பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 8 அம்ருத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

மகாராஷ்டிராவில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90,000-க்கும் மேற்பட்ட வீடுகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன

சோலாப்பூரில் ரேநகர் வீட்டுவசதி சங்கத்தின் 15,000 வீடுகள் அர்ப்பணிக்கப்பட்டன

பிரதமர்-ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகள் 10,000 பேருக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணைகளை விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது

"ஸ்ரீ ராமரின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் நல்லாட்சி இருப்பதை உறுதி செய்வதற்கும், நாட்டில் நேர்மை ஆட்சி செய்வதற்கும் எங்கள் அரசு முதல் நாளிலிருந்து முயற்சி செய்கிறது"

"ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகும்போது, அவர்களின் ஆசிகள் மிகப்பெரிய செல்வமாக மாறும் போது எனக்கு அது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது"

"ஜனவரி 22 ஆம் தேதி வறுமையின் இருளை விரட்ட ராம் ஜோதி ஒரு உத்வேகமாக மாறும்"

"அரசின் பாதை 'உழைப்பிற்கான கௌரவம்', 'தற்சார்பு தொழிலாளர்' மற்றும் 'ஏழைகளுக்கான நலன்'

"ஏழைகள் உறுதியான வீடு, கழிப்பறை, மின்சார இணைப்பு, தண்ணீர் ஆகியவற்றைப் பெற வேண்டும், இதுபோன்

Posted On: 19 JAN 2024 12:51PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 8 புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (அம்ருத்) கீழான திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஷ்டிராவில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90,000-க்கும் மேற்பட்ட வீடுகளையும், சோலாப்பூரில் ரேநகர் வீட்டுவசதி சங்கத்தின் 15,000 வீடுகளையும் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கைத்தறித் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் ஆகிய ஆயிரக்கணக்கான பயனாளிகள் இதில் அடங்குவர். இந்த நிகழ்ச்சியின் போது மகாராஷ்டிராவில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் 10,000 பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணைகளை விநியோகிப்பதையும் அவர் தொடங்கி வைத்தார்.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ஒட்டுமொத்த நாடும் ஜனவரி 22 அன்று அயோத்திதாமில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் பிராண பிரதிஷ்டாவுக்கான பக்தி மனநிலையில் உள்ளது என்று கூறினார். "ஒரு சிறிய கூடாரத்தில் இருந்த ராமரை தரிசனம் செய்கின்றோமே என்ற பத்தாண்டு கால வலி இப்போது வெகு தொலைவிற்கு விலகிவிட்டது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் வழிகாட்டுதலின் கீழ் 11 நாள் விரதம் மற்றும் விதிமுறைகளை மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வுடன் பின்பற்றுவதாகவும், அனைத்து மக்களின் ஆசீர்வாதத்துடன் பிராண பிரதிஷ்டாவை நடத்துவதில் நம்பிக்கை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் தனது 11 நாள் சிறப்பு வழிபாடு தொடங்கப்பட்டது குறித்து பிரதமர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அர்ப்பணிப்புள்ள தருணத்தில் புதிய வீட்டுக்கு குடிபோவதை கொண்டாடுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். "இந்த 1 லட்சம் குடும்பங்கள் ஜனவரி 22-ம் தேதி மாலை தங்கள் உறுதியான வீடுகளில் ராம் ஜோதியை ஏற்றுவார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் கூறினார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, மக்கள் மொபைல் பிளாஷ் லைட்டுகளை இயக்கி ராம் ஜோதி உறுதிமொழியை வெளிப்படுத்தினர்.

