தேர்தல் ஆணையம்

தேர்தல் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பனாமாவும் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 07 JUL 2023 3:59PM by PIB Chennai

தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்புக்கு நிறுவன ரீதியிலான கட்டமைப்பை உருவாக்க இந்தியத் தேர்தல் ஆணையமும், பனாமாவின் தேர்தல் நடுவர் மன்றமும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு இடையே  ஒருங்கிணைப்பை வலப்படுத்துவது மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், பனாமாவின் தேர்தல் நடுவர்மன்ற தலைமை நிர்வாகி திரு ஆல்ஃபிரடோ ஜூன்கா வெண்டேக்கேயுடன் கலந்துரையாடினர். இந்த உரையாடலின் போது, பனாமாவின் முதலாவது துணைத்தலைமை நிர்வாகி  திரு எட்வர்டோ வால்டெஸ் எஸ்கோஃபெரி, இரண்டாவது துணைத் தலைமை நிர்வாகி திரு லூயிஸ் ஏ குவேரா மோரல்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய தலைமைத்தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், உலகம் முழுவதும் உள்ள தேர்தல் அமைப்புகளுடன் ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொள்ளுதல், உலகம் முழுவதும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துதல் என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுதிபாட்டை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த தேர்தல் நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொள்வதோடு, மற்ற நாடுகளில் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்படுவதற்கு உரிய  நிபுணத்துவத்தையும், அனுபவ அறிவையும் பகிர்ந்து கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஏற்கனவே, மெக்சிகோ, பிரேசில், சிலி ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில்,  லத்தீன் அமெரிக்க நாடுகளில் நான்காவதாக தற்போது பனாமாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 31 நாடுகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

***

SM/SMB/RS/KRS



(Release ID: 1938042) Visitor Counter : 120