பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரூ.12,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜபல்பூரில் 'வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

வீராங்கனா ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இந்தூரில் கட்டப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமர் திறந்து வைத்தார்
மாண்ட்லா, ஜபல்பூர் மற்றும் திண்டோரி மாவட்டங்களில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்- சியோனி மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்ட திட்டப் பணிகளை அர்ப்பணித்தார்

மத்தியப்பிரதேசத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை அர்ப்பணித்தார்

ரூ.1850 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

விஜய்பூர் - அவுரையன் - புல்பூர் குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை அர்ப்பணித்தார்
மும்பை நாக்பூர் ஜார்சுகுடா குழாய்வழித் திட்டத்தின் நாக்பூர் ஜபல்பூர் பிரிவுக்கு (317 கி.மீ) அடிக்கல் நாட்டினார் - ஜபல்பூரி

Posted On: 05 OCT 2023 6:10PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ரூ.12,600 கோடி மதிப்பிலான சாலை, ரயில், எரிவாயு குழாய், வீட்டுவசதி மற்றும் தூய குடிநீர் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜபல்பூரில் 'வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

இந்தூரில் இலகுரக வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட வீடுகளை அவர் திறந்து வைத்தார். மாண்ட்லா, ஜபல்பூர் மற்றும் திண்டோரி மாவட்டங்களில் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  சியோனி மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மத்தியப் பிரதேசத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4800 கோடிக்கு மதிப்புள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.1850 கோடி மதிப்புள்ள ரயில் திட்டங்கள், விஜய்பூர் - அவுரையன் - புல்பூர் குழாய்வழி எரிவாயுத் திட்டம் மற்றும் ஜபல்பூரில் ஒரு புதிய எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். மும்பை – நாக்பூர் - ஜார்சுகுடா குழாய்வழித் திட்டத்தின் நாக்பூர்- ஜபல்பூர் பிரிவுக்கு (317 கி.மீ) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், வீராங்கனா ராணி துர்காவதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நர்மதா அன்னையின் புண்ணிய பூமிக்கு தலைவணங்கி, ஜபல்பூரை முற்றிலும் புதிய வடிவத்தில் பார்ப்பதாகக் கூறினார். ஏனெனில் இந்த நகரம் உற்சாகத்தால் நிரம்பியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  இது நகரத்தின் உணர்வை பிரதிபலிப்பதாக அவர் கூறினார். வீராங்கனா ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நாளை நாடு உற்சாகமாக கொண்டாடி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ராணி துர்காவதி கவுரவ் யாத்திரையின் முடிவில், அவரது ஜெயந்தியை தேசிய அளவில் கொண்டாட அழைப்பு விடுத்ததாகவும், இன்றைய கூட்டம் அதே உணர்வைக் குறிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் மூதாதையர்களுக்கு நமது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம் என்று பிரதமர் கூறினார். வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டம் குறித்து பேசிய பிரதமர், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த இடத்தைப் பார்வையிட விரும்புவார்கள் என்று கூறினார். இது ஒரு புனித யாத்திரையாக மாறும் என்றும்  அவர் நம்பிக்கை தெரிவித்தார். ராணி துர்காவதியின் வாழ்க்கை பிறர் நலனுக்காக வாழ கற்றுக்கொடுத்துள்ளது என்றும் தாய்நாட்டிற்காக ஏதாவது செய்ய நம்மை ஊக்குவிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்திற்கும், மத்திய பிரதேச மக்களுக்கும், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மண்ணின் மூதாதையர்களுக்கு இடம் வழங்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், இந்த மண்ணின் நாயகர்கள் மறக்கப்பட்டதாகக் கூறினார்.