 

இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களுக்காக இந்தப் பிராந்திய மக்களையும், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் பிரதமர் பாராட்டினார். மகாராஷ்டிராவின் பெருமைக்கு மகாராஷ்டிர மக்களின் கடின உழைப்பு மற்றும் முற்போக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

நமது வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளை உண்மையாக நிறைவேற்ற ராமர் எப்போதும் நமக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்" என்று கூறிய பிரதமர், சோலாப்பூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று நனவாகி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் மிகப் பெரிய சமூகம் இங்கு குடியேற்றம்  செய்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதமர், இதுபோன்ற இல்லங்களில் வாழ வேண்டும் என்ற தனது குழந்தைப் பருவ நாட்களின் விருப்பத்தையும் நினைவு கூர்ந்தார். "ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகும்போது, அவர்களின் ஆசிகள் எனது மிகப்பெரிய செல்வமாக மாறும் போது அது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது" என்று கண்ணீர் மல்க பிரதமர் கூறினார். இந்தத் திட்டம் நிறைவடைந்ததும் அவர்களது வீடுகளின் சாவியை ஒப்படைக்க மோடியே வருவார் என்று இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மக்களிடம் உறுதியளித்ததை அவர் நினைவுகூர்ந்தார். "இன்று மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்", "மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

இன்று வீடுகளைப் பெற்றவர்களும், அவர்களின் தலைமுறையினரும் முன்னர் வீடற்ற காரணத்தால் துன்பங்களையும், துயரங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், துன்பங்களின் சங்கிலி இப்போது உடைந்துவிடும் என்றும், எதிர்கால சந்ததியினர் இதே போன்ற சோதனையான காலத்தை எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 "ஜனவரி 22-ம் தேதி ஏற்றப்படவுள்ள ராம ஜோதி வறுமையின் இருளை விரட்ட உத்வேகம் அளிக்கும்" என்று பிரதமர் கூறினார். அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

 

இன்று புதிய வீடுகளைப் பெற்றுள்ள குடும்பங்களின் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக பிரதமர் பிரார்த்தனை செய்தார். "ஸ்ரீ ராமரின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் நேர்மை ஆட்சி செய்வதன் மூலமும் நாட்டில் நல்லாட்சி இருப்பதை உறுதி செய்ய எங்கள் அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே முயற்சி செய்து வருகிறது.   அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம், என்ற மந்திரத்திற்கு ஊக்கமளித்தது ராம ராஜ்யம் மட்டுமே" என்று பிரதமர் மோடி கூறினார். ராம்சரித மானஸை மேற்கோள் காட்டிய திரு மோடி, ஏழைகளின் நலனில் அரசு கவனம் செலுத்துவதை மீண்டும் வலியுறுத்தினார்.

 

உறுதியான வீடுகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏழைகள் கண்ணியத்தை இழந்திருந்த காலகட்டத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். எனவே தற்போதைய அரசு வீட்டு வசதி மற்றும் கழிவறை வசதிகளை அளிப்பதில் கவனம் செலுத்த வழிவகுத்தது மற்றும் 10 கோடி 'மரியாதை வீடுகள்' மற்றும் 4 கோடி உறுதியான வீடுகள் ஒரு இயக்க முறையில் வழங்கப்பட்டன.

 

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு பதிலாக, அரசின் பாதை 'உழைப்பிற்கான கௌரவம்', 'தற்சார்பு தொழிலாளி' மற்றும் 'ஏழைகளுக்கான நலன்' என்பதாக இருக்கிறது என பிரதமர் கூறினார். "உங்களின் கனவு பெரியது. உங்கள் கனவுகளே எனது தீர்மானம்" என்று பிரதமர் உறுதியளித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் நகர்ப்புற வீடுகள் மற்றும் நியாய வாடகை சங்கங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். பணியிடத்திற்கு அருகாமையில் குடியிருப்புகளை வழங்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்," என்று அவர் கூறினார்.

