குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊடகங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் போதுமான கவனம் செலுத்தாதது கவலை அளிக்கிறது – குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 18 JUL 2024 5:16PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் இன்று தேவையற்ற செய்திகளில் ஊடகங்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இந்தி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்களை சந்தித்த குடியரசுத் துணைத் தலைவர், ஊடகங்கள் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக் கதையை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உள்நோக்கம் கொண்ட கதையாடல்களுக்காக ஊடகங்கள் வணிகமயமாக்கப்படுவது மற்றும் கட்டுப்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த திரு தன்கர், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இதழியலின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டினார். ஊடகங்கள் ஒருதலைப்பட்சமான கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு, தேசிய நலன்களுக்கு எதிரான சக்திகளுடன் அணி சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று திரு தன்கர் கேட்டுக் கொண்டார்.

"இது ஆத்ம தேடலுக்கான நேரம். வளர்ச்சியில் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று ஊடகங்களை நான் பணிவுடனும் அக்கறையுடனும் கேட்டுக்கொள்கிறேன். நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், தவறான சூழ்நிலைகள் மற்றும் குறைபாடுகளை விமர்சிப்பதன் மூலமும் அவர்கள் இதைச் செய்ய முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.

அரசியல் நிர்ணய சபையின் புனிதமான கொண்டாட்டத்திற்கு இணையாக ஜனநாயகக் கொள்கைகள் போற்றப்படுகின்றன என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிகரித்து வரும் இடையூறுகள் மற்றும் பரபரப்பான போக்கு குறித்து கவலை தெரிவித்தார். "அரசியலமைப்பு சபை ஜனநாயகத்தின் கோவிலாக இருந்தது, அங்கு ஒவ்வொரு அமர்வும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நமது தேசியத்தின் அடித்தளத்திற்கு பங்களித்தது" என்று அவர் குறிப்பிட்டார். இடையூறுகள் விதிவிலக்குகளாக இல்லாமல் அரசியல் கருவிகளாக மாறியிருப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடையூறுகளை பெருமைப்படுத்தும் ஊடகங்களின் போக்கு குறித்து கவலை தெரிவித்த திரு தன்கர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் தங்களது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இடையூறுகள் தலைப்புச் செய்திகளாக மாறும் போது, சீர்குலைப்பவர்கள் ஹீரோக்களாகப் போற்றப்படும்போது, ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து இதழியல் தவறிவிடுகிறது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் தோற்றத்தை உலகிற்கு துல்லியமாக சித்தரிப்பதில் ஊடகங்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். வெளியில் இருந்து வருபவர்கள் இந்தியாவை எடைபோட முடியாது. அவர்கள் அதைத் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தில் செய்கிறார்கள். நாம் ஒரு வல்லரசாக மாறி வருகிறோம் என்ற நமது எதிர்பாராத மற்றும் கற்பனை செய்ய முடியாத முன்னேற்றத்தை ஜீரணிக்க முடியாதவர்கள், உள்நாட்டில் குறைவாகவும், வெளியில் அதிகமாகவும் உள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.

5000 ஆண்டுகால இந்தியாவின் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அதன் ஜனநாயக அமைப்புகளின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

*************

PKV/KV/DL



(Release ID: 2034062) Visitor Counter : 25