சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது

Posted On: 13 JUN 2023 2:28PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காக செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், முதியோர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் பின்தங்கிய  பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களையும் முன்முயற்சிகளையும் இந்த அமைச்சகம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

நஷா முக்த் பாரத் அபியான் (என்எமபிஏ) எனப்படும் போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தையும் இந்த அமைச்சகம், செயல்படுத்தி வருகிறது. போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த  இளைஞர்களிடம் இந்த இயக்கத்தின் கருத்துக்கள் சென்றடையவேண்டும் என்பதில்  சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது 372 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் விரிவான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்படுகிறது.

3.22 கோடி இளைஞர்கள் மற்றும் 2.14 கோடி பெண்கள் உட்பட 9.91 கோடி மக்களுக்கு போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து இந்த இயக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3.18 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலமாக, இந்த இயக்கத்தின் கருத்துக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சென்றடைவது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,000-க்கும் மேற்பட்ட மூத்த தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும், மொபைல்செயலி மூலமாகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் என்எமபிஏ இணையதளத்தில் (http://nmba.dosje.gov.in ) இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.  போதைப்பொருள் இல்லாத இந்தியா தொடர்பான தேசிய இணையதள  உறுதிமொழி இயக்கத்தில் 99,595 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1 கோடியே 67 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்பாக, வாழும் கலை அமைப்பு, பிரம்ம குமாரிகள் சங்கம் போன்ற ஆன்மீக / சமூக சேவை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய போதை மறுவாழ்வு தொலைபேசி எண்ணான  '14446' என்ற கட்டணமில்லா எண் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இதுவரை இந்த எண்ணுக்கு 2.8 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன.

2020 ஆம் ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின்னர், போதைப்பொருட்களில் இருந்து விடுபடுவது தொடர்பான ஆலோசனை மற்றும் போதைப்பொருள் மறுவாழ்வு சேவைகளை நாடுபவர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் தீவிரமாக ஏற்படுத்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அனைவரின் ஆதரவுடனும் தீவிரமாக செயல்படும் முனைப்பில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931930

-----------

AP/PLM/RS/GK


(Release ID: 1931989)