பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய-சீன எல்லையில் ரோந்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2025 5:17PM by PIB Chennai
இந்தியா-சீனா எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவத் தலைமைத் தளபதி வெளியிட்ட தகவல் குறித்து நாடாளுமன்றத்தில் திரு ராகுல் காந்தி தெரிவித்த சில கருத்துக்கள் மீதான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 பிப்ரவரி 04) சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எல்லையில் பாரம்பரிய ரோந்து முறைகளில் தற்காலிகமாக ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பாகவே ராணுவத் தளபதி கூறியதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் படைகளை விலக்கிக் கொள்ளும் முயற்சிகளைத் தொடர்ந்து இந்த ரோந்து நடைமுறைகள் இப்போது அவற்றின் பாரம்பரிய முறைக்கு வந்துள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்த விவரங்கள் முன்னதாக நாடாளுமன்றத்தில் பகிரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் ராணுவத் தலைமைத் தளபதி கூறியதாகக் கூறப்படும் வார்த்தைகள் எந்தவொரு சூழலிலும் அவரால் கூறப்படவில்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் துல்லியமும் பொறுப்பான வார்த்தைகளும் அவசியம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிராந்திய பிரச்சினைகளைப் பொறுத்தவரை, அக்சாய் சின்னில் உள்ள 38,000 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பு 1962-ம் ஆண்டு போரிலிருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், 1963-ம் ஆண்டில் 5,180 சதுர கிலோ மீட்டர் பகுதியை பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரலாற்று உண்மைகள் இந்தியாவின் எல்லைகள் தொடர்பான சொல்லாடலின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
----
TS/PLM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2099850)
வருகையாளர் எண்ணிக்கை : 45