பிரதமர் அலுவலகம்

செப்டம்பர் 15-17 தேதிகளில் ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசாவுக்கு பிரதமர் பயணம்

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் சுமார் ரூ.660 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

ஜார்க்கண்டில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்

அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

காந்திநகர் மகாத்மா மந்திரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

பெண்களை மையமாகக் கொண்ட மிகப் பெரிய திட்டமான 'சுபத்ரா'வை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

புவனேஸ்வரில் நாடு முழுவதிலும் உள்ள பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப்பிரவேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்

கூடுதல் வீடுகள் கணக்கெடுப்புக்கான ஆவாஸ் + 2024 செயலியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்


Posted On: 14 SEP 2024 9:53AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 செப்டம்பர் 15-17 தேதிகளில் ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

செப்டம்பர் 15 அன்று ஜார்க்கண்ட் செல்லும் பிரதமர், காலை 10 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் டாடாநகர் பாட்னா வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். காலை 10.30 மணியளவில்ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் சுமார் ரூ.660 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில்  பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் பயனாளிகள் 20,000 பேருக்கு அனுமதிக் கடிதங்களையும் அவர் வழங்குவார்.

செப்டம்பர் 16 அன்று காலை 9.45 மணிக்கு காந்திநகரில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு, காலை 10.30 மணியளவில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 1:45 மணியளவில், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர், பிரிவு 1 மெட்ரோ நிலையத்திலிருந்து கிஃப்ட் சிட்டி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

செப்டம்பர் 17 அன்று ஒடிசா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், காலை 11.15 மணிக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு, நண்பகல் 12 மணியளவில், ஒடிசாவின் புவனேஸ்வரில் சுமார் ரூ.3800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

டாடாநகரில் பிரதமர்

சுமார் ரூ.660 கோடி  மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி  முடிவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தியோகர் மாவட்டத்தில் மதுபூர் புறவழிச் சாலை மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஹசாரிபாக் நகர பயிற்சி மையம் ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். இந்தப் பாதை நிறைவடைந்த பிறகு, மதுபூர் புறவழிச் சாலை ஹவுரா-தில்லி பிரதான பாதையில் ரயில்கள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும், கிரிதிஹ் மற்றும் ஜசிதிஹ் இடையேயான பயண நேரத்தை குறைக்கவும் உதவும். ஹசாரிபாக் டவுன் கோச்சிங் டிப்போ இந்த நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்க உதவும்.

போண்டாமுண்டா ராஞ்சி ஒற்றை ரயில் பாதையின் ஒரு பகுதியான குர்குரா கனரோன் இரட்டை  வழிப்பாதை திட்டத்தையும், ராஞ்சி, முரி மற்றும் சந்திரபுரா ரயில் நிலையங்கள் வழியாக ரூர்கேலா கோமோ வழித்தடத்தின் ஒரு பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும். இது தவிர, 04 சாலை கீழ் பாலங்கள், பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.

ஆறு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்  கீழ்காணும் வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும்:

1) டாடாநகர் - பாட்னா

2) பாகல்பூர் - தும்கா - ஹௌரா

3) பிரம்மபூர் - டாடாநகர்

4) கயா - ஹௌரா

5) தியோகர் - வாரணாசி

6) ரூர்கேலா - ஹவுரா

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் அறிமுகம், வழக்கமான பயணிகள், தொழில் வல்லுநர்கள், வணிக மற்றும் மாணவர் சமூகத்திற்கு பயனளிக்கும். இந்த ரயில்கள் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள பைத்யநாத் தாம், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கொல்கத்தாவில் (மேற்கு வங்கம்) உள்ள காளிகாட், பேலூர் மடம் போன்ற புனித யாத்திரைத் தலங்களுக்கு விரைவான பயணத்தை வழங்குவதன் மூலம் இப்பகுதியில் மத சுற்றுலாவை மேம்படுத்தும். இது தவிர, தன்பாத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழில்கள், கொல்கத்தாவில் உள்ள சணல் தொழில்கள், துர்காபூரில் இரும்பு மற்றும் எஃகு சார்ந்த தொழில்கள் ஆகியவையும் பெரும் ஊக்கத்தைப் பெறும்.

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20,000 பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களை பிரதமர் வழங்குவார். மேலும், பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியுதவியையும் அவர் விடுவிப்பார். 46 ஆயிரம் பயனாளிகளின்  கிரகப்பிரவேச கொண்டாட்டங்களிலும் பிரதமர் பங்கேற்கிறார்.

