பிரதமர் அலுவலகம்

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023 இல் பிரதமர் உரை


“2024 பொதுத் தேர்தல் முடிவுகள் தடைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்”

“சுதந்திரத்தின் போது எழுந்த அலை, மக்களிடையே ஆர்வத்தையும், ஒற்றுமை உணர்வையும் கொண்டு வந்தது, பல தடைகளை உடைத்தது”

சந்திரயான் 3-இன் வெற்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது, மேலும் ஒவ்வொரு துறையிலும் முன்னேற அவர்களை ஊக்குவிக்கிறது.

“இன்று, ஒவ்வொரு இந்தியரும் தன்னம்பிக்கையில் திளைக்கிறார்கள்”

“மக்கள் வங்கிக் கணக்குகள், ஏழைகளிடையே உள்ள மனத் தடைகளை உடைத்து, அவர்களின் பெருமையையும், சுயமரியாதையையும் புதுப்பிக்கும் ஊடகமாக மாறியது”

“அரசு, வாழ்க்கையை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், வறுமையை வெல்லவும் ஏழைகளுக்கு உதவியது”

“சாமானிய குடிமக்கள் இன்று அதிகாரம் பெற்றவர்களாகவும், ஊக்குவிக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள்”

“இன்றைய இந்தியாவின் வளர்ச்சியின் வேகமும், அளவும் அதன் வெற்றியின் அடையாளம்”

“ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்தது, முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் வழிவகுத்தது”

புத்தொழில், விளையாட்டு, விண்வெளி அல்லது தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், நடுத்தர வர்க்கம

Posted On: 04 NOV 2023 10:47PM by PIB Chennai

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிஇல் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023க்கு தன்னை அழைத்ததற்காக ஹெச்.டி குழுமத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்த தலைமைத்துவ உச்சிமாநாட்டின் கருப்பொருள்களுடன் இந்தியா முன்னோக்கிச் செல்வதற்கான செய்தியை ஹெச்.டி குழுமம் எவ்வாறு எப்போதும் பரப்பி வருகிறது என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். 2014-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்தியாவை மறுவடிவமைத்தல்’ என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளை அவர் நினைவு கூர்ந்தார். மிகப்பெரிய மாற்றங்கள் வரவிருப்பதாகவும், இந்தியா மறுவடிவமைக்கப்படும் என்றும் குழு உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார். 2019-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு இன்னும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் நிறுவப்பட்டபோது ‘சிறந்த எதிர்காலத்திற்கான உரையாடல்கள்’ என்ற கருப்பொருள் வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். இப்போது 2023-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநாட்டின் கருப்பொருளான ‘தடைகளை உடைத்தல்’ மற்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசு அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி பெறும் என்ற அடிப்படை செய்தியையும் திரு மோடி எடுத்துரைத்தார். “2024 பொதுத் தேர்தல் முடிவுகள் தடைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” என்று திரு மோடி குறிப்பிட்டார்.   

 

‘இந்தியாவை மறுவடிவமைப்பதில்’ இருந்து ‘தடைகளுக்கு அப்பால்’ முன்னேறும் இந்தியாவின் பயணம், நாட்டின் வரவிருக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த அடித்தளத்தின் அடிப்படையில் ஒரு வளர்ந்த, மகத்தான மற்றும் பணக்கார இந்தியா கட்டமைக்கப்படும் என்று கூறிய அவர், இந்தியா நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல தடைகளைக் குறிப்பிட்டார்.  இந்திய சுதந்திர இயக்கத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, அந்த நேரத்தில் எழுந்த அலையும், மக்களிடையேயான ஒற்றுமை உணர்வும் இதுபோன்ற பல தடைகளை உடைத்தது என்று கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகும் இதே வேகம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

2014-க்குப் பிறகு, இந்தத் தடைகளை உடைக்க பாரதம் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். நாங்கள் பல தடைகளைக் கடந்துவிட்டோம், இப்போது தடைகளைத் தாண்டிச் செல்வது பற்றி பேசுகிறோம். இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் அந்தப் பகுதியை இன்று இந்தியா அடைந்துள்ளது. அனைத்துத் தடைகளையும் தகர்த்து டிஜிட்டல் பரிவர்த்தனையில் இன்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. செல்பேசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது, புத்தொழில் நிறுவனங்களின் சூழலியலில் உலகின் முதல் 3 நாடுகளில் வலுவாக நிற்பதுடன், திறமையான நபர்களின் தொகுப்பை உருவாக்குகிறது” என்று அவர் தெரிவித்தார். இன்று, ஜி20 உச்சிமாநாடு போன்ற உலகளாவிய நிகழ்வுகளில் இந்தியா ஒவ்வொரு தடையையும் உடைத்து வருகிறது.