 

சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர், இது விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று கூறினார். இப்பகுதியில் புதிய தொழிற்சாலைகளின் வருகையுடன், இளைஞர்கள் இப்போது இங்கே வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

 

தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு சமையலறையில் புகையில்லா சூழலை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு ஆராய்ச்சி ஆய்வை மேற்கோள் காட்டி, புகையை உமிழும் அடுப்பு 24 மணி நேரத்தில் 400 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று பிரதமர் தெரிவித்தார். பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க முந்தைய அரசு முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

 

உஜ்வாலா திட்டம் குறித்து பேசிய பிரதமர், முன்பு எரிவாயு இணைப்பு பெறுவதில் இருந்த சிரமங்களை நினைவு கூர்ந்தார். ரக்ஷா பந்தன் பண்டிகை காலத்தில் தற்போதைய அரசாங்கத்தால் எரிவாயு விலை குறைக்கப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார். இது உஜ்வாலா பயனாளிகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை ரூ.400 குறைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை விலையை மேலும் ரூ.100 குறைக்கும் அரசின் முடிவு குறித்து எடுத்துரைத்தார். கடந்த சில வாரங்களில், உஜ்வாலா பயனாளிகளுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். மத்தியப் பிரதேச  மாநிலத்தில் எரிவாயு குழாய்கள் பதிப்பது குறித்து குறிப்பிட்ட பிரதமர், குழாய்கள் மூலம் மலிவான விலையில் சமையல் எரிவாயுவை வழங்குவதில் மத்திய அரசு பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாகக் கூறினார்.

 

முந்தைய அரசுகளின் ஊழல்கள் குறித்துப் பேசிய பிரதமர், ஏழைகளுக்கான நிதி ஊழல்வாதிகளின் கஜானாவை நிரப்பியதாகத் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல்வேறு முறைகேடுகள் தலைப்புச் செய்திகளா இடம் பெற்றதாகவும் அவற்றை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளுமாறும் பிரதமர் கூறினார்.

 

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போதைய அரசு ஊழல்களை களை எடுப்பதற்கான 'தூய்மை' இயக்கத்தை மேற்கொண்டதாக பிரதமர் கூறினார். ஒருபோதும் இல்லாத வகையில் 11 கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏழைகளுக்கான நிதியை யாரும் கொள்ளையடிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.. ஜன்தன், ஆதார், மொபைல் ஆகிய மூன்றும் முறைகேடுகளை ஒழித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று சக்திகளின் காரணமாக, ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் நிதி தவறானவர்களின் கைகளுக்குச் செல்லாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். உஜ்வாலா சிலிண்டர்களை வெறும் ரூ.500-க்கு வழங்க மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதாகவும், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் நாட்டின் சுமார் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச சிகிச்சைக்கு ரூ.70,000 கோடி செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு மலிவான விலையில் யூரியா கிடைப்பதை உறுதி செய்ய ரூ.8 லட்சம் கோடி செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்க ரூ.4 லட்சம் கோடி செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார். இந்தூரில் உள்ள ஏழைக் குடும்பங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 1,000 நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மத்தியப் பிரதேசத்திற்கு இது ஒரு முக்கியமான காலம் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், வளர்ச்சியில் எந்தவொரு தடையும் கடந்த 20 ஆண்டுளில் மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பை சீர்குலைத்துவிடும் என்று தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த மத்தியப் பிரதேசத்தைக் காணும் வகையில்  தங்கள் குழந்தைகள் வளர்வதை உறுதி செய்வது 25 வயதுக்கு உட்பட்டவர்களின் பொறுப்பு என்று பிரதமர் கூறினார். தற்போதைய அரசு கடந்த சில ஆண்டுகளில் விவசாய ஏற்றுமதியில் மத்தியப் பிரதேசத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று தெரிவித்த அவர், தொழில்துறை வளர்ச்சியில் இந்த மாநிலம் முன்னோடியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் செயல்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்பு தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் 4 தொழிற்சாலைகள் ஜபல்பூரில் அமைக்கப்படுவது இத்துறையில்ந்த நகரம் பெரிய பங்களிப்பை வழங்க வாய்ப்பளிக்கும் என்றார். மத்திய அரசு ராணுவத்திற்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், இந்தியாவின் பாதுகாப்பு பொருட்களுக்கான தேவை உலகில் பிறநாடுகளில் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் மத்தியப் பிரதேசமும் நிறைய பயனடையப் போகிறது என்று அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்பட உள்ளன என்று அவர் கூறினார்.

