ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUL 2024 2:37PM by PIB Chennai
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்த பன்முக உத்திகளுடன் திட்டங்களை செயல்படுத்துகிறது. வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்தல், கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கிராமப்புற இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வழங்குதல், கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றை அதன் திட்டங்கள் மூலம் இந்த அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற இந்தியாவை தற்சார்புடையதாக்குவதை இந்த அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS), பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்-ஊரகம் (PMAY-G), பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் (PMGSY), தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY NRLM), தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY), தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP), பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் போன்ற பல இலக்கு சார்ந்த திட்டங்களை ஊரக மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.
கிராமங்களில் அடிப்படை வசதிகளை உருவாக்கவும், பண்ணைகளுக்கு அருகாமையில் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் என்பது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் சாலை வசதி இல்லாத தகுதி வாய்ந்த குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. இத்திட்டம் 2000-வது ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 22.07.2024 வரை மொத்தம் 8,27,419 கிலோ மீட்டர் நீள சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 7,65,512 கிலோ மீட்டர் நீள சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2037900)
வருகையாளர் எண்ணிக்கை : 76