 

எழுத்தாளரும், அரசியல்வாதியுமான அல்லாமா இக்பாலின் ‘சீதாரோன் கே ஆகே ஜஹான் அவுர் பி ஹைன்’ என்ற கஸலின் ஒரு வரியை வாசித்த பிரதமர், இந்தியா இத்துடன் நிற்கப் போவதில்லை என்று கூறினார்.

 

கடந்த அரசுகளின் சாதாரண அணுகுமுறை குறித்து விமர்சனங்கள் மற்றும் கேலிகளுக்கு வழிவகுத்த மனநிலையும், நாட்டின் மிகப்பெரிய தடைகளாக இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நேரம் தவறாமை, ஊழல் மற்றும் அரசின் கீழ்நிலை முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், சில சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் மனத் தடைகளை உடைக்க ஊக்குவிக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். மகாத்மா காந்தி தொடங்கிய தண்டி யாத்திரை எவ்வாறு தேசத்திற்கு உத்வேகம் அளித்தது மற்றும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தின் சுடர்களை எவ்வாறு ஏற்றியது என்பதை அவர் குறிப்பிட்டார். சந்திரயான் 3 இன் வெற்றி, ஒவ்வொரு குடிமகனிடமும் பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்றும், ஒவ்வொரு துறையிலும் முன்னேற அவர்களை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். “இன்று, ஒவ்வொரு இந்தியரும் தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளனர்” என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை, கழிவறைகள் மற்றும் சுகாதாரம் குறித்த பிரச்சினைகளை பிரதமரே தனது சுதந்திர தின உரையின் போது செங்கோட்டையில் இருந்து எழுப்பியதை அவர் நினைவு கூர்ந்தார். “தூய்மை என்பது இப்போது ஒரு பொது இயக்கமாக மாறிவிட்டது” என்று திரு மோடி மேலும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் கதர் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

 

மக்கள் வங்கிக் கணக்குகள் ஏழைகளிடையே உள்ள மனத் தடைகளை உடைத்து அவர்களின் பெருமையையும், சுயமரியாதையையும் புதுப்பிக்கும் ஊடகமாக மாறியுள்ளன என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாக ரூபே அட்டைகளின் பரவலான பயன்பாடு குறித்தும் அவர் குறிப்பிட்டார். “ஏசி அறைகளில் அமர்ந்து, எண்கள் மற்றும் கதைகளால் இயக்கப்படுபவர்களால் ஏழைகளின் உளவியல் அதிகாரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது” என்று பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாத செயல்களின் போது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான இந்தியாவின் வளர்ந்து வரும் திறன், காலநிலை நடவடிக்கை தீர்மானங்களை வழிநடத்துதல் மற்றும் காலக்கெடுவுக்கு முன்னர் விரும்பிய முடிவுகளை அடைவது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சிறப்பான செயல்திறனை எடுத்துரைத்த பிரதமர், இந்தச் சாதனைக்கு வித்திட்ட மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டினார். 

 

“இந்தியாவில் திறன்கள் மற்றும் வளங்களுக்கு பஞ்சமில்லை” என்று பிரதமர் கூறினார். வறுமையின் உண்மையான தடையை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, அதைக் கோஷங்களால் எதிர்த்துப் போராட முடியாது, ஆனால் தீர்வுகள், கொள்கைகள் மற்றும் நோக்கங்களுடன் போராட வேண்டும் என்று கூறினார். ஏழைகளை சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ முன்னேற வைக்காத கடந்த அரசுகளின் சிந்தனைகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். அடிப்படை வசதிகளின் உதவியுடன் ஏழைகள் வறுமையை வெல்லும் திறனைக் கொண்டவர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது, மத்திய அரசின் மிகப்பெரிய முன்னுரிமை என்று கூறினார். “அரசு வாழ்க்கையை மாற்றியது மட்டுமல்லாமல், வறுமையை வெல்லவும் ஏழைகளுக்கு உதவியுள்ளது” என்று கூறிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவித்தார். நாட்டில் 13 கோடி மக்கள் வெற்றிகரமாக வறுமையின் தடையை உடைத்து புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர் என்று அவர் கூறினார்.

 

விளையாட்டு, அறிவியல், அரசியல் அல்லது பத்ம விருதுகள் எதுவாக இருந்தாலும் சாமானிய மக்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட வட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே வெற்றி பெறுவது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார். சாமானிய குடிமக்கள் இன்று அதிகாரம் பெற்றவர்களாகவும், ஊக்குவிக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள் என்பதை எடுத்துரைத்த அவர், அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டினார்.