 

இன்று இந்தியாவின் நம்பிக்கை புதிய உச்சத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். விளையாட்டு மைதானம் முதல் வயல்கள் மற்றும் களஞ்சியங்கள் வரை இந்தியாவின் கொடி பறப்பதாக பிரதமர் கூறினார். நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் அற்புதமான செயல்திறனை எடுத்துரைத்த அவர், இது இந்தியாவுக்கு சொந்தமான காலம்  என்று இந்தியாவின் ஒவ்வொரு இளைஞர்களும் உணர்கிறார்கள் என்றார். இளைஞர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஜி20 போன்ற ஒரு பெரிய உலக நிகழ்வை ஏற்பாடு செய்தது குறித்துப் பேசிய பிரதமர் இந்தியாவின் சந்திரயான் வெற்றியையும் குறிப்பிட்டார். உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற மந்திரம் இதுபோன்ற வெற்றிகளுடன் வெகுதொலைவில் எதிரொலிக்கத் தொடங்குவதாக அவர் தெரிவித்தார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.5 கோடிக்கு மேல் கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். சுதேசி உணர்வு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் உணர்வு என்றும் தற்போது இது எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். புத்தொழில் நிறுவன உலகில் வெற்றி பெறுவதில் இந்திய இளைஞர்களின் பங்கு குறித்தும் அவர் பேசினார். அக்டோபர் 1 ஆம் தேதி நாடு தொடங்கிய தூய்மை இயக்கத்தில், சுமார் 9 கோடி மக்களின் பங்கேற்புடன் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைத் திட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். தூய்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக கூறி அம்மாநில மக்களை அவர் பாராட்டினார்.

 

நாட்டின் சாதனைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில அரசியல் கட்சிகள் இந்தியாவை இழிவுபடுத்தும் அணுகுமுறையை மேற்கொள்வதாக பிரதமர் கூறினார். டிஜிட்டல் இந்தியா இயக்கம் மற்றும் இந்தியாவின் கொவிட் தடுப்பூசி தொடர்பாக அத்தகைய கட்சிகள் எழுப்பிய கேள்விகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற அரசியல் கட்சிகள் நாட்டின் எதிரிகளின் வார்த்தைகளை நம்பி, இந்திய ராணுவத்தை கேள்வி கேட்கும் அளவுக்கு செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு அம்சமாக மேற்கொள்ளப்படும்மிர்த நீர்நிலைகளின் உருவாக்கம் குறித்த விமர்சனங்களையும் பிரதமர் கூறினார்.

 

சுதந்திரம் முதல் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமை வரை இந்தியாவின் பழங்குடி சமூகத்தின் பங்கை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். பழங்குடி சமூகத்தின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி பட்ஜெட்டை ஒதுக்கியது வாஜ்பாய் அரசுதான் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். கடந்த 9 ஆண்டுகளில் இதற்கான பட்ஜெட் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியா தனது முதல் பெண் பழங்குடி குடியரசுத்தலைவரைப் பெற்றிருப்பதையும், பிர்சா முண்டா பிரபுவின் பிறந்த நாள் பழங்குடியின கௌ தினம் என்று கொண்டாடப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார். நாட்டின் மிக நவீன ரயில் நிலையங்களில் ஒன்றிற்கு ராணி கமலாபதியின் பெயர் சூட்டப்பட்டது என்றும், படல்பானி நிலையத்திற்கு ஜன்நாயக் தந்தியாபில் என்று மறுபெயரிடப்பட்டது என்றும் அவர் கூறினார். கோண்டு சமூகத்தின் உத்வேகமாக இருந்த ராணி துர்காவதியின் பெயரில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான நினைவுச் சின்னம் திட்டத்தையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். வளமான கோண்டு பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் கோண்டு கலாச்சாரம், வரலாறு மற்றும் கலைகளை வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். உலகத் தலைவர்களுக்கு கோண்டு ஓவியங்களை தாம் பரிசளித்ததையும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருடன் தொடர்புடைய மாவ் உள்ளிட்ட இடங்களை பஞ்ச தீர்த்தமாக மாற்றியது தற்போதைய அரசுதான் என்று பிரதமர் கூறினார். சில வாரங்களுக்கு முன்பு சாகரில் சந்த் ரவிதாசின் நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். இது சமூக நல்லிணக்கம் மற்றும் பாரம்பரியத்திற்கான அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

