பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

புதுதில்லியில் தேசிய களப்பணித் திட்டத்தில் 'மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ‘அங்கன்வாடி நெறிமுறையை' மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

Posted On: 29 NOV 2023 9:31AM by PIB Chennai

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான அங்கன்வாடி நெறிமுறையை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி தொடங்கிவைத்தார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய், செயலாளர் திரு இந்தேவர் பாண்டே, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் டாக்டர் கே.கே.திரிபாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மேம்பட்ட நல்வாழ்வுக்கான ஒட்டுமொத்த அணுகலை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மேற்கொள்ள 2023 நவம்பர் 28 அன்று புதுதில்லி விஞ்ஞான்  பவனில். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள், மகளிர் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், நிம்ஹான்ஸ் போன்ற முக்கிய அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முன்முயற்சிக்கு ஆதரவளித்ததற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

தற்போது 3 வயது முதல் 6 வயது வரையிலான 4.37 கோடி குழந்தைகளுக்கு நாள் தோறும் சூடான சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும், 3 வயதுக்குட்பட்ட  4.5 கோடி குழந்தைகளுக்கு சத்தான பொருட்கள் வீடுகளில் வழங்கப்படுவதாகவும் கூறினார். 6 வயதிற்குட்பட்ட 8 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியை மேம்படுத்த சுகாதார அமைப்புக்கு பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார். கடந்த 4 மாதங்களில் குழந்தைகள் உள்ள 16 கோடி  வீடுகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் நெறிமுறையின் மூலம், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கான சிறப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஸ்வவ்லாம்பன் அட்டைகளை வழங்குவதற்கும் வழிகாட்டப்படும் என்று அவர் கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கியதாக அங்கன்வாடி மையங்களை மாற்றுவதற்கு அவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அங்கன்வாடிப் பணியாளர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறிதல், பரிந்துரைத்தல், சேர்த்தல் ஆகியவற்றிற்கான சிறப்புப் பயிற்சியில் அங்கன்வாடிப் பணியாளர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று திருமதி ஸ்மிருதி இரானி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1980609

 

***

(Release ID: 1980609)

ANU/SMB/IR/RR



(Release ID: 1980643) Visitor Counter : 95