தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சமூக மாற்றத்தை ஊக்குவிக்க ஆவணப்படங்களின் முக்கியத்துவம் குறித்து மும்பை திரைப்பட விழாவில் குழு விவாதம்

Posted On: 17 JUN 2024 4:02PM by PIB Chennai

மும்பையில் நடைபெறும் 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் “சமூக மாற்றத்தை ஊக்குவிக்க ஆவணப்படங்களப் பயன்படுத்துதல்”  என்பது குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இதில் பிரபல கன்னட திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் டாக்டர் டி எஸ். நாகாபரணா பங்கேற்றார். தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக பொது மேலாளர் திரு டி ராமகிருஷ்ணன் விவாதத்தை ஒருங்கிணைத்தார்.

இந்த விவாதத்தில் பேசிய டாக்டர் நாகாபரணா, சக்தி வாய்ந்த ஊடகமான திரைப்படத்தின் பொறுப்பு குறித்து எடுத்துரைத்தார். நவீன திரைப்பட உலகம் அதிக மனிதர்கள் இல்லாததாக மாறியுள்ளது என்றும், ஒரு செல்பேசி கேமராவைப் பயன்படுத்தி எவரும் திரைப்படத்தை தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு “கல்வியில் சினிமா, சினிமாவில் கல்வி” என்பதற்கு முக்கித்துவம் அளிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

கதைப்படங்களாக இருப்பினும், ஆவணப்படங்களாக இருப்பினும் அவை எதார்த்தத்தைப் பிரதிப்பலிக்க வேண்டும் என்றும், சமூகத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பில் உள்ள சமூகப் பிரச்சனைகளை  எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் தங்களின் படைப்புகள் சமூகத்திற்குப் பொருத்தமானதாக இருப்பதற்குப் பாடுபட வேண்டும் என்றும் டாக்டர நாகாபரணா தெரிவித்தார்.

ஏழு முறை தேசிய விருது பெற்ற அவர், சுயேச்சையான திரைப்படத் தயாரிப்புக்கு முறைப்படியான ஆதரவு நடைமுறையின் அவசியத்தை சுட்டிக்காட்டினார். ஆவணப்படங்களில் உண்மைகள் திரிக்கப்படுவது குறித்தும் அவர் எச்சரிக்கை செய்தார்.

குழு விவாத்தை ஒருங்கிணைத்த திரு டி ராமகிருஷ்ணன், சாதியப்பாகுபாடு, பாலின சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில் ஆவணப்படங்களின் பங்கு முக்கியமானது என்றார். பிரச்சனைகளை எடுத்துரைப்பதோடு, இரக்கத்தை ஏற்படுத்தி செயலுக்கு தூண்டும் சக்தியை ஆவணப்படங்கள் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

***

SRI/SMB/RS/KV



(Release ID: 2026082) Visitor Counter : 14