பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

முன்னாள் ராணுவத்தினருக்குக் கல்விக் கட்டணச் சலுகை வழங்குவதற்காக இந்திய வணிகப் பள்ளி (ஐ.எஸ்.பி.) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து செயல்படுகிறது - ஐ.எஸ்.பி.யின் முதுகலை மற்றும் மேல்நிலை மேலாண்மை கல்வித் திட்டங்களில் 50 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது

Posted On: 07 DEC 2023 12:28PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறை, ஓய்வுக்குப் பிறகு குடிமை சமூக  வாழ்க்கைக்குத் திரும்பும் ராணுவ வீரர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை வழங்குவதற்காக இந்திய வணிகப் பள்ளி (ஐ.எஸ்.பி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. டிசம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படை கொடி தினத்தையொட்டி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் கீழ், முதுகலை மற்றும் மேல்நிலை மேலாண்மைக் கல்வித் திட்டங்களில் சேர்பவர்களுக்கு ஐ.எஸ்.பி  50 சதவீதக் கல்விக் கட்டணச் சலுகையை  வழங்கும்.  ஆண்டுக்கு  ரூ. 2.3 கோடி வரை இந்தச் சலுகை இருக்கும்.  இந்தச் சலுகை ஒவ்வொரு கல்வியாண்டிலும் 22 முன்னாள் படைவீரர்களுக்குப் பயனளிக்கும். ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு ஏற்கெனவே உள்ள பரந்த திறன்களுடன் ஆழமான மேலாண்மை திறன்களை வழங்குவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னாள் படைவீரர் நலத்துறை செயலாளர் திரு. விஜோய் குமார் சிங், பாதுகாப்புத் துறையுடன் ஒத்துழைத்து செயல்படுவதற்காக ஐ.எஸ்.பி.க்கு நன்றி தெரிவித்துள்ளார். "பெரும்பாலான ஆயுதப்படை வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நாட்டிற்குச் சேவை செய்வதற்கான ஆர்வமும் துடிப்பும் கொண்டவர்கள். இந்த முன்முயற்சி நமது முன்னாள் வீரர்கள் மற்றும் விரைவில் ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு ஐ.எஸ்.பி.யில் உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் தொடர உதவும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இதுவும் பங்களிப்பை வழங்கும்" என்று அவர் கூறினார்.

*******

(Release ID: 1983426)

ANU/SMB/PLM/KV



(Release ID: 1983467) Visitor Counter : 79


Read this release in: English , Urdu , Marathi , Hindi