தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தொழிலாளர் கொள்கை சீர்திருத்தங்கள் குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அளித்து பணியாளர்களின் அதிகாரமளித்தலை உறுதி செய்துள்ளதாக திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்
Posted On:
22 JUN 2023 5:40PM by PIB Chennai
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தொழிலாளர் கொள்கை சீர்திருத்தங்கள் குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அளித்து பணியாளர்களின் அதிகாரமளித்தலை உறுதி செய்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் ஒன்பது ஆண்டுகால சாதனைக் குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, எளிமையாக்கப்படுவதாகத் தெரிவித்தார். அந்தவகையில், 29 வகையான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வாயிலாக தொழிலாளர்களின் அதிகாரமளித்தல் உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
இ-ஷ்ரம் இணையதளத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழில்பிரிவுகளில் ஈடுபட்டுள்ள 28.93 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பல தொழில் பிரிவுகள் இதில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் மூலம் பல்வேறு வகையான வேலைவாய்ப்புத் தொடர்பான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் 1.39 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக்கான உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேசிய வேலைவாய்ப்பு இணையதளம் இ-ஷ்ரம், உத்யம், திறன் இந்தியா ஆகிய இணையதளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக திரு பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டார்.
***
AP/IR/RS/KRS
(Release ID: 1934615)