சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்கள் திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா சிங் படேல் ஆகியோர், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான மூன்று முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தனர்

Posted On: 28 JUN 2024 7:54PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்கள் திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ்,  திருமதி அனுப்யா சிங் படேல் ஆகியோர் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான மூன்று முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தனர். சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் இந்த முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களுக்கான மெய்நிகர் தேசிய தர உத்தரவாத தரநிலைகள் மதிப்பீட்டு நடைமுறை,  ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களுக்கான தரநிலைகள் வெளியிடுதல், உணவுப் பாதுகாப்பு அமைப்பு மூலம் உரிமங்கள் மற்றும் பதிவுகளை உடனடியாக வழங்குவதற்கான புதிய நடைமுறை ஆகியவற்றை அவர்கள் தொடங்கி வைத்தனர்.  

நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், இந்த முக்கியமான முன்முயற்சிகள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும்  அரசின் முயற்சியின் தொடர்ச்சியாகும் என்றார். தற்போதைய மற்றும் எதிர்கால மருத்துவ சவால்களை சமாளிக்கும் கட்டமைப்புடன் சுகாதார அமைப்பை வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

திருமதி அனுப்ரியா படேல் பேசுகையில், இந்த முன் முயற்சிகள் பொது சுகாதார வசதிகளின் தரத்தை மேம்படுத்த வழிவகுக்கும் என்றும், உணவு தொடர்பான உடனடி உரிம நடைமுறையை அறிமுகப்படுத்துவது இத்துறையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பான எப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி  ஜி. கமலா வர்தன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

****** 
 

SMB/PLM/KV



(Release ID: 2029545) Visitor Counter : 28