 

நாட்டில் நவீன உள்கட்டமைப்பின் தடையை இந்தியா சமாளிப்பது குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர், உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு இயக்கம் மேற்கொள்ளப்படுவதை எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படையில் இந்தியாவின் வேகம் மற்றும் அளவை எடுத்துக்காட்டுவதற்காக, 2013-14 ஆம் ஆண்டில் 12 கி.மீ ஆக இருந்த நெடுஞ்சாலை கட்டுமானம், 2022-23 ஆம் ஆண்டில் 30 கி.மீ ஆக உயர்த்தப்பட்டதையும், 2014-ஆம் ஆண்டில் 5 நகரங்களிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 20 நகரங்களுக்கு மெட்ரோ இணைப்பை விரிவுப்படுத்தியதையும், 2014-ஆம் ஆண்டில் 70 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை இன்று கிட்டத்தட்ட 150 ஆக உயர்த்தப்பட்டிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். இதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சியின் வேகம் மற்றும் அளவு. இது இந்தியாவின் வெற்றியின் அடையாளம்” என்று அவர் மேலும் கூறினார். 

 

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறந்தன. வங்கி நெருக்கடி, ஜி.எஸ்.டி. அமலாக்கம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய காலங்களில், மக்களுக்கு நீண்ட கால பலன்களை அளிக்கும் கொள்கைகள் தேர்வு செய்யப்பட்டன.

 

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நாரி சக்தி வந்தன் அதினியம் மற்றொரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். பல தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த மசோதா ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்று தோன்றியது, இப்போது நனவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

 

அரசியல் லாபங்களுக்காக முந்தைய அரசுகளால் பல பிரச்சினைகள் மிகைப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ய முடியாது என்று அனைவரையும் நம்ப வைக்க ஒரு உளவியல் அழுத்தம் உருவாக்கப்பட்டது என்று கூறினார். அதன் ரத்து, முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் வழிவகுத்துள்ளது என்று அவர் தொடர்ந்து கூறினார். “லால் சவுக்கின் படங்கள் ஜம்மு காஷ்மீர் எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. இன்று, யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து, சுற்றுலா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

 

ஊடகத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர், முக்கியச் செய்திகளின் முக்கியத்துவத்தையும், 2014 முதல் அதன் மாற்றத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார். 2013-ஆம் ஆண்டில் கடுமையான பொருளாதார நிலைமைகள் நடுத்தர வர்க்கத்தை பாதித்தது குறித்து தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளின் எதிர்மறையான தலைப்புகளை பிரதமர்  சுட்டிக் காட்டினார். ஆனால் இன்று, புத்தொழில், விளையாட்டு, விண்வெளி அல்லது தொழில்நுட்பம் என இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நடுத்தர வர்க்கம் வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் கூறினார். 2023- ஆம் ஆண்டில் 7.5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், இது 2013-14 ஆம் ஆண்டில் 4 கோடியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2014- ஆம் ஆண்டில் ரூ .4.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்த சராசரி வருமானம் 2023-ஆம் ஆண்டில் ரூ .13 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், இதன் விளைவாக, லட்சக்கணக்கான மக்கள் குறைந்த வருமான குழுக்களில் இருந்து உயர் வருவாய் பிரிவினருக்கு மாறி வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

 

வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றை இந்த மிகப்பெரிய பொருளாதார சுழற்சியின் இரண்டு முக்கிய காரணிகளாக பிரதமர் கருதினார். வறுமையில் இருந்து மீண்டு வருபவர்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர், நாட்டின் நுகர்வு வளர்ச்சிக்கு வேகம் கொடுக்கின்றனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்று நடுத்தர வர்க்கம் தனது வருமானத்தை அதிகரித்து வருகிறது, அதாவது குறைந்து வரும் வறுமை விகிதம் நடுத்தர வர்க்கத்திற்கும் பயனளிக்கிறது.

 

உரையை நிறைவு செய்த பிரதமர், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அமிர்த காலத்தில் நிறைவேற்ற இந்தியா செயல்பட்டு வருவதை வலியுறுத்தினார். ஒவ்வொரு தடையையும் இந்தியா வெற்றிகரமாக கடக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “இன்று, மிகுந்த ஏழ்மையானவர்கள் முதல் உலகின் பணக்காரர்கள் வரை, இது இந்தியாவிற்கான தருணம் என்று நம்பத் தொடங்கியுள்ளனர்”, என்று பிரதமர் கூறினார். ஒவ்வொரு இந்தியரின் மிகப்பெரிய பலம், தன்னம்பிக்கை என்று அவர் குறிப்பிட்டார். “அதன் வலிமையால், நாம் எந்தத் தடையையும் கடக்க முடியும்”, என்று அவர் கூறினார். 2047-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு, வளர்ந்த நாடு, அடுத்து என்ன என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி அவர் உரையை நிறைவு செய்தார்.

 

****  

PKV/RB/DL



(Release ID: 1974804) Visitor Counter : 86