திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

ஜப்பானுக்கு தொழிலாளர்களை அனுப்புவது குறித்து மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தது

Posted On: 26 AUG 2023 1:00PM by PIB Chennai

தொழில்நுட்ப பயிற்சித் திட்டம் மற்றும் குறிப்பிட்ட திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் திறமையான நபர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒரு விரிவான உரையாடலை நடத்துவதற்கும் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதற்கும், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு சிந்தனைப் பயிலரங்கை தில்லியில் ஏற்பாடு செய்தது. இதற்கு திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு அதுல்குமார் திவாரி தலைமை வகித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அனுராக் பூஷண் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.

பணியாளர்களை அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணவும் நிவர்த்தி செய்யவும், அந்தந்த திட்டங்கள் தொடர்பான கள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கண்காணிப்பு நடைமுறைகளை ஆராயவும், தீர்வு சார்ந்த விவாதங்களில் ஈடுபடவும் இந்த அமர்வு ஒரு தளத்தை வழங்கியது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, இந்தியாவை உலகின் திறன் தலைமை இடமாக மாற்றுவதற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதில் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். எதிர்காலத்திற்கான பயனுள்ள செயல்திட்டங்களை உருவாக்க உதவும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கு இது போன்ற பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்வது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அனுராக் பூஷன், ஜப்பானிய சந்தையில், வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒரு நுணுக்கமான அணுகுமுறை மிக முக்கியமானது என்றார். தேவையான மொழித்திறன்களை உருவாக்குதல், வலுவான மொழி பயிற்சி கட்டமைப்புகளை உருவாக்குதல், குடியேற்ற கொள்கைச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் முன்னேற்றங்களை ஏற்று செயல்படுதல் ஆகியவை இளம் தொழிலாளர்களின் திறமையைப் பயன்படுத்த உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

---

Release ID: 1952468

ANU/SM/PLM/KRS



(Release ID: 1952526) Visitor Counter : 109