பிரதமர் அலுவலகம்

ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் உரை


"வெளிப்படைத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக இந்தியா பார்க்கப்படுகிறது"

"கடந்த ஒன்பது ஆண்டுகளில், எங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக இந்தியா ஐந்தாவது பெரிய உலகளாவிய பொருளாதாரமாக மாறியுள்ளது"

"இந்தியா சிவப்பு நாடாவில் இருந்து சிவப்புக் கம்பளத்திற்கு மாறியுள்ளது"

"எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கவல்ல நெகிழ்வான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய மதிப்புத் தொடர்களை நாம் உருவாக்க வேண்டும்"

"வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர்நிலைக் கொள்கைகள்" எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், இணக்க சுமைகளைக் குறைப்பதற்கும் நாடுகளுக்கு உதவும்

"உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட விதிகள் அடிப்படையிலான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலதரப்பு வர்த்தக முறையை இந்தியா நம்புகிறது"

"எங்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.எம்.இ என்றால் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவு"

Posted On: 24 AUG 2023 9:22AM by PIB Chennai

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூருக்கு  வந்திருந்தோரை அன்புடன் வரவேற்றார். இந்தப் பிராந்தியம் அதன் ஆற்றல்மிக்க மற்றும் தொழில்முனைவோருக்குப் பெயர் பெற்றது என்று அவர் கூறினார். வர்த்தகம் என்பது கருத்துக்கள், கலாச்சாரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது, அதே நேரத்தில் வரலாறு முழுவதும் அது மக்களை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "வர்த்தகமும், உலகமயமாக்கலும் கோடிக்கணக்கான  மக்களைத் தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளன" என்று திரு மோடி கூறினார்.

இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை மற்றும் நேர்மறைப் பார்வையை எடுத்துரைத்த பிரதமர், இன்று, இந்தியா வெளிப்படைத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக பார்க்கப்படுகிறது என்றார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக இந்தியா ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "2014 ஆம் ஆண்டில் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்ற பயணத்தை நாங்கள் தொடங்கினோம்" என்று குறிப்பிட்ட பிரதமர், அதிகரித்த போட்டித்தன்மை மற்றும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவை பற்றியும் எடுத்துரைத்தார். இந்தியா தனியாக சரக்குப் போக்குவரத்து வழித்தடங்களை நிறுவியுள்ளது என்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். "நாங்கள் சிவப்பு நாடாவில் இருந்து சிவப்புக் கம்பளத்திற்கு மாறி, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளோம்" என்று திரு மோடி கூறினார். இந்தியாவில் உற்பத்தி, தற்சார்பு இந்தியா போன்ற எங்களின் முன்முயற்சிகள் உற்பத்திக்கு ஊக்கம் அளித்துள்ளன என்று கூறிய அவர், நாட்டின் கொள்கை  நிலைத்தன்மை பற்றி குறிப்பிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

தொற்றுநோய் முதல் புவிசார் அரசியல் பதற்றங்கள் வரை தற்போதைய உலகளாவிய சவால்களை  எடுத்துரைத்த பிரதமர், இது உலகப் பொருளாதாரத்தை சோதித்துள்ளது என்றும், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது ஜி 20 நாடுகள் என்ற முறையில் நமது பொறுப்பு என்றும் கூறினார். எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கவல்ல, நெகிழ்வான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய மதிப்புத் தொடர்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தச் சூழலில், பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், அபாயங்களைக் குறைப்பதற்கும், மீள்திறனை  மேம்படுத்துவதற்கும் உலகளாவிய மதிப்புத் தொடர்களை தொகுப்பதற்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியாவின் முன்மொழிவு முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

"வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தின் மாறிவரும் சக்தி மறுக்க முடியாதது" என்று குறிப்பிட்ட பிரதமர், இணையதள ஒற்றை மறைமுக வரியான ஜிஎஸ்டிக்கு இந்தியா மாறியிருப்பதை எடுத்துக்காட்டினார். இது மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒரே உள்நாட்டு சந்தையை உருவாக்க உதவியிருக்கிறது என்றார். வர்த்தகத் தளவாடங்களை மலிவானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த இணையதள வசதி பற்றியும் அவர் குறிப்பிட்டார். 'டிஜிட்டல் வணிகத்திற்கு வெளிப்படையான இணையதளம்' என்பது பற்றி எடுத்துரைத்த அவர், இது டிஜிட்டல் சந்தைச் சூழலை ஜனநாயகப்படுத்தும் பெரிய மாற்றம் என்றார். ஏற்கனவே யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது பற்றி அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள், மின்னணு வணிகத்தின் பயன்பாடு ஆகியவை சந்தை அணுகலை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். 'வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர்நிலைக் கொள்கைகளை' இந்தக் குழு உருவாக்கி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தக் கொள்கைகள், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் இணக்க சுமைகளைக் குறைப்பதற்கும் நாடுகளுக்கு உதவும் என்று பிரதமர் கூறினார். எல்லை தாண்டிய இ-வர்த்தக வளர்ச்சியின் சவால்களை எடுத்துரைத்த பிரதமர், பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்ய கூட்டாக செயல்படுமாறு அறிவுறுத்தினார். நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு விதிகள் அடிப்படையிலான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலதரப்பு வர்த்தக முறையை இந்தியா நம்புகிறது என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். 12 வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வளரும் நாடுகளின் கவலைகளை இந்தியா ஆதரித்துள்ளது, அங்கு லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எம்.எஸ்.எம்.இ.க்கள் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "எம்.எஸ்.எம்.இ.க்கள் வேலைவாய்ப்பில் 60 முதல் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன" என்றும் பிரதமர் தெரிவித்தார். "எங்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.எம்.இ என்றால் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவு" என்று  பொருளாகும்  என பிரதமர் கூறினார். அரசு இ-சந்தை என்ற இணைய தளத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ.க்களை பொதுக் கொள்முதலில் இந்தியா ஒருங்கிணைத்துள்ளது என்றும், சுற்றுச்சூழலில் 'குறைகள் இல்லை', 'பாதிப்புகள் இல்லை' என்ற நெறிமுறையைப் பின்பற்ற எம்.எஸ்.எம்.இ துறையுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய வர்த்தகம் மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடரில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது இந்திய தலைமைத்துவத்தின் முன்னுரிமையாக உள்ளது என்று அவர் கூறினார். எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு தடையற்ற தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான முன்மொழியப்பட்ட ஜெய்ப்பூர் முன்முயற்சி குறித்து பேசிய பிரதமர், எம்.எஸ்.எம்.இ.க்கள் எதிர்கொள்ளும் சந்தை மற்றும் வணிகம் தொடர்பான தகவல்களுக்கு போதுமான அணுகல் இல்லாத சவாலை இது சரி செய்யும் என்றார். உலகளாவிய வர்த்தக உதவி மையத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று திரு. மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பது ஒரு குடும்பம் என்ற முறையில் ஜி20 உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். உலகளாவிய வர்த்தக அமைப்பு படிப்படியாக மிகவும் பிரதிநிதித்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு மாறுவதை உறுதி செய்வதற்காக பணிக்குழு கூட்டாக முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

ANU/AD/SMB/AG/KPG



(Release ID: 1951644) Visitor Counter : 151