பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி டஸ்ட்லிக்-6 தொடக்கம்
Posted On:
16 APR 2025 2:39PM by PIB Chennai
இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பான டஸ்ட்லிக்-6 புனேவில் ஆந்திலில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (16.04.2025) தொடங்கியது. இந்த பயிற்சி 2025 ஏப்ரல் 28 வரை நடைபெறவுள்ளது.
60 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் ஜாட் ரெஜிமென்ட், இந்திய விமானப்படை ஆகியவை பங்கேற்றுள்ளன. உஸ்பெகிஸ்தான் படைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கூட்டுப் பயிற்சி டஸ்ட்லிக்-6 என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாற்றி மாற்றி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். கடந்த பதிப்பு ஏப்ரல் 2024-ல் உஸ்பெகிஸ்தானின் டெர்மெஸ்சில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியின் கருப்பொருள் "கூட்டு பன்முகக் களம், மரபுசார் செயல்பாடுகள்" என்பதாகும். ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைப் பாதுகாப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பது போன்றவற்றில் இப்பயிற்சி கவனம் செலுத்தும். தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகளுக்காக வீரர்கள் மட்டத்தில் ஒரு கூட்டு நடவடிக்கை மையத்தை நிறுவுதல், கண்காணிப்பு, சோதனைகள், தேடுதல் போன்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல், பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்க விமான விமான செயல்பாடுகள் போன்றவையும் இந்தப் பயிற்சியில் அடங்கியுள்ளது.
கூட்டுப் பயிற்சியான டஸ்ட்லிக்-6, இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம், தோழமையை மேம்படுத்த உதவும். இந்த கூட்டுப் பயிற்சி பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
***
(Release ID: 2122061)
TS/PLM/AG/KR
(Release ID: 2122071)