பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்


தேசிய கற்றல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் புதிய கற்றல் முறைகள், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நமது இலக்கை அடைய உதவும்: பிரதமர்

புதுமையான சிந்தனையையும் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையையும் பின்பற்றுவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்

குடிமைப் பணிகள் பயிற்சி நிறுவனங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் பிரதமர் வலியுறுத்தல்

செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாக பயன்படுத்துவது நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்: பிரதமர்

Posted On: 19 OCT 2024 6:57PM by PIB Chennai

 

 

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கர்மயோகி இயக்கத்தின் மூலம், நமது நாட்டின் வளர்ச்சியின் உந்து சக்திக்கு ஏற்ற மனித வளத்தை உருவாக்குவதே நமது குறிக்கோள் என்று கூறினார். இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இந்த ஆர்வத்துடன் நாம் தொடர்ந்து பணியாற்றினால், நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். தேசிய கற்றல் வாரத்தின் போது புதிய கற்றல்களும் அனுபவங்களும் வலிமையை அளித்து, பணி முறைகளை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார். இது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நமது இலக்கை அடைய உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்

கடந்த 10 ஆண்டுகளில்  மாற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கினார். அதன் நல்ல தாக்கத்தை இன்று மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்று அவர் கூறினார். அரசுப் பணியாற்றுபவர்களின் நல்ல முயற்சிகள், கர்மயோகி இயக்கம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக இது நடைபெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவை உலகம் ஒரு வாய்ப்பாக பார்க்கும் அதே வேளையில், இந்தியாவுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence -AI), மற்றொன்று முன்னேற விரும்பும் இந்தியா (Asporational India -AI) என இரண்டு ஏஐ பற்றி அவர் பேசினார். இரண்டையும் சமநிலைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நல்ல மாற்றத்துக்கான இந்தியாவை உருவாக்க, செயற்கை நுண்ணறிவை நாம் வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும்  என்று கூறினார்.

டிஜிட்டல் புரட்சி, சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை காரணமாக தகவல் சமத்துவம் என்பது சாத்தியமாகிவிட்டது என்றும் பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவுடன், தகவல் செயலாக்கமும் சமமாக எளிதாகி வருகிறது என்று அவர் தெரிவித்தார். மக்களுக்கு தகவல் தெரிவிப்பதுடன் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் கண்காணிக்கவும் முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார். எனவே, உயர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப அரசு ஊழியர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதற்குக் கர்மயோகி இயக்கம் உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதுமையான சிந்தனை, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். புதிய சிந்தனைகளைப் பெறுவதற்கு புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி முகமைகள், இளைஞர்களின் உதவி ஆகியவற்றை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். துறைகள் பின்னூட்டக் கருத்துப் பெறும்  அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஐகாட் (IGOT) தளத்தைப் பாராட்டிய பிரதமர், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்றார். 1400-க்கும் மேற்பட்ட பாடத் திட்டங்கள் உள்ளன எனவும் பல்வேறு பாடத்திட்டங்களில் 1.5 கோடிக்கும் அதிகமான நிறைவு சான்றிதழ்கள் அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

 

குடிமைப் பணிகள் பயிற்சி நிறுவனங்கள் தனித்து செயல்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்களிடையே கூட்டு செயல்பாட்டையும் ஒத்துழைப்பையும் அதிகரிக்க அரசு முயற்சிக்கிறது என்று அவர் கூறினார். பயிற்சி நிறுவனங்கள் முறையான தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதித்து பின்பற்ற வேண்டும் எனவும் ஒட்டுமொத்த அரசு அணுகுமுறையை கற்பிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம் 2020-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள குடிமைப் பணி சேவையை வழங்க முயற்சிக்கிறநு. தேசிய கற்றல் வாரம் (என்எல்டபிள்யூ) அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் நிறுவன திறன் மேம்பாட்டிற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும். "ஒரே அரசு" என்ற செய்தியை உருவாக்கி, அனைவரையும் தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்து, வாழ்நாள் கற்றலை இது ஊக்குவிக்கும்.

*****

PLM/ KV

 

 

 



(Release ID: 2066390) Visitor Counter : 42