சுயநலத்தையும் ஊழலையும் வளர்க்கும் கட்சிகள் பழங்குடி சமூகத்தின் வளங்களை சூறையாடியுள்ளன என்று அவர் தெரிவித்தார். 2014–ம் ஆண்டுக்கு முன்னர், 8 முதல் 10 வரை  வன விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ளவை குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இன்று சுமார் 90 வன விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

கடந்த காலங்களில், பழங்குடியினர் மற்றும் சிறு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கோடோ-குட்கி போன்ற சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று பிரதமர் கூறினார். தற்போது ஜி20 விருந்தினர்களுக்கான உணவு தயாரிப்புகள் கோடோ-குட்கியிலிருந்து தயாரிக்கப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். தற்போதைய அரசு கோடோ-குட்கியை நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு சிறுதானிய வடிவத்தில் வழங்க விரும்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

இரட்டை இன்ஜின் அரசு அடித்தட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார். ஏழைகளின் ஆரோக்கியத்திற்கு சுத்தமான குடிநீர் விநியோகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், சுமார் 1600 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இன்றைய திட்டங்களைக் குறிப்பிட்டார். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவது குறித்தும் பிரதமர் பேசினார். ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

 

வளர்ச்சியில் மத்தியப் பிரதேசத்தை முதலிடத்திற்கு கொண்டு செல்வதற்கான உத்தரவாதத்தை தாம் க்களுக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார். மத்தியப்பிரதேசத்தின் மிகப் பெரிய திறன் இந்தத் தீர்மானத்தை வலுப்படுத்தும் என்று தாம் நம்புவதாகக் கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் சி.படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாளை மத்திய அரசு வெகுவிமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது. இதுபற்றி 2023 ஜூலை மாதம் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பயணத்தின் போது பிரதமர் அறிவித்தார்செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின விழா உரையிலும் அவர் இதனை வலியுறுத்தினார்இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம் மற்றும் பூந்தோட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.


ஜபல்பூரில் ரூ.100 கோடி செலவில்  21 ஏக்கர் பரப்பளவில் 'வீராங்கனா ராணி துர்காவதி’ நினைவிடம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதில் ராணி துர்காவதியின் 52 அடி உயர வெண்கல சிலை நிறுவப்படும். ராணி துர்காவதியின் வீரம், துணிவுள்பட கோண்ட்வானா பிராந்தியத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டும் ஓர் அற்புதமான அருங்காட்சியகம் இங்கு  அமைக்கப்படும். இது கோண்டு மக்கள் மற்றும் பிற பழங்குடி சமூகங்களின் உணவு, கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை எடுத்துக்காட்டுவதாக  இருக்கும். 'வீராங்கனா ராணி துர்காவதி நினைவிடம்  மற்றும் பூந்தோட்ட' வளாகத்தில் மருத்துவ தாவரங்களுக்கான தோட்டம், கற்றாழைத் தோட்டம், பாறைத் தோட்டம் உள்ளிட்டவை இடம்பெறும்.

