சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கத் துறையில் சுயசார்பு இந்தியா
Posted On:
29 JUL 2024 3:09PM by PIB Chennai
கனிம உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மொத்த கனிம நுகர்வில் உள்நாட்டு சுரங்கத்தின் பங்கை அதிகரிக்கவும், சுரங்கத் துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்கவும் சுரங்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 (எம்எம்டிஆர் சட்டம், 1957) 28.03.2021 முதல் மாற்றியமைக்கப்பட்டது. கனிம உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சுரங்கங்களின் காலக்கெடுவைச் செயல்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும் சுரங்கத்தில் முதலீடு செய்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கனிம வளங்களின் ஆய்வு மற்றும் விரைவாக சுரங்கங்களை எலம் விடுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும். சுரங்கங்களின் ஏலத்திற்கான இறுதிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை நீக்குதல், இணைக்கப்பட்ட ஆலையின் தேவையைப் பூர்த்தி செய்த பிறகு, ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் கனிமங்களில் 50விழுக்காடு வரை விற்பனை செய்ய இணை சுரங்கங்களை அனுமதிப்பது மற்றும் கனிம சலுகைகளை மாற்றுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது ஆகியவை சில முக்கிய திருத்தங்களில் அடங்கும்.
மத்திய அரசு செயல்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவாக, 2015 ஆம் ஆண்டு ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நாட்டில் மொத்தம் 385 கனிமத் தொகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. இவற்றில் 50 சுரங்கங்கள் ஏற்கனவே உற்பத்தியில் உள்ளன.
இந்த திருத்தங்கள் முக்கிய தாதுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, உதாரணமாக, இரும்பு தாது உற்பத்தி 2014-15ல் 129 மில்லியன் டன்னிலிருந்து 2022-23ல் 258 மில்லியன் டன்னாகவும், சுண்ணாம்பு உற்பத்தி 2014-15ல் 295 மில்லியன் டன்னில் இருந்து 2022-23ல் 406 மில்லியன் டன்களாகவும் அதிகரித்துள்ளது.
சுரங்கம் மற்றும் குவாரி துறையின் மொத்த மதிப்பு கூட்டல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் ஆகும். மதிப்பு அடிப்படையில் சுரங்கம் மற்றும் குவாரி துறையின் பங்களிப்பு 2014-15ல் ரூ.2,90,411 கோடியாக இருந்தது. இது 2022-23ல் ரூ.3,18,302 கோடியாக அதிகரித்துள்ளது.
இத்தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
(Release ID: 2040426)