப்படும்போதும், பயிர் செய்தலை விவசாயிகள் கைவிடுவதில்லை என்று குறிப்பிட்ட திரு தன்கர் அவர்களை தொழில்துறை மற்றும் வணிகத்தில் ஊக்கப்படுத்தினால் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை 2047-க்கு முன்பாகவே அடைந்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131332

***

AD/SM/SMB/AG/DL


(Release ID: 2131406)