பிரதமர் அலுவலகம்

மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு இலங்கை அதிபர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

"இந்தியாவின் யுபிஐ, இப்போது கூட்டாண்மை நாடுகளை இந்தியாவுடன் ஒன்றிணைத்தல் என்ற புதிய கடமையை நிறைவேற்றுகிறது"
"டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது"
“'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்பது இந்தியாவின் கொள்கை. சாகர் என்பது எங்களின் கடல்சார் தொலைநோக்குப் பார்வை. அதாவது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு, வளர்ச்சி”

"யுபிஐ-யுடன் இணைப்பதன் மூலம் இலங்கை, மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளும் பயனடைவதுடன், டிஜிட்டல் மாற்றத்திற்கு ஊக்கம் கிடைக்கும்"

"ஆசியாவின் வளைகுடாவில் நேபாளம், பூடான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மொரீஷியஸின் ரூபே அட்டை சேவை ஆப்பிரிக்காவில் தொடங்கப்படுகிறது"

"இயற்கை பேரிடர், சர்வதேச அளவில் சுகாதாரம் தொடர்பான, பொருளாதாரம் அல்லது ஆதரவளிப்பதில் இந்தியா முதல் நாடாக தொடர்ந்து செயல்படும்"

Posted On: 12 FEB 2024 1:59PM by PIB Chennai

இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

 

இரு நாடுகளின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ரூபே அட்டை மொரீஷியஸில் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் அட்டையாக அறிவிக்கப்படும் என்று மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்ட இச்சேவை இரு நாடுகளின் குடிமக்களுக்கும் பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.

 

அயோத்தியில்  ஸ்ரீ ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்காக பிரதமருக்கு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான பொருளாதார உறவுகளையும் அவர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான தொடர்பையும், போக்குவரத்தையும் தொடர்ந்து பராமரிக்க முடியும் என்று அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா, இலங்கை, மொரீஷியஸ் ஆகிய மூன்று நட்பு நாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்புகள் நவீன டிஜிட்டல் இணைப்பு வடிவத்தின் சிறப்பான நாளாக இன்று கொண்டாடப்படுகிறது என்று கூறினார். மக்களின் வளர்ச்சியில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இது சான்று என்றும் அவர் கூறினார். ஃபின்டெக் இணைப்பு எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். "இந்தியாவின் யுபிஐ தற்போது ஒரு புதிய பங்களிப்பாக வந்துள்ளது – இந்தியாவுடன் நட்பு நாடுகளை ஒன்றிணைக்கிறது" என்று பிரதமர் கூறினார்.

 

டிஜிட்டல் பொது கட்டமைப்பு வசதி இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், தொலைதூர கிராமங்களில் உள்ள மிகச்சிறிய அளவிலான விற்பனையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். யுபிஐ பரிவர்த்தனைகளின் வசதி, வேகம் குறித்துப் பேசிய பிரதமர், கடந்த ஆண்டு யுபிஐ மூலம் ரூ.2 லட்சம் கோடி அல்லது 8 டிரில்லியன் இலங்கை ரூபாய் அல்லது 1 டிரில்லியன் மொரீஷியஸ் ரூபாய் மதிப்புள்ள 100 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்று தெரிவித்தார். வங்கிக் கணக்குகள், ஆதார், மொபைல் போன்கள் ஆகியவற்றின் மூலம் ரூ.34 லட்சம் கோடி அல்லது 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமான கோவின் தளத்தை இந்தியா நடத்தியதாகப் பிரதமர் தெரிவித்தார். "தொழில்நுட்பத்தின் பயன்பாடு வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதுடன், ஊழலைக் குறைத்து, சமூகத்தில் உள்ளடக்கிய தன்மையை அதிகரிக்கிறது" என்று பிரதமர் கூறினார்.

 

"இந்தியாவின் கொள்கை 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்பதாகும் என்று பிரதமர் கூறினார். சாகர் என்பது எங்களுடைய கடல்சார் தொலைநோக்குப் பார்வை என்று அவர் தெரிவித்தார். அதாவது இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சி. இந்தியா தனது வளர்ச்சியை அண்டை நாடுகளிடமிருந்து தனியாகப் பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.

