விவசாயத்துறை அமைச்சகம்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் 'விவசாயிகளின் உரிமைகள் குறித்த முதல் உலகளாவிய கருத்தரங்கை இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 12 SEP 2023 3:34PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் நிறுவனத்தின் மாநாட்டு மையத்தில் இன்று  (12.09.2023) நடைபெற்ற விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முதல் 'விவசாயிகளின் உரிமைகள் குறித்த உலகளாவிய கருத்தரங்கை' தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய திருமதி திரௌபதி முர்மு, இந்த  மதிப்புமிக்க கூட்டத்தை நடத்துவதற்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்காக ஏற்பாட்டாளர்களை பாராட்டினார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் ஆழமாக வேரூன்றிய தத்துவமான "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரு குடும்பம்) என்ற அடிப்படையில் இந்த கருத்தரங்கில் பங்கேற்கும் பிரதிநிதிகளை வரவேற்பதாக அவர் கூறினார். விவசாயிகளின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் உரிமைகள் ஆணையம் (பிபிவிஎஃப்ஆர்) ஆணையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்), ஐசிஏஆர்-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏஆர்ஐ) மற்றும் ஐசிஏஆர்-தேசிய தாவர மரபணு வளங்கள் தாங்கள் அமைப்பு (என்பிபிஜிஆர்) ஆகியவை இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார். வேளாண் பல்லுயிர் பாதுகாப்பு என்பது ஒரு கடமை மட்டுமல்ல என்றும் அது  இன்றியமையாத தேவையாகும் என்றும் அவர் கூறினார். நமது விவசாயிகளின் முயற்சியால் நமது நாட்டின் விவசாய பாரம்பரியம் செழித்து வளர்ந்துள்ளது என்று திரு நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டார்.

 

2001 ஆம் ஆண்டின் தாவர ரகங்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (பிபிவிஎஃப்ஆர்) மூலம் தாவர ரகப் பதிவில் விவசாயிகளின் உரிமைகளை கொண்டு வந்த உலகின் முதல் நாடு இந்தியா என்று  வேளாண் துறை  செயலாளர் திரு மனோஜ் அஹுஜா தெரிவித்தார். பி.பி.வி.எஃப்.ஆர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் டி.மொஹாபத்ரா வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் ஜி.எஃப்.எஸ்.ஆரின் தோற்றம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கினார்.

 

2023 செப்டம்பர் 12 முதல் 15 வரை  இந்தியா இந்த கருத்தரங்கை நடத்துகிறது.  இதில் உலகெங்கிலும் உள்ள விவசாய அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் உட்பட 59 நாடுகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். புதுமையான அணுகுமுறைகள், பயனுள்ள கொள்கைகள், சிறந்த நடைமுறைகள், அறிவுப்பகிர்வு மற்றும் அனுபவ பகிர்வு குறித்த விவாதங்கள் மூலம் விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதை இந்த கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

AP/ANU/PLM/RS/KRS

(Release ID: 1956591)



(Release ID: 1956719) Visitor Counter : 103