 

ராணி துர்காவதி 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோண்ட்வானா ராணியாக இருந்தார். முகலாயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்குப் போராடிய துணிச்சலான, அச்சமற்ற, தைரியமான போர் வீராங்கனையாக அவர் நினைவுகூரப்படுகிறார்.

 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில்  நவீன ரக வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை வலுப்பெறும்.  பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.128 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த திட்டம் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனளிக்கும். அனைத்து அடிப்படை வசதிகளுடன், குறைந்த கட்டுமான நேரத்தில் தரமான வீடுகளைக் கட்டுவதற்கு 'ப்ரீ-இன்ஜினியரிங் செய்யப்பட்ட எஃகு கட்டமைப்பு ப்ரீஃபாப்ரிகேட்டட் சாண்ட்விச் பேனல் அமைப்புமுறைஎன்ற புதுமையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாக, மாண்ட்லா, ஜபல்பூர் மற்றும் திண்டோரி மாவட்டங்களில் ரூ.2350 கோடி மதிப்புள்ள ஜல் ஜீவன் இயக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சியோனி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ஜல் ஜீவன் இயக்க திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். மாநிலத்தின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்கள், மத்திய பிரதேசத்தின் சுமார் 1575 கிராமங்களுக்கு பயனளிக்கும்.

மத்தியப்பிரதேசத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4800 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல்  நாட்டிநிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை எண் 346-ன் ஜார்கேடா- பெராசியா- தோல்கேடியை இணைக்கும் சாலையின்  மேம்பாட்டு பணிகள்தேசிய நெடுஞ்சாலை 543 இன் பாலகாட் - கோண்டியா பிரிவின் நான்கு வழிச்சாலை; ருதி மற்றும் தேஷ்கானை இணைக்கும் கண்ட்வா புறவழிச்சாலையின் நான்கு பாதைகள்; தேசிய நெடுஞ்சாலை 47 இன் தெமாகான் முதல் சிச்சோலி பிரிவு வரை நான்கு வழித்தடம்; போரேகானில் இருந்து ஷாபூரை இணைக்கும் நான்கு வழிச்சாலை; மற்றும் ஷாபூரை முக்தைநகருடன் இணைக்கும் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 347 சி-யின் கல்காட்டை சர்வர்டேவ்லாவுடன் இணைக்கும் சாலையை மேம்படுத்தும் பணியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

ரூ.1850 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கட்னி - விஜயசோட்டா (102 கி.மீ) மற்றும் மார்வாஸ்கிராம் - சிங்ரௌலி (78.50 கி.மீ) ஆகியவற்றை இணைக்கும் ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது இதில் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களும் கட்னி - சிங்ரௌலி பிரிவை இணைக்கும் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டங்கள் மத்திய பிரதேசத்தில் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும், இது மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு பயனளிக்கும்.

விஜய்பூர் - அவுரையன் - புல்பூர் பைப்லைன் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். 352 கி.மீ நீளமுள்ள இந்தக் குழாய் சுமார் ரூ.1750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மும்பை நாக்பூர் ஜார்சுகுடா பைப்லைன் திட்டத்தின் நாக்பூர் ஜபல்பூர் பிரிவுக்கும் (317 கி.மீ) பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். ரூ.1100 கோடி மதிப்பில் இந்த திட்டம் கட்டப்பட உள்ளது. எரிவாயுக் குழாய் திட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு சுத்தமான மற்றும் மலிவு விலையில் இயற்கை எரிவாயுவை வழங்கும், மேலும் சுற்றுச்சூழலில் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான ஒரு  முன்முயற்சியாக இருக்கும். ஜபல்பூரில் சுமார் ரூ.147 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாட்டிலிங் ஆலையையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

 

(Release ID: 1964736)

ANU/SM/PLM/KPG/KRS



(Release ID: 1964820) Visitor Counter : 128