காந்திநகரில் பிரதமர்

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் ரீ-இன்வெஸ்ட் 2024- பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த இந்தத் திட்டம் தயாராக உள்ளது. இதில் உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகளை ஈர்க்கும் இரண்டரை நாள் மாநாடு இடம்பெறும். பங்கேற்பாளர்கள் முதலமைச்சர்கள் அளவிலான கூட்டம், தலைமை நிர்வாக அதிகாரி வட்டமேசை மற்றும் புதுமையான நிதி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் எதிர்கால எரிசக்தி தீர்வுகள் குறித்த சிறப்பு விவாதங்கள் உள்ளிட்ட விரிவான  நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். ஜெர்மனி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நார்வே ஆகியவை பங்குதாரர் நாடுகளாக பங்கேற்கின்றன. இதை நடத்தும் மாநிலமாக குஜராத் உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பங்குதாரர் மாநிலங்களாக பங்கேற்கின்றன.

200 ஜிகாவாட் புதைபடிவம் அல்லாத எரிபொருள் திறனை நிறுவுவதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு முக்கிய பங்களிப்பாளர்களை இந்த உச்சிமாநாடு கௌரவிக்கும். பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில்  நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் ஒரு கண்காட்சி  நடைபெறும். நீடித்த எதிர்காலத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தக் கண்காட்சி அடிக்கோடிட்டுக் காட்டும்.

அகமதாபாத்தில் பிரதமர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

சமகியாலி காந்திதாம் மற்றும் காந்திதாம் ஆதிப்பூர் ரயில் பாதைகளை நான்கு மடங்காக மாற்றுவது, அகமதாபாத்தில் உள்ள .எம்.சியில் பாரம்பரிய சாலைகளை மேம்படுத்துவது, பக்ரோல், ஹதிஜான், ரமோல் மற்றும் பஞ்சர்போல் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

30 மெகாவாட் சூரிய மின்சக்தி அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கட்ச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையத்தில் 35 மெகாவாட் பி..எஸ்.எஸ் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தையும், மோர்பி மற்றும் ராஜ்கோட்டில் 220 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

நிதிச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையை பிரதமர் தொடங்கி வைப்பார்.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பிரதமர் ஒப்புதல் அளிப்பார், இந்த வீடுகளுக்கான முதல் தவணையை விடுவிப்பதுடன்பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளையும் தொடங்கி வைப்பார்இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் ஊரகப் பிரிவுகளின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும் மாநிலத்தின் பயனாளிகளுக்கு அவர் வழங்குவார்.

மேலும், புஜ் முதல் அகமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில்களையும், நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே வரை, ஆக்ரா கண்டோன்மென்ட் முதல் பனாரஸ் வரை, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி வரை, வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

புவனேஸ்வரில் பிரதமர்

ஒடிசா அரசின் முன்னோடித் திட்டமான 'சுபத்ரா'வை புவனேஸ்வரில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது மிகப்பெரிய, தனித்து வாழும் பெண்களை மையமாகக் கொண்ட திட்டமாகும், மேலும் இது 1 கோடிக்கும் அதிகமான பெண்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 21-60 வயதுக்குட்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் 2024-25 முதல் 2028-29 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ .50,000/- பெறுவார்கள். இரண்டு சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ .10,000  பயனாளியின் ஆதார் இயக்கப்பட்ட மற்றும் டி.பி.டி இயக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி மாற்றத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

புவனேஸ்வரில் சுமார்  ரூ.2800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி  முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த ரயில்வே திட்டங்கள் ஒடிசாவில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, இப்பகுதியில் வளர்ச்சி மற்றும் இணைப்பை மேம்படுத்தும். ரூ.1,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

14 மாநிலங்களில்  பிரதமரின்  வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சுமார் 13 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியுதவியை பிரதமர் விடுவிப்பார். நாடு முழுவதும் உள்ள  பிரதமரின்  வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்) 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப்பிரவேச கொண்டாட்டங்கள் இந்த நிகழ்ச்சியின் போது நடைபெறும். பயனாளிகளுக்கு அவர்களது இல்லத்தின் சாவிகளை பிரதமர் வழங்குவார்பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்திற்கான கூடுதல் வீடுகளை கணக்கெடுப்பதற்காக ஆவாஸ் + 2024 செயலியையும் அவர் தொடங்கி வைப்பார். மேலும்பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-இன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்..

*****

BR/ KV

 

 

 



(Release ID: 2054874) Visitor Counter : 32