குடியரசுத் தலைவர் செயலகம்

பாராதீப்பில் நடந்த போய்தா பந்தனா விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 27 NOV 2023 5:19PM by PIB Chennai

பாராதீப் துறைமுக ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போய்தா பந்தனா விழாவில் இன்று (நவம்பர் 27, 2023) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். பலவகை பொருள் போக்குவரத்துப் பூங்காவை அவர் மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார், அத்துடன் துறைமுக நகரியத்திற்கான புதிய நீர்த்தேக்கம், நீர் சுத்திகரிப்பு நிலையம், அடுத்த தலைமுறை கப்பல் போக்குவரத்து மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஜாவா, சுமத்ரா, பாலி போன்ற தீவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வணிகர்களின் அடையாளப் படகுப் பயணமான பாலியத்ராவின் வரலாற்று நினைவுகளை நினைவுகூர்வது பாராட்டத்தக்கது என்றார். பாலியாத்ரா என்பது அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தின் நினைவாக கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான திருவிழாவாகும். பழங்காலத்திலிருந்தே கொண்டாடப்படும் இந்த திருவிழா ஒடிசாவின் கடல் வணிகத்தின் செழிப்பின் அடையாளமாகும். இது ஒடிசா மக்களின் வளமான கலாச்சார உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

 

இந்தியாவின் வர்த்தகம், மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்த கடல் ஒரு முக்கிய வழியாகும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். கடலை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களும் இந்தியப் பண்பாட்டை வளப்படுத்தியுள்ளன. ஒடிசா மற்றும் பிற கடலோர மாநிலங்கள் கடற்படை வணிகத்தில் நீண்ட மற்றும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன. வணிகம் மற்றும் வர்த்தகம் தவிர, இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிநாடுகளில் பரப்புவதிலும் அந்த வணிகர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

 

எமது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் வர்த்தகம் முக்கியப் பங்காற்றி வருவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். அளவின் அடிப்படையில் இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 95 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 65 சதவீதமும் கடல் போக்குவரத்தின் மூலம் நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகத் தரத்திற்கு ஏற்ப இந்தியாவின் துறைமுகங்கள் அதிக செயல்திறனுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். எனவே, இந்தியத் துறைமுகங்களின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, அவற்றின் செயல்திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சாகர்மாலா திட்டம் இந்த திசையில் ஒரு பாராட்டத்தக்க படியாகும் என்று அவர் கூறினார். 'செழிப்புக்கான துறைமுகங்கள்', 'முன்னேற்றத்திற்கான துறைமுகங்கள்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

 

கடந்த பத்தாண்டுகளில் பாராதீப் துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் இரு மடங்காக உயர்ந்துள்ளது என்பதைக் கண்டு குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி அடைந்தார். இது கிழக்கு கடற்கரையில் மிகப்பெரிய துறைமுகமாக மாறும். இது உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு - 2023 இல் 'செயல்பாட்டு சிறப்புக்கான துறைமுக விருதையும்' பெற்றது. இன்று திறக்கப்பட்ட பலவகை பொருள்போக்குவரத்துப் பூங்கா வர்த்தகத்தின் வெளிப்படையான வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கப்பல் போக்குவரத்து மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு செயல்படுத்தப்பட்ட புதிய நவீன சமிக்ஞை நிலையங்கள் இந்த துறைமுகத்தின் வழியாக வழிசெலுத்தலை மிகவும் பாதுகாப்பானதாகவும் ஒழுங்காகவும் மாற்றும் என்று அவர் கூறினார்.

***

AD/SMB/KRS



(Release ID: 1980251) Visitor Counter : 75