ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும் வேளாண் அமைச்சகமும் இணைந்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கின்றன

Posted On: 24 NOV 2023 3:39PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகமும் வேளாண் அமைச்சகமும் இணைந்து  இயற்கை வேளாண்மையை மேம்படுத்த, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

இந்த முன்முயற்சியின் கீழ், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு தேசிய இயற்கை வேளாண்மை மையம் மூலம் படிப்படியாகப் பயிற்சியளித்து சான்றளிக்கப்படும். 5 நாள் பயிற்சி வகுப்புக்கான பாடத்தொகுப்புகள் தேசிய இயற்கை வேளாண்மை மையமான என்.சி.ஓ.என்.எஃப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் இதுகுறித்து கூறுகையில், இயற்கை விவசாயம் தொடர்பான  பிரதமரின் கனவை நனவாக்குவதற்கு இந்த முன்முயற்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணை இயக்குநர் திரு ராமன் வாத்வா கூறுகையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

சுய உதவிக் குழுக்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த, வேளாண் அமைச்சகமும், ஊரக வளர்ச்சி அமைச்சகமும் அவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளன. இதற்காக, 2023 ஆகஸ்டு 30 அன்று, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .

***

ANU/SMB/PLM/RS/KPG

 



(Release ID: 1979509) Visitor Counter : 78