உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 24 AUG 2024 7:54PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுடன் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணுதேவ் சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா, மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், புலனாய்வு அமைப்பு மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர்கள், மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, எஸ்.எஸ்.பி மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல் படை ஆகியவற்றின் தலைமை இயக்குநர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆந்திரா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை இயக்குநர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாள்வதற்கான உத்திகள், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்புப் படையினரின் திறனை வளர்த்தல், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான வளர்ச்சி ஆகியவை பற்றி சில முக்கிய விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் இப்போது ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளது என்றும், 2026 மார்ச் மாதத்திற்கு முன்னர் நாட்டிலிருந்து நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் திரு அமித் ஷா தனது உரையில் கூறினார். 

இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில், அனைத்து காவல்துறை தலைமை இயக்குநர்களும் ஒவ்வொரு வாரமும் தங்கள் மாநிலங்களில் நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினருடன் கூட்டங்களை நடத்தி செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். இதனுடன், நக்சல் பாதித்த பகுதிகள் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலாளர்கள் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார். நக்சல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்காவிட்டால், நாம் விரும்பிய முடிவை அடைய முடியாது என்று அவர் கூறினார்.

இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி முன் வைத்துள்ள இலக்கை அடைய, இந்த பிரச்சாரத்தை நாம் விரைவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இடதுசாரி தீவிரவாதம் என்பது மனித மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒரு அச்சுறுத்தல் என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள் அதை முற்றிலுமாக ஒழிக்க இரு மடங்கு வேகத்துடனும் தீவிரத்துடனும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2048587

************************

BR/KV



(Release ID: 2048720) Visitor Counter : 14