நித்தி ஆயோக்
நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை வளர்ந்த மாநிலங்கள் மூலம் நிறைவேற்ற முடியும்: பிரதமர்
வளர்ந்த பாரதம் @2047 என்பதை அடைய ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும், கிராமமும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கிப் பாடுபட வேண்டும்: பிரதமர்
சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தலா ஒரு உலகத் தர சுற்றுலா தலத்தையாவது உருவாக்குமாறு பிரதமர் மாநிலங்களை வலியுறுத்துகிறார்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 'முதலீட்டுக்கு ஏற்ற சாசனத்தை' தயாரிக்குமாறு பிரதமர் நிதி ஆயோக்கிடம் கேட்டுக்கொள்கிறார்
உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை குறிப்பிட்டு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்த மாநிலங்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்
நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்காக மாநில அளவில் நதி நீர் இணைப்புகளை உருவாக்குவதை பிரதமர் ஊக்குவிக்கிறார்
2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் நிலையான நகர்ப்புற வளர்ச்சி, திட்டமிடப்பட்ட நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றிற்கு பிரதமர் அழைப்பு விடுக்கிறார்
வளர்ந்து வரும் துறைகளை நோக்கி இளைஞர்களின் திறன்
Posted On:
24 MAY 2025 7:56PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் கருப்பொருள் 'வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள்' என்பதாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது.
நாடு 'வளர்ந்த பாரதமாக' ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பமாகும் என்று பிரதமர் கூறினார். இது எந்தக் கட்சியின் திட்டமும் அல்ல, 140 கோடி இந்தியர்களின் விருப்பமாகும். இந்த இலக்கை நோக்கி அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாம் மகத்தான முன்னேற்றத்தை அடைவோம் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடையும் என்றும், பின்னர் 2047 க்கு முன்பே 'வளர்ந்த பாரதம்' இலக்கு அடையப்படும் என்றும் நாம் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்த மாற்றத்தின் வேகத்தை இந்தியா அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாநிலங்கள் தங்கள் உற்பத்தி வலிமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். இந்திய அரசு உற்பத்தி இயக்கத்தை அறிவித்துள்ளது என்று அவர் கூறினார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை பிரதமர் குறிப்பிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீடுகளை எளிதாக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டி, மாநிலங்கள் அதை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டை வலியுறுத்திய பிரதமர், தேசிய கல்விக் கொள்கை கல்வி மற்றும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி, முப்பரிமாண அச்சிடுதல் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்த பல்வேறு திறன்களுக்கு மாநிலங்கள் திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார். நமது மக்கள்தொகை வலிமையின் காரணமாக உலகின் திறன் தலைநகராக மாற முடியும் என்று அவர் கூறினார். திறன் மேம்பாட்டிற்கான ரூ.60,000 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் கூறினார். திறன் மேம்பாட்டை மேம்படுத்த மாநிலங்கள் நவீன பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற பயிற்சி மையங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
சைபர் பாதுகாப்பை ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஹைட்ரஜன் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவை மகத்தான ஆற்றல் மற்றும் வாய்ப்புகளைக் கொண்ட துறைகள் என்று அவர் கூறினார்.
ஜி20 உச்சிமாநாடு, இந்தியாவை உலகளாவிய சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்க உதவியது, மாநிலங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். உலகத் தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப குறைந்தது ஒரு சுற்றுலாத் தலத்தையாவது உருவாக்குமாறு அவர் மாநிலங்களை வலியுறுத்தினார். இந்தியா முழுவதும் இதுபோன்ற 25-30 சுற்றுலாத் தலங்களை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். மாநிலங்கள் நகரங்களை நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியின் இயந்திரமாக மாற்ற வேண்டும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆரம்ப நிதிக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதி உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மகளிர் சக்தியின் மகத்தான வலிமையை பிரதமர் வலியுறுத்தினார். பெண்கள் வளர்ச்சிப் பாதையில் இணையும் வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பணிபுரியும் பெண்கள் எளிதாக வேலை செய்வதில் கவனம் செலுத்தி, பொது மற்றும் தனியார் துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வெள்ளத்தை எதிர்த்துப் போராட மாநிலங்களுக்குள் நதிகளை இணைக்குமாறு பிரதமர் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார். சமீபத்தில் கோசி-மோச்சி இணைப்பு கட்டத்தைத் தொடங்கிய பீகார் மாநிலத்தை அவர் பாராட்டினார். கூட்டு முயற்சிகள் மூலம் வெற்றி பெற்றுள்ள முன்னேற விரும்பும் மாவட்டத் திட்டத்தையும் அவர் பாராட்டினார்.
