சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மெய்நிகர் நீதிமன்றங்கள்

Posted On: 09 AUG 2024 12:37PM by PIB Chennai

இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழுவின் முன்முயற்சியான மெய்நிகர் நீதிமன்றங்கள் என்பது, நீதிமன்றத்தில் வழக்காடுபவர் அல்லது வழக்கறிஞர் இருப்பதை அகற்றி, வழக்குகளை மெய்நிகர் தளத்தில் தீர்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கருத்தாகும். நீதிமன்ற வளங்களை திறம்பட பயன்படுத்தவும், வழக்காடுபவர்களின் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கான சிறந்த வழியை வழங்கவும் இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, மெய்நிகர் நீதிமன்றங்கள், போக்குவரத்து சலான் தொடர்பான வழக்குகளை மட்டுமே கையாளுகின்றன, இது வழக்குகளின் செலவுகளைக் குறைத்தது மட்டுமல்லாமல், போக்குவரத்து சலான் வழக்குகளைத் தீர்ப்பதற்கான நடைமுறையையும் எளிதாக்கியுள்ளது. 5.26 கோடிக்கும் அதிகமான வழக்குகள் (5,26,53,142) 28 மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலம் கையாளப்பட்டுள்ளன, மேலும் 56 லட்சத்துக்கும் மேற்பட்ட (56,51,204) வழக்குகளில், 30.06.2024 வரை ரூ .579.40 கோடிக்கும் அதிகமான ஆன்லைன் அபராதங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.

மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலம் தமிழ்நாட்டில் 2,11,314 மனுக்கள் பெறப்பட்டு, இவற்றில் 1,68,848 வழக்குகள் விசாரிக்கப்பட்டு,  99,720 பேருக்கு அபராத ரசீது வழங்கப்பட்டு, ரூ.92,67,59,190 வசூலிக்கப்பட்டுள்ளது. 30.06.2024 அன்றைய நிலவரப்படி, 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுபோன்ற 28 நீதிமன்றங்கள் உள்ளன. டெல்லி (2), ஹரியானா, சண்டிகர், குஜராத் (2), தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா (2), மகாராஷ்டிரா (2), அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் (2), உத்தரபிரதேசம், ஒடிசா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் (2), மத்தியப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் (2). இருப்பினும், மெய்நிகர் நீதிமன்றங்களை நிறுவுவது என்பது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் வரம்பு மற்றும் அதிகார வரம்பிற்குள் வரும் ஒரு நிர்வாக பிரச்சனை என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நேரடிப் பங்கு எதுவும் இல்லை.

மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்பின் கீழ், கூடுதலாக 1150 மெய்நிகர் நீதிமன்றங்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலுவையிலுள்ள வழக்குகளைக் கையாள்வதற்கு, நீதிமன்றங்களுக்கு உதவும் வகையில் 413.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய சட்டம் - நீதித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2043474)

MM/AG/KR



(Release ID: 2043637) Visitor Counter : 11