 

இலங்கை அதிபரின் முந்தைய இந்தியப் பயணத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆவணம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நிதி இணைப்பை வலுப்படுத்துவது அதன் முக்கிய அம்சம் என்று குறிப்பிட்டார். ஜி20 உச்சிமாநாட்டின் போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத்துடனும் இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன என்று அவர் கூறினார்.

 

யுபிஐ உடனான இணைப்பு இலங்கைக்கும் மொரீஷியஸுக்கும் பயனளிக்கும் என்றும், டிஜிட்டல் மாற்றம் ஊக்கமளிக்கும், உள்ளூர் பொருளாதாரங்கள் நேர்மறையான மாற்றத்தைக் காணும் என்றும், சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். "இந்திய சுற்றுலாப் பயணிகள் யுபிஐ சேவை கிடைக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். இலங்கையிலும் மொரீஷியஸிலும் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், அங்கு படிக்கும் மாணவர்களும் இதன் மூலம் சிறப்புப் பயன்களைப் பெறுவார்கள்" என்று பிரதமர் மேலும் கூறினார். ஆசிய வளைகுடாவில் நேபாளம், பூடான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவிலும் மொரீஷியஸ் ரூபே அட்டை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து பிரதமர் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மொரீஷியஸில் இருந்து இந்தியா வரும் மக்களுக்கும் இது வசதியாக இருக்கும். பணத்தை வாங்க வேண்டிய தேவையும் குறையும். யுபிஐ, ரூபே அட்டை சேவை நேரத்தை சேமித்து, குறைந்த செலவில், வசதியான பணப் பரிவர்த்தனைகளை நமது சொந்த பணத்தில் செயல்படுத்தும்  என்று தெரிவித்தார்.  வரும் காலங்களில், மற்ற நாடுகளில் வசிக்கும் ஒருவருக்கு பணம் செலுத்தும் வசதியை நாம் பெற முடியும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

 

இன்றைய தொடக்கம் உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பின் வெற்றியை அடையாளப்படுத்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். "எங்கள் உறவுகள் பரிவர்த்தனைகளைப் பற்றியது மட்டுமல்ல, இது ஒரு வரலாற்று உறவு" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மூன்று நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகளின் வலிமையை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு ஆதரவளித்து வருவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இயற்கைப் பேரிடர்கள், சுகாதாரம் தொடர்பான விவகாரங்கள், பொருளாதாரம் அல்லது சர்வதேச அளவில் ஆதரவு என நெருக்கடியான ஒவ்வொரு தருணத்திலும் இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கூறினார். "உதவும் மனப்பான்மையில் இந்தியா முதன்மை நாடாகத் தொடர்ந்து செயல்படும்” என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜி 20 தலைமையின் போது கூட உலகளாவிய தெற்கு நாடுகளின் கவலைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதையும் பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பலன்களை உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு விரிவுபடுத்த சமூக நிதியம் ஒன்றை அமைப்பதை அவர் குறிப்பிட்டார்.
 

இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருக்குப் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த வெளியீட்டை வெற்றிகரமாக்கிய மூன்று நாடுகளின் மத்திய வங்கிகள், முகமைகளுக்கும்  அவர் நன்றி தெரிவித்துத் தமது உரையை நிறைவு செய்தார்.

 

பின்னணி

ஃபின்டெக் கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்துள்ளது. நமது வளர்ச்சி அனுபவங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை, மொரீஷியஸுடன் இந்தியாவின் வலுவான கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பு, விரைவான, தடையற்ற, டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவம் அந்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும்.

 

இலங்கை, மொரீஷியஸுக்கு பயணிக்கும் இந்தியக் குடிமக்களுக்கும், இந்தியாவுக்குப் பயணிக்கும் மொரீஷியஸ் நாட்டினருக்கும் யுபிஐ சேவைகள் கிடைக்க இந்தத் தொடக்கம் உதவும். மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், மொரீஷியஸில் ரூபே முறையின் அடிப்படையில் மொரீஷியஸ் வங்கிகள் அட்டைகளை வழங்கவும், இந்தியா, மொரீஷியசில் ரூபே அட்டையைப் பயன்படுத்தவும் உதவும்.

***

(Release ID: 2005218)

ANU/SMB/IR/RR/KRS



(Release ID: 2005346) Visitor Counter : 72