வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் மற்றும் வர்த்தகத்தில் டொமினிகன் குடியரசுடன் இருதரப்பு நிறுவன நடைமுறைகளை உருவாக்குவதற்கான நெறிமுறைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது

Posted On: 13 MAR 2024 11:58AM by PIB Chennai

இந்தியா  மற்றும் டொமினிகன் குடியரசு இடையே கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை (Joint Economic and Trade Committee - JETCO – ஜெட்கோ) நிறுவுவதற்கான நெறிமுறை 2024 மார்ச் 12 அன்று சாண்டோ டொமிங்கோவில் உள்ள டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில்  கையெழுத்தானது. டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ராபர்டோ அல்வாரெஸ் மற்றும் டொமினிகன் குடியரசுக்கான இந்தியத் தூதர் திரு ராமு அபகானி ஆகியோர் வர்த்தகத் துறையின்  சார்பில்  இந்த  நெறிமுறையில்  கையெழுத்திட்டனர்.

இந்தக் குழுவை நிறுவுவதற்கான   நெறிமுறைகளில் கையெழுத்திடுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை 2024  ஜனவரி 24 அன்று ஒப்புதல் அளித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

தொழில்நுட்ப உதவி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் வர்த்தகம், சேவைகள், தொழில்துறை தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இது வகை செய்யும். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளத்தையும் இது வழங்கும். டொமினிகன் குடியரசிலிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது. அந்நாட்டுக்கு மருந்துகள், கடல் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா-டொமினிக்கன் குடியரசு இடையேயான கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் முதல் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*********

Release ID: 2014067

PKV/PLM/KV



(Release ID: 2014117) Visitor Counter : 62