விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமரின் உழவர் நல நிதி உதவித் திட்டத்தில் 17-வது தவணைத் தொகையாக ரூ.20,000 கோடியை வாரணாசியில் பிரதமர் இன்று விடுவித்தார்

திட்டப் பயன்கள் பயனாளிகளை உரிய முறையில் சென்றடைய, தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் திரு நரேந்திர மோடி

30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் தோழிகள் என்ற சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்

விவசாயிகளே கடவுள்-விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வழிபடுவது போன்றது: மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்

Posted On: 18 JUN 2024 7:20PM by PIB Chennai

பிரதமரின் உழவர் நல  நிதி உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 17-வது தவணையாக ரூ.20,000 கோடியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18-06-2024) வாரணாசியில் விடுவித்தார். நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், தொழில்நுட்பம்மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மொத்தம் 20,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை  உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் வேளாண் தோழிகள் (கிருஷி சகி) முன்முயற்சி ஒரு வலுவான நடவடிக்கை என்றும் அவர் கூறினார். இந்த முன்முயற்சி பெண்களுக்கு கௌரவம் மற்றும் வருமான உத்தரவாதத்தை உறுதி செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் உழவர் நல  நிதி உதவித் திட்டம், உலகின் மிகப்பெரிய நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாக உருவெடுத்துள்ளது என்று கூறிய பிரதமர், இத்திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.3.25 லட்சம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்றார். வாரணாசி பகுதியில் உள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மட்டும் ரூ.700 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தகுதியான பயனாளிகளுக்கு பலன்களைக் கொண்டு செல்ல, தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதமரின் உழவர் நல  நிதி உதவித் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான லட்சியப் பயணம்  உதவியதாக அவர் குறிப்பிட்டார். பயனாளிகள் முழு பலனையும் பெறுவதை அதிகரிக்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். நோக்கங்களும், நம்பிக்கைகளும் சரியாக இருக்கும்போது, விவசாயிகள் நலன் தொடர்பான பணிகள் விரைவாக நடைபெறும் என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார். மகளிருக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கும் ட்ரோன் சகோதரி திட்டத்தைப் போன்றே வேளாண் தோழிகள் திட்டமும் மிக முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆஷா பணியாளர்களாகவும், வங்கி தோழிகளாகவும் பெண்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டிய பிரதமர், இனி வேளாண் தோழிகளாகவும் அவர்களின் திறன்களை நாடு காணும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்றும், விவசாயிகள் அதன் ஆன்மாவாக உள்ளனர் என்றும் கூறினார். தம்மைப் பொறுத்தவரை விவசாயிதான் கடவுள் என்றும், விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வழிபடுவது போன்றது என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது பிரதமருக்கு அதிக அக்கறை உள்ளது என அவர் கூறினார். அதனால்தான் மூன்றாவது முறையாகப் பிரதமரான பிறகு, அவர் முதலில் விவசாயிகள் நலன் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது விவசாயிகளின் கணக்கில் பணத்தைப் பிரதமர் செலுத்தி இருப்பதாகவும், மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு முதல் நிகழ்ச்சியாக இன்று இங்கு விவசாயிகளிடையே அவர் உரையாற்றுவதாகவும் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.

இன்று பிரதமர் ஒரே நேரத்தில் சுமார் 9.25 கோடி விவசாயிகளின் கணக்குகளில் மொத்தம் ரூ.20,000 கோடியை செலுத்தி இருப்பதாகவும் இதையும் சேர்த்து, விவசாயிகளின் கணக்குகளில் இதுவரை மொத்தம் சுமார் ரூ.3,25,000 கோடி,  செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான செயல்திட்டம் குறித்து தொடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஒருபுறம், நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார். மறுபுறம், உற்பத்திச் செலவைக் குறைக்க, அரசு கோடிக் கணக்கான ரூபாய்களை மானியமாக வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக விவசாயிகளுக்கு மலிவான விலையில் உரங்கள் கிடைக்கின்றன என்று அவர் கூறினார்.

கிசான் கடன் அட்டை போன்ற  அற்புதமான திட்டங்கள் விவசாயிகளை, அதிக வட்டி வசூலிக்கும் தனியாரின் பிடியிலிருந்து விடுவித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிறு விவசாயிகள், பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் மூலம் உரங்கள் மற்றும் விதைகளை வாங்கிப் பயன் அடைந்து வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் முடிவின்படி, பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க பயிர் சாகுபடிச் செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத லாபம் கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இயற்கை பேரிடரால் பயிர் சேதமடைந்தால், அதை ஈடுகட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார். மலர் விவசாயம், பழ விவசாயம், காய்கறி விவசாயம், மருத்துவ மூலிகைகள் விவசாயம், வேளாண் காடு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் போன்றவற்றின் மூலம் விவசாயத்தை பன்முகப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார். தேனீ வளர்ப்பு போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வேளாண் துறை விவசாயிகளின் நலனுக்காகத் தொடர்ந்து உழைக்கும் என்றும் அவர் கூறினார். மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை  உருவாக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும், இதில் சுமார் ஒரு கோடி பேர் ஏற்கனவே லட்சாதிபதிகளாக மாறி உள்ளதாகவும் திரு சௌகான் தெரிவித்தார். இத்திட்டத்தின் ஒரு பரிமாணமாக வேளாண் தோழி முன்முயற்சி விளங்குகிறது என அமைச்சர் குறிப்பிட்டார். இந்தச் சகோதரிகளுக்கு விவசாயப் பணிகளில் உதவ பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும், 34,000 சகோதரிகள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்இந்த வேளாண் தோழிகள்  ஒரு புறம் விவசாயிகளுக்கு உதவார்கள் என்பதுடன், மறுபுறம் அவர்கள் தங்கள் வருமானத்தையும் அதிகரித்துக் கொள்வார்கள் என மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டார்.

-----

PKV/PLM/KPG



(Release ID: 2026372) Visitor Counter : 46