 

சோலாப்பூர் நகரம் 'தொழிலாளர் நகரங்களின்' நகரம் என்பதை அகமதாபாத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், தனக்கு ஒரு காலகட்டத்தில் சோலாப்பூர் நகரத்துடனான தொடர்பை எடுத்துரைத்தார். பத்மஷாலி குடும்பங்களின் வாழ்க்கை  ஏழ்மை நிலையாக இருந்தபோதிலும் அவர்கள் தனக்கு உணவு வழங்கியதாக கூறினார். பிரதமரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த வழக்கறிஞர் லட்சுமணராவ் இனாம்தார், நெய்த கலைப்படைப்பு தனக்கு வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், இன்றும் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அது உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

சரியான நோக்கம் இல்லாமை மற்றும் இடைத்தரகர் திருட்டு காரணமாக முந்தைய வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சென்று சேராததை பிரதமர் சுட்டிக்காட்டினார். தூய்மையான நோக்கம், ஏழைகளுக்கு அதிகாரமளித்தலுக்கு சாதகமான கொள்கைகள் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக, "அரசுத் திட்டங்களின் பலன்களை நேரடியாக பயனாளிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான உத்தரவாதத்தை மோடி வழங்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் கணக்குகளில் 30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நேரடியாக வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜன் தன் ஆதார் மொபைல் ஆகிய இணைப்பின் மூலம் 10 கோடி போலி பயனாளிகள் களையெடுக்கப்பட்டனர்.

 

பல்வேறு திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இது 10 ஆண்டு கால தவம் மற்றும் ஏழைகளிடம் உண்மையான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாகும் என்று பிரதமர் கூறினார். வறுமையை வெல்ல இது மற்றவர்களுக்கு அதிகாரம் அளித்து உத்வேகம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

 

ஏழைகளுக்கு வளங்களும், வசதிகளும் அளிக்கப்பட்டால் அவர்கள் வறுமையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். எனவே, தற்போதைய அரசு வளங்களையும், வசதிகளையும் வழங்கி, அவர்களின் நலனுக்காக நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டது. ஏழைகளைப் பொறுத்தவரை இரண்டு வேளை உணவு என்ற முக்கிய பிரச்சினை அவர்களுக்கு இருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், எந்தவொரு ஏழை நபரும் வெறும் வயிற்றில் தூங்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் அரசு இலவச ரேஷன் திட்டத்தை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டார். கொரோனா தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். வறுமையிலிருந்து மீண்ட 25 கோடி மக்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இதன் மூலம் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அவர்கள் வறுமையின் பிடியில் அவதியுறாமல் இருப்பார்கள் என்றார். "இந்த 25 கோடி மக்களும் எனது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன் முன்னேறி வருகின்றனர், நான் அவர்களில் ஒருவராக இருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

 

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு பற்றி குறிப்பிட்ட பிரதமர், பயணத்தில் இருப்பவர்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை இது உறுதி செய்யும் என்றும் கூறினார். மக்கள்  வறுமையின் பிடியில் இருப்பதும், அவர்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்பதற்கும் மருத்துவ செலவினங்கள் முக்கிய தடையாக இருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார். இதை நிவர்த்தி செய்ய, 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சையை வழங்கும் ஆயுஷ்மான் அட்டையை அரசு கொண்டு வந்தது, இதன் மூலம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மருத்துவ செலவு மிச்சப்படுத்துகிறது. அதேபோல், மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் கிடைப்பதால் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஏழை நோயாளிகளுக்கு மிச்சமாகிறது. ஜல் ஜீவன் இயக்கம் மக்களை நீரினால் பரவும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். "ஏழைகளுக்கு உறுதியான வீடு, கழிப்பறை, மின்சார இணைப்பு, தண்ணீர் கிடைக்க வேண்டும், இதுபோன்ற அனைத்து வசதிகளும் சமூக நீதிக்கான உத்தரவாதமாகும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்

 

ஏழைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதுவும் மோடியின் உத்தரவாதம்தான்" என்று குறிப்பிட்ட பிரதமர், ஏழைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், விபத்துகளுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்கப்படுவதாக கூறினார். ஏழைக் குடும்பங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் காப்பீடு வடிவில் ரூ.16,000 கோடி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

 

மோடியின் உத்தரவாதம் ஒரு வரமாக மாறி வருகிறது என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார், குறிப்பாக வங்கிக்  கணக்குகள் இல்லாதவர்களுக்கு வங்கிக் கடன்கள் சாத்தியமில்லாததாக  இருந்தது என வங்கிக் கணக்கு இல்லாதவர்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர்,   வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம் 50 கோடி ஏழைகளை வங்கிகளுடன் இணைத்த ஜன் தன் திட்டம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 10,000 பயனாளிகளுக்கு வங்கி உதவி கிடைத்த இன்றைய நிகழ்ச்சியைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். அதிக வட்டிக்கு கடன்களைப் பெற்று வந்த தெருவோர வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு இப்போது எந்த உத்தரவாதமும் இல்லாமல் வங்கிக் கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

சோலாப்பூர் ஒரு தொழில் நகரம், தொழிலாளர்களின் நகரம், ஜவுளிக்கு பெயர் பெற்றது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பள்ளி சீருடைகளை தயாரிப்பதில் மிகப்பெரிய எம்.எஸ்.எம். நிறுவனங்களை இந்த நகரம்  கொண்டிருப்பது பெருமை அளிப்பதாக இருக்கிறது என்றார். சீருடை தைப்பதில் ஈடுபடும் அத்தகைய  தையற் கலைஞர்களை மனதில் கொண்டு, கடன்கள், பயிற்சி மற்றும் நவீன உபகரணங்களை வழங்க அரசு, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்தது. 'மோடியின் உத்தரவாத வாகனம்' நாடு முழுவதும்  சென்று வருவதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

 

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த இயக்கத்தில் சிறு மற்றும் குடிசைத் தொழில்களின் பங்கை சுட்டிக் காட்டினார். எம்.எஸ்.எம்..க்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி, தொற்றுநோய்களின் போது ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம், மேட் இன் இந்தியா போன்ற இயக்கங்கள் காரணமாக, இந்திய தயாரிப்புகள் புதிய வாய்ப்புகளைக் கண்டுள்ளன என்று அவர் கூறினார்.

 

தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் இந்தியா சேர்க்கப்படும் என்று பிரதமர்

சுட்டிக்காட்டினார். "நான் மக்களுக்கு இதை உத்தரவாதம் அளித்துள்ளேன், இதுவும் நிறைவேற்றப்படும்" என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார விரிவாக்கத்தில் சோலாப்பூர் போன்ற பல நகரங்களின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், இந்த நகரங்களில் குடிநீர், கழிவுநீர் போன்ற வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வரும் இரட்டை என்ஜின் அரசு பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். நல்ல சாலைகள், ரயில் பாதைகள், விமானப் பாதைகள் மூலம் நகரங்களை இணைக்கும் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார். "சந்த் ஞானேஸ்வர் மகாராஜ் பால்கி மார்க் அல்லது சாந்த் துக்காராம் பால்கி மார்க் என எதுவாக இருந்தாலும், இவற்றின் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சோலாப்பூர் இடையேயான நான்கு வழி நெடுஞ்சாலையின் பணிகளும் விரைவில் நிறைவடையும்" என்று அவர் மேலும் கூறினார். உரையை நிறைவு செய்த பிரதமர், மக்கள் தொடர்ந்து அரசை ஆசிர்வதிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், இன்று நிரந்தர வீடுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

மகாராஷ்டிர ஆளுநர் திரு. ரமேஷ் பைஸ், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு. தேவேந்திர பட்னாவிஸ், திரு. அஜித் பவார், ரேநகர் கூட்டமைப்பின் நிறுவனர் திரு. நரசய்யா ஆடம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

********

(Release ID: 1997707)

ANU/SM/BS/AG/KRS

 



(Release ID: 1997898) Visitor Counter : 154