விவசாயத்துறையில், ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு முன்னேறுவத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். வரும் நாட்களில் சுமார் 2,500 விஞ்ஞானிகள் கிராமங்கள் மற்றும் கிராமப்புற மையங்களுக்குச் செல்லும் வளர்ச்சியடைந்த விவசாய சங்கல்ப் இயக்கம் பற்றி அவர் பேசினார், அதில் அவர்கள் பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ரசாயனமற்ற விவசாயம் போன்ற தலைப்புகளில் விவாதிப்பார்கள். இந்த முயற்சியை ஆதரிக்குமாறு அனைத்து முதல்வர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுகாதார சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். கோவிட் தொடர்பான எந்தவொரு சவால்களுக்கும் தயாராக இருக்க ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் முன்னேற்பாடுகளை நாம் சரிபார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து நல்ல மருத்துவர்களை இணைக்கும் வகையில், தொலை மருத்துவத்தை மாநிலங்கள் விரிவுபடுத்த வேண்டும் என்றும், மின்னணு சஞ்சீவனி மற்றும் தொலைத்தொடர்பு ஆலோசனை சலுகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
'ஆபரேஷன் சிந்தூரை ஒரே ஒரு முயற்சியாகக் கருதக்கூடாது, நீண்டகால அணுகுமுறையாக நாம் பின்பற்ற வேண்டும். சிவில் தயார்நிலைக்கான நமது அணுகுமுறையை நவீனமயமாக்க வேண்டும்' என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்திய மாதிரிப் பயிற்சிகள், சிவில் பாதுகாப்புக்கான நமது கவனத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளன, மாநிலங்கள் சிவில் பாதுகாப்புத் தயார்நிலையை நிறுவனமயமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க வழிவகுத்த அதன் துல்லியமான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களுக்காக முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டினர். பிரதமரின் தலைமைத்துவத்தையும் ஆயுதப்படைகளின் வீரத்தையும் அவர்கள் ஒருமித்த குரலில் பாராட்டினர். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கிய முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர், இது பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தி, நமது திறன்களில் நம்பிக்கையை அதிகரித்தது.
2047-இல் வளர்ந்த பாரதத்திற்கு வளர்ந்த மாநிலங்கள் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு முதலமைச்சர்/துணைநிலை ஆளுநர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர், மேலும் அவர்களின் மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். விவசாயம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவு, குடிநீர், இணக்கங்களைக் குறைத்தல், நிர்வாகம், டிஜிட்டல்மயமாக்கல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் சில முக்கிய பரிந்துரைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. 2047 ஆம் ஆண்டிற்கான மாநில தொலைநோக்குப் பார்வையை உருவாக்குவதற்கான தங்கள் முயற்சிகளையும் பல மாநிலங்கள் பகிர்ந்து கொண்டன.
கூட்டத்தின் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த பரிந்துரைகளை ஆய்வு செய்யுமாறு பிரதமர் நிதி ஆயோக்கை கேட்டுக் கொண்டார். நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம், 2047 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வையை வரையறுக்கும் மற்றும் கோடிட்டுக் காட்டும் அதன் 10 ஆண்டு பயணத்தின் ஒரு மைல்கல் என்றும் அவர் கூறினார். நிர்வாகக் குழுக் கூட்டங்கள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவியுள்ளன என்றும், கூட்டு நடவடிக்கை மற்றும் பகிரப்பட்ட அபிலாஷைகளுக்கான தளமாக இது உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், கூட்டுறவு கூட்டாட்சியின் சக்தி மூலம் வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் பாதையில் இந்தியா முன்னேறி வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
****
(Release ID: 2130983)
SM/BK/SG
(Release ID: 2131117)
Read this release in:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada