சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான 'மெட் டெக் மித்ர'-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

Posted On: 25 DEC 2023 1:06PM by PIB Chennai

மெட் டெக் மித்ர” (மருத்துவத் தொழில்நுட்ப நண்பர்கள்என்பது நாட்டின் இளம் திறமையாளர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் ஆராய்ச்சி, அறிவு, போன்றவற்றுக்கு சிறந்த வடிவம் கொடுத்து அங்கீகரிக்கும் ஒரு தளமாகும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மருத்துவத் தொழில்நுட்ப நண்பர்கள் என்ற பொருளிலான 'மெட் டெக் மித்ர' என்ற முன்முயற்சியை இன்று (25-12-2023) காணொலி காட்சி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறை இந்திய சுகாதாரத் துறையின் இன்றியமையாத, ஒருங்கிணைந்த அங்கமாகும் என்றார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கிற்கு ஏற்ப, 2047-ம் ஆண்டிற்குள் நாட்டின் சுகாதாரச் சூழலை மிகச் சிறப்பாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மருத்துவத் தொழில்நுட்பத் துறை 80 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்துள்ளது என்று குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், மருத்துவ சாதனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிப்பதற்காக, மருத்துவ தொழில் பூங்காக்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கொள்கை, மருத்துவத் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் இந்தத் துறை வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இவை இந்தத் துறையின் இறக்குமதி சார்புநிலையை கணிசமாகக் குறைக்க வழிவகுக்கும் என்று அவர் மேலும் கூறினார். 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்தத் தொழில்துறை 50 பில்லியன் டாலர் தொழில்துறையாக வளரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரோபோ, செயற்கை நுண்ணறிவு, நானோ தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, மருத்துவ சாதனத் துறை வேகமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார். நாட்டில் உள்ள புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடம் மகத்தான சக்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

அரசின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆதரவு காரணமாக, இந்திய மருத்துவ சாதனங்கள் துறை வரும் ஆண்டுகளில் சக்திவாய்ந்த இடத்தை அடையும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

இந்த முன் முயற்சியைப் பாராட்டிப் பேசிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பேராசிரியர் திரு எஸ்.பி.சிங் பாகல், மெட் டெக் மித்ர இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு  ஒரு சிறந்த தளமாகும் என்றும் இது புரட்சிகரமான மாற்றத்தின் முன்னோடி என்றும் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சிலின் (.சி.எம்.ஆர்.) செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால் மற்றும் .சி.எம்.ஆர்-ன் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

******

 

ANU/SMB/PLM/KPG



(Release ID: 1990250) Visitor Counter : 103